”கண்ணா கனியவை நாற்பது’’…. (3)
’’விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
தனிமரத் தோப்பில் திளைப்பு’’….(13)
’’திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
திருந்திட ஏற்பாய் துறவு’’….(14)
’’துறவில் மரமாய், உறவில் கிளையாய்
பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று’’….(15)
’’அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
உகந்த உறவில் உலவும் -புகன்ற
மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
அறைதனில் வாழும் அவன்’’….(16)
’’அவனால் அவனி, அவன்தான் புவனி
அவனை அவனால் கவனி -அவனே
வருவான் குருவாய் அறிவைத் தருவான்
பெருவாய் பரம பதம்’’….(17)
’’பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
சும்மா இருக்க சுகம்’’….(18)….கிரேசி மோகன்….