அந்தத் துறவி அணுகித்தான் அறத்தி(ன்) அருகே அமர்ந்தேன்நான் ! கந்தல் துணியை அணிந்தாலும் கவலை மறக்கத் தெரிந்தேன்நான் ! பொந்தாய் இருக்கும் மனத்திற்குள் புதுமை வழிய இருந்தேன்நான் ! வந்த வழியை மறக்காமல் வருமெ(ன்) உறவை அணைத்தேன்நான் !
அணுவைப் பிளக்கு(ம்) அவசரத்தில் அகத்தி(ல்) அழுக்கை அடைத்தேன்நான் ! அணுவில் அணுவாய் இருப்பவனை அறிய அவரைப் பணிந்தேன்நான் ! கணுவே கரும்பிற் கழகென்று கையில் சுமந்து திரிந்தோனை கணுவைப் பிளந்து சுவைகண்டு கணத்தில் மனத்தை எரியென்றார் ! (26.06.2016)
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.