படக்கவிதைப் போட்டி 69 – இன் முடிவுகள்

காயத்ரி பூபதி:

13493059_1033652313355634_1587480765_n

 

 

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் இருப்பவர்கள் மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்கள். இவர்கள் கட்டிய வீட்டிற்கு கவிஞர்கள் தீட்டிய பா வண்ணத்தைப் பார்ப்போம். இனி,

சிறுபிள்ளை பருவத்தில் குழந்தைகள் மனம் விரும்பியவாறு விளையாடுதற்கு பெற்றோர்கள் தடையாக இருக்கக் கூடாது. நல்ல எண்ணத்தை விளையாட்டோடு விளையாட்டாக எடுத்துக் கூறினால், அது அவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்று அறுவுறுத்துகின்றார் கவிஞர் செண்பக ஜெகதீசன்.

விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனப்பயிற்சியும் கூட. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவதொரு வாழ்க்கைக்கேற்ற பாடம் இருக்கும். அந்த வகையில் எவ்வளவு தான் அலைகள் வந்து அலைக்கழித்தாலும் சளைக்காமல் மணலில் வீட்டைக் கட்டும் சிறுவர்களின் விளையாட்டில் கடமையுணர்வும், விடாமுயற்சியும் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன். கவிஞருக்கு பாராட்டுகள்.

நகரமயமான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் ஓடி விளையாடுதற்கு இடமேது? ரியல் எஸ்டேட்காரர்களைத் தாண்டி தனியாக வீடு கட்டும் விருப்பமுடையவரின் எண்ணம், சிறுவர்கள் கட்டும் மணல் வீடு போல், அலை வந்து அலைக்கழிக்க கலைந்து போகும் நிலையாகும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர். பத்ம பிரியா.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கை வளங்களைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது இக்கவிதை.

குருவிகளின் கூடு மரத்தினிலே-இந்த‌
குழந்தைகளின் வீடு ஈர மணலிலே

மணல் மாயமாய் மறையும் முன்னே
மணல் வீடு கட்டி மகிழட்டுமே

காற்று வீசி கலைக்கும் முன்னே
கோட்டைகள் மணலில் பல கட்டட்டுமே

மாடி வீடு கட்டி அங்கே-நம்
கொடியினை நட்டு வணங்கட்டுமே

ஈரமண்ணில் ஆடிய ஆட்டம் என்றும்
இதயத்தில் உலரா வண்ணம் இருக்கட்டுமே

காடுகள் யாவும் ஆயின வீடுகளே
காணாமல் போனது ஆற்று மணலுமே

மார்பிள் வீடு கட்டி வாழ்ந்தாலுமே
மணல் வீடு போல்தான் வந்திடுமா

மண் வாசனை போனது எங்கே
மரஙகளும் போனது எங்கே

குருவிகளுக்கும் கூடு கட்ட மரமில்லை
குழ்ந்தைகள் வீடு கட்ட மண்ணில்லை

காற்றும் கடலும் வந்து அழிதாலும்-இவரின்
கனவினை மட்டும் அழிக்காது காத்திடுவீர் (ராதா விஸ்வநாதன்)

வீட்டிற்காகவும், மாளிகைக்காகவும்  காடுகள் அழிக்கப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர்.மழை இன்மையையும், மணற் கொள்ளையையும் சுட்ட, மண்வாசனை போனது எங்கே மரங்களும் போனது எங்கே என்று கவிஞர் எடுத்தாண்டிருப்பது அருமை. எளிமையான வரிகளில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கும் ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

Share

Comments

5 responses to “படக்கவிதைப் போட்டி 69 – இன் முடிவுகள்”

  1. Kathir

    Aaivarukkum Anbu Vanakkam!
    It is really nice to see this site and best wishes to all one who handling this. If need to send participation to which mail id need to send, kindly inform.

    Anbudan Kathir

  2. கதிர், உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

  3. கவிதைப் போட்டிக்கான படைப்பு என்றால் இந்த இடுகையின் பின்னூட்டமாக இடவேண்டும். வாழ்த்துகள்.

  4. தங்கா

    படக்கவிதைப் போட்டி அறுபத்தாறு, அறுபத்தேழு , அறுபத்தெட்டுகளின் முடிவுகளை இன்னமும் காணவில்லை.

  5. editor9

    தங்கா அவர்களே, தாங்கள் கேட்ட படக் கவிதைப் போட்டியின் முடிவுகளை தற்போது முகப்பு பகுதியில் காணலாம்.தங்கள் மறுமொழிக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *