க. பாலசுப்பிரமணியன்

அவள் ஒரு காவியமா?  குறுநாவலா?  சிறுகதையா? … யாருக்குத் தெரியும் ?

காலையிலே கதிரவனின் முதல் கதிர் வெளிவரும் போது மலர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிபோல அவள் வார்டுக்குள் “குட் மார்னிங் ” என்று சொல்லிக்கொண்டு வரும்பொழுது அந்த வார்டு பூத்து மலரும்..

“;ஹாய்… சௌ…” காயத்ரி அவளுக்கு பதில் சொல்லி இருவரும் தங்கள் வலது கைகளால் ஒருவரை ஒருவர் தட்டிக்கொள்ள… படுக்கையில் இருந்துகொண்டும் பாதி எழுந்துகொண்டும் இருக்கின்ற நோயாளிகள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை…

” என்ன பாட்டி… நல்லா தூங்கினீங்களா ? ராத்திரி தூங்கறத்துக்கு மாத்திரை தந்தாங்களா? இப்போ வலி எப்படி இருக்கு?” சௌதாமினியின் கேள்விக்கணைகளை வழக்கம்போல் எதிர்பார்த்த பாட்டி “பரவாயில்லை கண்ணா. உன்னை பார்த்ததுமே பாதி வலி போயிடுத்து… ” என்று சொல்ல அவள் முகத்தில் ஒரு சிரிப்புக் கீறல் ..

சௌதாமினி ஒரு செவிலி.. அந்த ஆஸ்பத்திரியில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு சொந்த ஊர் திருச்சூர் அருகில் உள்ள ஒரு கிராமம்.

குரலில் பணிவு.. முகத்தில் அமைதி.. பழகுவதில் கனிவு…ஒரு சகோதரியாக.. ஒரு தாயாக.. ஒரு தோழியாக.. ஒரு தேர்ந்த செவிலியாக… மற்றவர்கள் மனநிலை அறிந்து பழகும் பெண்…

“என்ன  சார் காலையிலே உடம்பெல்லாம் துடைத்து விட்டார்களா? தூக்க கலக்கமெல்லாம் போயிடுத்தா?  சங்கரைக் கூப்பிடவா? கொஞ்சம் நடக்கிறீங்களா?”  பாஸ்கரனுக்கு ஒரு புதிய சக்தி வந்தது போன்ற உணர்வு.. “தாங்க்ஸ்,  சிஸ்டர். எல்லாம் கரெக்ட்டா நடக்குது…”

சித்ரா பௌர்ணமியன்று கள்ளழகர் ஒவ்வொரு மண்டபமாக அமர்ந்து மரியாதைப்பெற்று வருவதுபோல், இவளும் ஒவ்வொரு படுக்கை அருகிலும் சென்று இனித்துப் பேசி அவர்களின் மனத்திற்கு மருந்து கொடுத்து வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சி…

” என்ன .சார்.. கொஞ்ச நேரத்திலே டிஃபின் வந்துடும். ரெடியாயிட்டீங்களா?” என அந்த முதியவரிடம் கேட்க, அவர் முகம் சுளிப்பதுகண்டு “என்ன,,, இன்னிக்கும் அதே இட்லியான்னு கேட்கறீங்களா?” என்று அவர் பாவனையின் உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு கேட்க, அவர் தலை அசைக்கிறார்…

“கொஞ்சம் இருங்க.. கேன்டீன்ல சொல்லி மீன்குழம்பும் சிக்கன் பிரியாணியும் கொண்டு வர சொல்றேன்.. அப்போதான் இங்கேயே இன்னொரு வாரம் தங்கலாம்..” என கிண்டலடிக்க அந்த வார்டே சிரிக்கின்றது..

“இந்தாங்க உங்க மாத்திரை..” என்று காலை தலையணை மேலே வைத்துப் படுத்திருக்கும் அந்த இளைஞரிடம் கொடுக்க..”நாலுதான் சார்…காலையிலே நாலுதான்… மீதி பதினாறு பின்னாலே தொடரும்…” மலையாள உச்சரிப்பில் அவள் பேசும் தமிழும் கேட்பதற்கு இனியதாகவே இருக்கும்.

“பாட்டி.. என்ன சாப்பிடலை.. எல்லாம் அப்படியே இருக்கு ..””வேண்டாம்மா .. பிடிக்கலை..”

“இல்லை. சாப்பிடணும்.. கொஞ்சம் எனக்காக…” கையில் உணவை எடுத்து ஊட்டுகின்றாள். “வேண்டாம்மா..”

“ஒருவாய்.. உங்க பெண்ணுக்காக..”

சிரித்துக்கொண்டே அந்தக் கிழவி.. “உன்னை மாதிரி ஒரு பொண்ணு வீட்டில இருந்தால் போதும்  நாட்டில முதியோர் இல்லமே இருக்காது. ” சௌதாமினி சிரித்துக் கொண்டே “பாட்டி.. நல்லா பேசறீங்க..” என்று பதிலளிக்கிறாள்.

அந்த அறையின் நடுவில் போடப்பட்ட மேசைமீது நோயாளிகள் சம்பந்தப்பட்ட உள்ளீட்டுக்களை பதிவு செய்துகொண்டிருந்த சௌதாமினி திடீரென்று திரும்பி “டேய், லூசு..” என்று சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞனைப் பார்த்து அழைக்க நான் சற்று வியந்தேன்..

இது என்ன விளையாட்டா? நட்பின் பரிமாணமா? அந்த இளைஞன் இவளை பார்த்து தன் ஆள்காட்டிவிரலால் ஜாடை காட்டி “கொன்னுடுவேன்” என்று சிரித்துக்கொண்டு  செல்கிறான்.

சிறிதுநேரம் கழித்து என்னை நோக்கி வந்த சௌதாமினியிடம் ” அவர் யார்” எனக்கேட்டேன். ” டாக்டர் சார்.”

“அவரைப் போய் லூசுன்னு சொல்றீங்க..”

“பிரண்ட் சார்.  எங்க ஊர் பையன். “

“இருந்தாலும் எல்லார் முன்னாலேயும் அவரைப் போய் லூசுன்னு சொன்னா, அவங்க என்ன நினைப்பாங்க .”

சௌதாமினியின் தலையும் கண்களும் கீழே விழுந்தன.. ” சாரி சார் ..அவர் தப்பா நினைக்க மாட்டார்..”

“இல்லேம்மா.. அவர் தப்பா நினைக்கவிட்டாலும் மற்றவர்கள் அவரை மதிப்பார்களா?”

அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் தான் தவறை உணர்ந்து விட்டாள் எனப் புரிந்தது.

“என்னம்மா.. நர்சிங் படிச்சிருக்கய்யா “

“ஆமாம் சார். M  Sc நர்சிங்.. “

“எப்படிம்மா எல்லாரோடையும் இவ்வளவு அன்பா நட்போட இருக்க முடியறது?” அவள் பதில் சொல்லவில்லை..

“திருமணம் ஆயிடுத்தா?”

சிரித்துக்கொண்டே  “இரண்டு  பெண்கள்.. முதல் பெண் ஐந்தாம் வகுப்பு ரெண்டாவது பெண் மூன்றாம் வகுப்பு…”

” உங்கள் கணவர்…?”

தான் விழிகளை சற்றே மேல்தூக்கி இதெல்லாம் உங்களுக்குத் தேவையா என்று கேட்பதுபோல் வைத்துக்கொண்டு..

“நீங்க எங்க அப்பா மாதிரி. அதனாலே சொல்றேன்… நான் சிங்கிள் .. நான் ஷிப்ட்ல வேலைக்கு வந்ததாலே என் கணவரும் ஷிப்ட்ல குடும்பம் வைத்துக்கொண்டார்.  அதனாலே பிரிந்து விட்டோம். மூன்று வருஷம் ஆச்சு.”

என் கண்களின் ஓரத்தில் கசிந்த நீரை அவள் பார்க்கத் தவறவில்லை.

“ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க சார். இதெல்லாம் வாழ்க்கையிலே யதார்த்தம். ஒரு பெரியவர் சொல்லிருக்கார்.. Life is a  Challenge – Meet it ; Life is a game – play it “..

ஏதோ அழைப்பு வர அவள் அந்த இடத்திலிருந்து சென்று விட்டாள் .

சில மணி நேரம் கழித்து தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி “சார்.. டூட்டி நேரம் முடிந்து போச்சு. நான் கிளம்பறேன்.. நாளைக்கு நான் வரும்போது நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிருப்பீங்க.. நான் சொன்னதை மறந்துடாதீங்க…”

அவள் முகத்தைப் பார்த்தேன். “அதான் சார்.. Life is a  Challenge – Meet it ; Life is a game – play it “..

“வீட்டில எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க.. கொஞ்சம் சிரித்துக்கொண்டே இருங்க.. இப்படி உம்முன்னு இருக்காதீங்க…”

அவள் அந்த வார்டை விட்டு கிளம்ப எல்லாருடைய கண்களும் அவள் சென்ற பாதையை பார்த்துக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் வரவேற்பு அறையில் இருந்த கீதோபதேசம் படத்தைப் பார்த்தேன்… “கண்ணன் முகத்தைப் பார்த்தால் சௌதாமினி முகம் மாதிரியே இருக்கில்ல?” என் மனம் எழுப்பிய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.