பறவையிடம் பாவ மன்னிப்புக் கேட்கும் வானமும் சுழன்றடிக்கின்ற காற்றும்
ராஜகவி ராகில்
வெளியே வெளிச்சமாய் இருளின் கருவூலம்
உள்ளே உயிர்ப்பாய் உள்ளதாய்
ஒளியற்ற ஒரு வயலில் இருட்டு விதைத்து
முள் கல் நஞ்சு கலந்த ஒரு பயிர் வளர்ந்ததாய்
உள்ளே இருந்த சாட்சித் தேவன் உரத்துச் சொல்லிக் கொண்டிருந்த வேளை
செவிடாகத்தான் நகர்ந்தது காலம்
தெரிந்தது
லெளகீகக் காடு பூந்தோட்டமாய்
ஆத்மீக வனம் கூரிய முட்காடாய்
ஆசை பொய் கோபம் சந்தேகம் துரோகம் காமம்
எல்லாம் சேர்ந்து படைத்த ஒரு கார்மேகம்
மழை பெய்தபோது
லெளகீகக் காடு வளர்ந்தது இன்னும் செழித்தும் சிலிர்த்தும்
வானத்தை பிய்த்து வீசியபோது
சிலுவையில் அறையபட்டன பறவை இறக்கைகள்
என்றாலும்
இருள் வானம் செத்து விழும் வரை
எனது பறவை பறந்து கொண்டிருக்கிறது
சுழன்றடிக்கின்ற காற்றையும் கடந்து
பாவங்களைக் களைகின்றபோது
வெளிக்கத் தொடங்கியது
என் ஆத்மீகம்
இப்போது
இருள ஆரம்பிக்கிறது
எனது லெளகீகம் .