மீ.விசுவநாதன்
எனக்கொரு மந்திரம் வாய்த்துளது – அது
எல்லோர் நலமும் நினைக்கிறது
தனக்கொரு தந்திரம் கொள்ளாத – தினம்
தவிக்கும் உயிரை அணைக்கிறது !
இளமையில் ஓடிய கால்களுக்கு – இன்று
இதமாய் தடவிக் கொடுக்கிறது
அளவிலா அன்பினைத் தந்தவர்க்கு – கவலை
அருகில் வராமல் தடுக்கிறது !
பலமுறை வாழ்விலே தோற்றவர்க்கு – உள்
பலத்தைக் அளித்துப் பழக்கியது
குலமுறை எதுவுமே பார்க்காமல் – நல்ல
குணத்தைக் கண்டு மதிக்கிறது !
தீவிர வாதமே தீர்வில்லை – “கருணை”
தெய்வ மனத்தைத் திறக்கிறது
தூவிய பூக்களின் வாசம்போல் – அது
பூமி சுகிக்க மணக்கிறது !

Leave a Reply