இசைக்கவி ரமணன்

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி – 4

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார் (01:3)

kural-2-1 

அன்பரின் நெஞ்ச மலரில் பொருந்தியிருக்கும் கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர், உலகில் நிலையாக வாழ்வார்.

 

ங்கே மலர் நமது இதயக் கமலமே! `ஹ்ருதய குஹர மத்யே` என்று விளக்குவார் ரமணர். யோகத்தில், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அனாஹதமே இதயக் கமலம் எனப்படுகிறது. அதற்கு மேலும் ஆதாரங்கள் உண்டெனினும், மனித ஆன்மா விடுதலை பெறுவது அனாஹதக் கமலத்தில் இறங்குவதால் மட்டுமே சாத்தியமாகிறது என்பது ராஜயோகம். அங்குதான், மிகச் சிறிய, ஆனால் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமுடைய புள்ளியாய் பரமாத்மா துலங்குகிறது. `தஸ்மாஸ் சிகாயை மத்யே பரமாத்மா விவஸ்திதஹ,` என்கிறது கடோபநிடதம்.

ஆக, இதயக் கமலமே ஆதி பகவனாகிய வாலறிவனின் இருப்பிடம். அதில் நுழைந்தவன் அவனடி சேர்ந்தவனாகிறான்!

குருவின் அருளால், இடைவிடாத அப்பியாசத்தால் இதயக் கமலத்தில் நுழைந்தால் அங்கே இறைவன் எழுந்தருளுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஏகினான் என்ற கடந்த காலத்தைக் குறிக்கும் சொல், ஏற்கெனவே நடந்து முடிந்த செயலை, அவன் ஏற்கெனவே எப்போதுமே அங்கிருக்கிறான் என்பதைச் சுட்டுகிறது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்கிறார் மாணிக்க வாசகர். அது எப்படிச் சாத்தியமானதாம்? சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால் என்று எத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறார்! என் சிந்தையில் ஏற்கெனவே சிவன் வந்து நின்றுகொண்டிருக்கிறான். நான் உணர்ந்தேனில்லை. ஆனால், என்னில் அவனுடைய இருப்பே அருளாய் விரிந்தது. அந்த அருள் என்ன? அவன் தாளை வணங்கச் சொன்னது. வணங்கினேன். அவன், என் சிந்தையில் ஏற்கெனவே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது! நான் என் முயற்சியில் அவனுடைய திருவடிகளை வணங்கி, அதன்பின் அவனுடைய அருளைப் பெற்று, அதற்குப் பிறகு என்னுள் அவனைக் காணவில்லை. அவன் அருள், ஒரு நினைப்பாக வந்து அவன் தாள்களைப் பணியச் சொன்னது. பணிந்தேன். அவன் சிந்தையில் ஏற்கெனவே இருந்தான் என்று புரிந்தது! இதுதான் மலர்மிசை ஏகினான் என்பது.

`அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்பது தெலுங்குப் பழமொழி. `யார் உன்னை எவ்விதம் கருதுகிறார்களோ, அவர்களுக்கு நீ அம்மட்டே!` என்பது அன்னமாசார்யாவின் கீர்த்தனை. ஆக மலர்மிசை ஏகினான், அழைத்தால் வருபவன் இல்லை. அழைக்கும் பொழுது அவன் அங்கேயேதான் இருக்கிறான் என்று உணரப்படுபவன்! எங்கே? இதயக் கமலத்தில். அவன் இல்லாத இடம் உண்டா? எனில், அழைத்து, அதன்பின் வருபவனா அவன்?

நீண்ட கைகள் கவளம் நாடி

நடுங்குகின்றேன் அமிழ்த மழையில்

ஞானமா? வெறும் நாணமா? வினை

வீழ்கையில் உயிர் கூசுமா?

 

என்று என்னைப் பாடவைத்தது. பரிபூரண ஆன்ம விடுதலை என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில் பல படிகள் இருக்கின்றன. ஒவ்வொரு படியிலும் நாம் அதுவரை கொண்டிருந்த கொள்கைகள், பிடிவாதமாக நம்பியிருந்த சித்தாந்தங்கள் தவிடுபொடியாகி நாணமே மிஞ்சுகிறது. அதில் தலையாய நாணம் உள்ளே ஏற்கனவே எப்போதிலிருந்தோ இருப்பவனை ஊரெங்கும் தேடி உரக்க உரக்க அழைத்தோமே என்பதுதான்!

என்

இதயக் கமலம் உந்தன் இருகண் கதிரால் திணறும்

இசைநாடும் முடிவே நீ வருக! என்

இறைவா தலைவா வருக!

 

என்று என் குருநாதரை வரவேற்றுப் பாடினேன். `குரு பார்த்ததால் இதயக் கமலம் திறந்ததா, இல்லை, இதயக் கமலம் திறந்ததால் குரு பார்த்தாரா?` என்று அவரே கேள்வி எழுப்பி, அவரே விடையும் தந்தார்,`இரண்டும் ஒரே கணத்தில் நிகழ்வன!` என்று. அழைத்தால்தான் அவன் ஏற்கெனவே உள்ளே இருப்பது புரிகிறது. அழைக்கச் செய்ததும், அழைத்தபின் உள்ளே ஏற்கனவே இருந்துகொண்டிருக்கிறான் என்பதை உணரச் செய்ததும் அவனுடைய அருளே.

எனவே, மலர்மிசை ஏகினான் என்று அற்புதமாகச் சொன்னார். எளிமையாகச் சொன்னால், வாசலில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அம்மா உள்ளிருந்து அழைக்கிறாள். குழந்தை, `இதோ வந்துட்டேம்மா!` என்றுதானே சொல்கிறது! ‘இதோ வருகிறேன்’ என்றோ ‘வரப்போகிறேன்’ என்றோ இலக்கண சுத்தமாகச் சொல்வதில்லை அல்லவா? அன்பால் அழைத்த அடியார் மனத்தில் அவர்கள் நினைத்த கணத்தில் விரைந்து தோன்றுகிறான் என்பதே ஏகினான் என்ற சொல்லுக்கு விளக்கமாகும்.

தரிசனம் என்பது முதலில் தற்செயலாகத் தட்டுப்படும் அதிசயம். யோகி, யோகத்தில் நிலைபெறும்போது, யோகநிலை என்பது காலவரம்பின்றி, தான் எப்போதுமே அப்படி இருந்துவந்ததுபோல் தோன்றுகிறது.

அப்படிப்பட்ட யோகியே `வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான்! இங்கிருக்கும்போது அங்கிருப்பவனாகக் கருதப்படுகிறான். அங்கே இறுதியாய்ச் சென்றபின்னும் இங்கேயே இருப்பதுபோலும் கருதப்படுகிறான்!

`எல்லோருடைய உள்ளத்திலும் நான் நன்கு வீற்றிருக்கிறேன்.` (கீதை : 15:15) என்கிறான் கண்ணன்.

மாணடி என்றால் மாண்புள்ள அடி. அது மட்டுமல்ல மாண்பு தரும் அடி! கல்வி, செல்வம், கலைகள், அழகு, திறமை, பதவி இவையெல்லாம் மாண்புகளைத் தரா. மலர்மிசை ஏகியுள்ளவனின் திருவடிகளைப் பணிவதன் மூலமே நிலையான மாண்பு பெறப்படுகிறது. அவன் திருவடிகளைப் பணிந்திருத்தலே மாண்பு.

நிலமிசை நீடு வாழ்வார் என்பதைப் பரிமேலழகர் மிசை நிலம் என்று கொண்டு, வீடு பேற்றைக் குறிப்பதாக விவரிப்பார். பொதுவாக, மனிதன் நீண்டநாள் வாழவே விரும்புவான். இதனால்தான் நாம் பெரியவர்களை வீழ்ந்து வணங்கும்போது அவர்களும் `நூறாண்டு வாழ்க! பல்லாண்டு வாழ்க! நீடு வாழ்க! நெடிது வாழ்க!` என்றெல்லாம் நம்மை வாழ்த்துகிறார்கள். `நீண்ட காலம் வாழ்வார் தரைமீது,` `கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே,` என்று பாடுகிறான் பாரதி. எனவே, இறைவனின் திருவடிகளைப் பணிவதன் மூலம், இந்த உலகிலேயே நெடுங்காலம் எந்தக் குறைவுமின்றி வாழலாம் என்றும் கொள்ளலாம்.

நாம் அறநெறியினின்று பிறழாமல் வாழ்வோமானால், இந்த உலகைவிட்டு நாம் நீங்கிய பின்னும், நாம் நீண்ட காலம் நினைத்துப் போற்றப்படுவோம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்துவிட்ட எத்தனையோ மாமனிதர்களை, முனிவர்களை நாம் இன்னும் நினைத்துப் போற்றுகிறோமே, அதுதான் நீடு வாழ்தல். வள்ளுவர் போல்!

நிலம் என்னும் சொல்லை வேறிடங்களில் வள்ளுவர் எப்படிப் பயன்படுத்தி உள்ளார் என்பதைப் பார்க்கும்போதும் அவர் உட்கிடக்கையை நாம் விளங்கிக் கொள்ளலாம்:

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும் (1094)

இதைத்தான் கண்ணதாசன் அழகாக,

உன்னை நான் பார்க்கும்போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும்போது

என்னை நீ பார்க்கின்றாயே!

 

என்று பாடுவார்.

நிலமென்னும் நல்லாள் நகும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல, நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும், நிலத்தறைந்தான் என்று பலவிடங்களிலும் நிலம் என்ற சொல்மூலம் இந்த மண்ணை, மண்ணுலகத்தைத்தான் குறிக்கின்றார்.

 தொடருவோம்


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *