இலக்கியம் எழுதாத நட்பு  ( மூன்றாம்   பகுதி)

0

க.பாலசுப்பிரமணியன்

 

நண்பனே !!

உடலின்றி உயிரில்லை…

ஆனால்…

உடலில்லா உயிரெங்கே?

 

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கைக்கும் உயிருக்கும் என்ன உறவு?

 

புல்லாங்குழலின் ஒரு பக்கம்

நுழையும் காற்று..

இசையாய்

மறுபக்கம் வருவது போல்…

 

உடலென்னும் இந்தக் குழலில்..

ஓசையின்றிச் செல்லும் காற்று..

இசைக்கும் இசைதான் வாழ்வோ?

 

இந்தக் குழலை ஊதுவது யார்?

நீயா? இல்லை நானா?

இதில்..

ராகங்களையும் ,

தாளங்களையும்

பாடல்களையும்

யார் எழுதியது ?

 

ஓர் மரபணுக்குள் உயிரைவைத்து

நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமுமாய்

வளர்த்து ..

வாழ்வென்னும் வலைக்குள்

வாசமுடன் வைத்தது யார் ?

 

புழுவாக..

புள்ளினமாக

பூமியிலே ஊர்வனவாக..

மண்ணுலகில்..

நீர்நிலையில்..

வானத்தில் ..

வண்ணமிகு உயிரினங்கள் ..

ஏன் படைத்தாய் ?

 

மரபணுக்குள் ..

உயிர் மந்திரத்தை

யார் எழுதியது?

 

வாழ்க்கையின் பொருள்பெற்று

ஒரு மரபணு..

இன்னொரு மரபணுவிற்கு ..

என்ன செய்தி சொல்கிறது?

எதற்காக ?

 

கருவறையில்

தொட்டிலிட்டு ..

தன்னுயிரைப் பணயம் வைக்க

தாய்மைக்கு யார் சொன்னது?

 

அழுதுகொண்டே பிறக்கின்ற உயிர்

வாழ்வில் அழுவதற்கு

ஏன் மறுக்கிறது?

 

வாழ்க்கை.. என்பது

முடிந்ததா?

முனைந்ததா?

முடிவதா?

 

வாழ்க்கை..

எங்கே தொடங்கி..

எங்கே முடிகிறது?

 

பிறப்பும் மரணமும்..

வாழ்க்கை கதைக்கு

முன்னுரையும் முடிவுரையுமா?

 

சில உயிர்கள்…

மின்மினிப் பூச்சிகள்… போல் ..

முடிவிலே முதலை நிறுத்தி…

 

சில உயிர்கள்…

முடிவையே  அறியாமல்…

என்றும் சிரஞ்சீவியாய் ..

 

சில உயிர்கள்..

நித்தம் பயத்தில்

பிறந்துகொண்டும்.. இறந்துகொண்டும்..

 

ஏன் இந்த பாரபட்சம் ?

இதை யார் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது?

 

மகிழ்ச்சிகள் ..

வேதனைகள்..

வெற்றிகள்..

தோல்விகள்..

எது வாழ்க்கைக்குச் சொந்தம் ?

 

அறியாததை அறிவுக்கும்

நிலையாததை உண்மைக்கும் ..

இணைக்க முயலும் ..

முகப்பில்லா முயற்சியோ

வாழ்க்கை ?

 

விதையாக..

முளையாக..

செடியாக..

பூத்துக்குலுங்கி..

பழமாகிக்கனிந்து

சருகாக ..

வீழ்வதுவோ வாழ்க்கை ?

இதில் எது சிறந்தது ?

முளைப்பதா முடிவதா ?

 

கேள்விகள் ஆயிரம்..

பதில்கள் பதுங்கிக்கொண்டு.. … ..

அறிந்தவர்கள் அமைதியில் ..

அறியாதவர்கள் ஆணவத்தில்..!!

 

நண்பனே..

கோள்கள் பல்லாயிரம்…

தாரகைகள் பல்லாயிரம்..

பால்வெளிகள் பல்லாயிரம்…

அண்டங்கள் எங்கெங்கோ…

 

இதனிடையில்…

இந்த உயிர்..

இந்த உடல்..

 

நீ..

நான்..

நமக்குள் என்ன உறவு ?

இது வெறும் நட்பா?

இல்லை …?

 

பயத்தில்..

உன் கைகளை   ..

இருக்கமாகப் பிடிக்கிறேன்..

 

பயணம் தொடர்கிறது..

அமைதியான பயணம்..

இனிமையான பயணம்..

 

ஆண்டுகளாய்

யுகங்களாய் ..

நீயும் நானும்…

போகுமிடம் எங்கே..?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *