இலக்கியம் எழுதாத நட்பு ( நான்காம் பகுதி)
க.பாலசுப்பிரமணியன்
அமைதியான பயணம்…
நினைவுக்கடலில்…
ஆழ்கடலின் உள்ளே..
அலைகளில்லாத இடத்தில்……
இன்னும் அமைதியைத் தேடி…
அமைதி எங்கே?
மகிழ்சியாலா ?
துயரத்தாலா ?
இன்பங்களின் அந்தப்புர வாசலில்..
சிதறிக்கிடப்போதோ மகிழ்ச்சி?
அல்லது..
துன்பக்கிணறைத் தூர்வாரியபின்..
கொஞ்சிவரும்..
குளிர் நீரூற்றோ ?
இன்பங்கள்…
வறண்டு காய்ந்த பூமியில்…
சில்லென்று விழுகின்ற..
சில நீர்த்துளிகள் போல்..
ஒட்டியவுடன் உலர்ந்துபோகும் !!
உடலின் ஒவ்வொரு அணுவிலும்..
உள்ளே அமர்ந்து..
அமுதம் போல்…
சிகரத்தை வெல்லும் சிந்தனையைத் தூண்டி..
வந்த சுவடு தெரியாமல்..’
தன் வீடுநோக்கிச் செல்லும் !
இன்பங்கள்.. எதில்?
பிறக்காத பிள்ளைக்குப்
பெயர் சூட்டும் ஆர்வத்தில் !
உழைத்த உடலிலிருந்து
உதிரமாய் கொட்டும் ..
வியர்வையின் சுவாசத்தில் !!
பசித்த வயிற்றை
பானைச் சோறு ..
முத்தமிடும் மோகத்தில் !!
ஏழ்மையின் இதயத்தை
காதலிக்கும் வறுமையின் தேடலில் !!
வெறுப்பென்ற நெருப்புக்குள்
கருணையும் வீடுகட்டி …
வீணைமீட்டும் நாதத்தில்!!!!
மருண்ட இருளின் துயர் நீக்க ..
இன்னொரு விளக்கேற்றும்
மெழுகுவர்த்தியின் தியாகத்தில் !!!!
இன்பத்தையே துறந்து வந்த
இன்பத்தை..
நேசிக்கும் இன்பத்தில் !!
இன்பங்கள் நீர்க்குமிழிகள்..
இதயங்களோடு விலைபேசும்
இடைக்காலத் தரகர்கள் !
உணர்வுகளின் வாசலில்
உமிழ்ந்து செல்லும்
உல்லாசப் பறவைகள் !
வானவில்லை வாசலில் காட்டி ..
கானல் நீரில் கலங்கவிடும்
கற்பனைத் தேர்கள் !
இன்பங்கள்..
வாசமுள்ள பூக்கள் தான் !
வாடிவிடும் காலையிலே !
சிற்றின்பச் சிரிப்பிற்காக
சீழ்பிடித்த உடலும்
சீறியெழுந்து …
விசிலடிக்கும் வேட்கை !!
பூசைக்கு வந்த மலராய்
பேரின்பச் சிந்தனைகள்..
புலனுள்ளே தவமிருக்க ..
போராடும் வாழ்வோடு!!
சொந்தமென்று எதுவுமில்லை..
இன்பத்தில்..
இல்லாதவர்க்கு கிடைப்பதெல்லாம்
இன்பம் !!
இருப்பவருக்கு இன்னும் வேண்டுவதோ
இன்பம் !!
துறந்தவர்க்குத் வந்தவினை கழிப்பதுவே
இன்பம் !!
மதமுற்ற களிறுபோல்
வீதியெல்லாம் ஓடுகின்றேன் ..
இன்பமென்ற ஒன்றைத் தேடி ..
ஏங்குவதென்…..
மனமா? உடலா? உயிரா ?
மாயத்தை நீக்கி ..
மனதுள் சொல்லிடுவாய்..
மாயவனே !
நண்பனே !
கைப்பிடித்த உன்னுடன்
காலமெல்லாம்
கேள்விகளின்றி…
பதில்களின்றி..
அமைதியில் ..
நடப்பதுவோ இன்பம் ?