மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை
மலர் சபா
அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கூறிக் கண்ணகி மதுரையை விட்டு நீங்குதல்
“அப்படிப்பட்ட ஊரில் பிறந்த நானும்
ஒரு கற்புடைய பெண் என்றால்
மதுரை நகரை மட்டுமன்றி
மன்னனையும் அழிக்காமல் விடமாட்டேன்;
இதை நீ நிச்சயம் காண்பாய்” எனக் கூறிக்
கோவிலை விட்டு நீங்கினாள்.
கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து மதுரையின் மேல் எறிதல்
“நான்மாடக் கூடலான மதுரை நகரின்
ஆண்களும் பெண்களும்
தேவர்களும் தவத்தோரும்
நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் விரும்பிய
என் காதலனைக் கொலை செய்த
மன்னன் நகரத்தின் மீது
கோபம் கொண்டேன்;
என் மீது எந்தக் குற்றமும்
இல்லாதவள் நான்”
எனக்கூறித்
தன் இடது முலையை
வலது கையால் திருகி
மதுரை நகரத்தினை
மூன்று முறை வலம் வந்து,
மயங்கியவளாய்
அணிகளை உடையவளாய்த்
தன் அழகிய முலையின் மீது சூளுரைத்து,
வண்டுகள் தேன் பருக வரும்
மதுரைத்தெருவில் நின்று,
கோபத்துடன் விட்டெறிந்தாள்.

Leave a Reply