மேலாண்மை
பவள சங்கரி
தலையங்கம்
மத்திய அரசிற்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்குள் காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அப்போதைய அரசு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டு அரசிடம் கூறி ஆவண செய்வதாகக் கூறிவிட்டு வந்தார். ஆனால் நேற்று, அரசாங்க தலைமை வழக்கறிஞர் இதன் சார்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி பஞ்சாபையும், ஆந்திராவையும் மேற்கோள் காட்டி காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு காரணங்கள் பலவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதற்கு அவசர சட்டம் மூலமாக அங்கீகாரம் அளித்து அதை முன் தேதியிட்டு பாராளுமன்றங்களில் அங்கீகாரம் செய்ய முடியாதா. இதற்கு முன்னுதாரணங்களாக எத்தனையோ சட்டங்கள் அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லையா. மத்திய நீர்பாசன அமைச்சகம் இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் நீர்பிடிப்புப் பகுதி, பாசனப்பகுதி இருப்பது பற்றி அறியமாட்டார்களா ? கடந்த மூன்று மாதங்களாக பல ஆயிரம் கோடி விரயமாக்கப்பட்டுள்ளது அறியாத ஒன்றா. அரசியல் ஆதாயங்களுக்காக தமிழினம் வஞ்சிக்கப்படுகிறதா? தமிழக விவசாயிகள் மத்திய அரசால் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறதா?தமிழகத்தைச் சார்ந்த பாரத சனதா கட்சியின் தலைவர்களின் நிலைப்பாடுகள் என்ன? தமிழிசை தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பாரா? மத்திய அரசை எதிர்த்து இரயில் மறியல் போராட்டமும், மின் பகிர்மானத்தை எதிர்த்து போராடவும் முனைவாரா என்று தமிழக மக்கள் அனைவரும் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.