க. பாலசுப்பிரமணியன்

 

திருச்சானுர் அலமேலு மங்கை

163232_187043744648894_100000298084610_633128_3803932_n

திருமாலின் இதயத்தில் திருவுள்ளம் கொண்டவளே

திருமலையில் திருமாலைத்  தினமும் போற்றுபவளே !

தீதில்லாச் செல்வத்தைத்  திகட்டாமல் தருபவளே

திருச்சானூர் குடிகொண்ட தெய்வத் திருமகளே !

 

அலைபாயும் கடலங்கே உடலணைத்து உவகையுற

ஆதிசேடன் அரங்கனுடன் உனைத்தாங்கி அமைதியுற

அத்தனையும் துறந்துவிட்டு திருமலையின் தாளடியில்

அலர்மேல் அமர்ந்தவளே !  அண்டமெல்லாம் காப்பவளே !

 

ஏழுமலை வாசனையும் ஏழ்மைக்கு விலையாக்கி

ஏழுகடல் வாசினியே! எளிமைக்கு பொருள்தந்தாய் !

போதுமென்ற மனமதனில் பூமழை பொழிபவளே

போதாத மனிதருக்குப் பொருளறிந்து கொடுப்பவளே !

 

கண்ணனவன் காலடியில் கனிவோடு அமர்ந்தாலும்

எண்ணத்திலே மன்னனவன் மனம் கொண்டாய் !

விண்ணகமே வியந்திடும் செல்வமே விழிவளர

மண்ணினிலே குபேரர்கள் கோடி படைத்தாய் !

 

மலையேற வந்தோரை மனமுவந்து காப்பவளே !

மலையான துயரத்தைப் பொடியாக்கும் நின்னருளே !

மங்காத தங்கமெல்லாம் தங்காமல்  சென்றாலும்

மனதிலே நீயிருந்தால் மங்காது அருட்செல்வமே!

 

பொங்கிவரும் பேரழகே! புன்னைவாசன் பொற்கிழியே!

புல்லாங்குழல் ஓசையிலே புலனெல்லாம் மறந்தவளே!

புவிமயங்கும் காதலுக்குப் புதுமொழியைத் தந்தவளே!

பரந்தாமன் கைபிடுத்துக் கொலுவிருக்க வந்திடுவாய்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.