நிர்மலா ராகவன்

பிறரைச் சமாளிப்பது

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1-1

`என்கீழ் வேலை செய்பவருக்கு அசாத்தியக் கோபம் வருகிறது. கோபம் வந்தால், நாற்காலியைத் தூக்கி எதிரிலிருப்பவர்மேல் எறிகிறார். எதுவும் தன் தவறு என்று ஒத்துக்கொள்ளாது, பிறர்மீது பழி போட்டுவிடுகிறார். அவரைக் கண்டாலே எல்லாரும் ஒதுங்கிப் போகிறார்கள்,’ என்று பலவாறாக அரற்றிய மிஸ் லீ ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிப்பவள். அறுபது வயதுக்கு மேல் இருக்கும்.

`நான் எத்தனையோ புத்தி சொல்லிப் பார்த்துவிட்டேன். நீங்கள் பேசிப் பாருங்களேன். உங்கள் மொழியைப் பேசுவதால் நீங்கள் சொல்வதைக் கேட்பார்!’ என்றாள்.
உடனே அவர் அழைக்கப்பட்டார்.

`உன் விரல்களைப் பிடித்துப் பார்த்து, REFLEXOLOGY வழி உனக்கு என்ன கோளாறு என்று கண்டுபிடித்துவிடுவார்,’ என்று என்னை மணிமாறனுக்கு அறிமுகப்படுத்தினார் மிஸ் லீ.

அவரது விரல்கள் ஓயாத தலைவலி, காது வலி, வயிற்றுக்கோளாறு என்று பல உபாதைகளைத் தெரிவித்தன.

“என் மனைவி எல்லாவற்றிலும் தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைக்கிறாள்,” என்று மனைவிமேல் பழி சுமத்தி, தப்பித்துக்கொள்ளப் பார்த்தார் அந்த கேமரன் மலைவாசி.

கோலாலம்பூரிலிருந்து சுமார் மூன்று மணிநேரப் பயணித்தால் கேமரன் மலையை அடையலாம். நூற்று நாற்பது ஆண்டுகளுக்குமுன் CAMERON என்பவர் கண்டுபிடித்து, ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. இப்போது, ஒரு மணி நேரம், வளைவுகள் கொண்ட பாதையில் கார்களும் லாரிகளும் போனவண்ணமிருக்கும்.

இம்மலைத்தலம் கடல் மட்டத்திற்குமேல் 1,500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தேயிலைத் தோட்டம் பிரசித்தமானது. காய்கறிகள், மலர்கள் (முக்கியமாக, ரோஜா, சாமந்தி) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் அங்கிருந்து சிங்கப்பூர், தாய்வான், ஹாங்காங் மற்றும் மலேசியா முழுவதிற்கும் அனுப்பப்படுகின்றன.

பெங்களூரில் வயதானவர்கள் சாயங்கால வேளைகளில் உலவப் போகும்போது, காதில் பஞ்சை வைத்துக்கொண்டு, கழுத்தைச் சுற்றி கம்பளித்துணி போர்த்திக் கொண்டிருப்பார்கள். அப்போதுதான் குளிர் தாக்காதாம். கடும்குளிரில் அலைவதால், கேமரன் மலையில் பலருக்கும் காது வலி. (இந்த எளிமையான பஞ்சு வைத்தியத்தைச் சொல்லிக் கொடுத்தேன்).

வயிற்றில் எரிச்சல் என்று இதயப் பரிசோதனைக்குப் போனதாகத் தெரிவித்தார் மணிமாறன். `வேளாவேளைக்குச் சாப்பிட மறந்துவிடுகிறது,’ என்றார், சற்று வெட்கத்துடன். `அடிக்கடி கோபம் வருகிறது,’ என்றும் ஒத்துக்கொண்டார்.
“எதற்கு கோபப்படுவீர்கள்?”
“வேறு ஒரு இடத்திலும் நான் வேலை பார்க்கிறேன். அங்கு நானும் என் கீழிருக்கும் பத்தொன்பது பேரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்போம். ஆனால் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து, எங்களைப்பற்றிப் பிறரிடம் அவதூறாகப் பேசுவாள் சீனச்சி. அதனால் அடுத்த முறை ஏனோதானோ என்று வேலை செய்வார்கள் அவர்கள்,” என்று சொல்லும்போதே அவர் முகத்தில் ஆத்திரம்.
“வயதானவளா?”
ஆமென்றதும், “கிழவி மூளைகெட்டு என்னவோ பேசுதுன்னு விடுங்க,” என்று நான் சொன்னதும் சிரித்தார்.

நாம் எல்லாரையும் எப்போதும் சந்தோஷப்படுத்த முடியாது. இது புரியாது, பிறர் நம்மை என்ன சொல்லிவிடுவார்களோ என்று பயந்து, பயந்து நம் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யோசித்துச் செய்தால், நம் நிம்மதிதான் கெடும். நாம் தெரிந்தே பிறருக்குக் கெடுதல் செய்யாதவரை எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

“அவளுக்கு நீங்கள் செய்வதுபோல் கடுமையான வேலைகளைச் செய்ய முடியாது. வயிற்றெரிச்சலுடன் ஏதோ பேசுகிறாள் என்று உங்கள் ஆட்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்! தான்தான் மேலதிகாரி என்ற அதிகாரத்தைக் காட்டிக்கொள்ள காரணமில்லாமல் குறை கண்டுபிடிப்பார்கள் சில பேர்!”

பிறர்மீது நாம் கோபம் கொண்டால், அவர்களுக்கு அதனால் பாதிப்பு எதுவும் கிடையாது. நம் உடல்நிலைதான் கெடும். ரத்த அழுத்தம், மைக்ரெய்ன் தலைவலி, கால்வலி என்று திண்டாட நேரிடும்.

சிறிது நேரம் பேசியவுடன், “நீங்க ரொம்ப குண்டு. பத்து கிலோ குறைக்கலாம்,” என்றேன் உரிமையுடன்.

“மனைவி எல்லாத்திலேயும் தேங்காய்ப்பால் போடறாங்க. சாப்பாடு நல்லா இருக்கேன்னு திரும்பத் திரும்பப் போட்டுக்கிட்டு சாப்பிடறேன்,” என்றார்.

அவர் மனைவி சமையலில் கெட்டிக்காரி. அதுவே தொழிலும்கூட.

“தேங்காய்ப்பால்,” என்று மீண்டும் ஆரம்பித்தவரிடம், “ஒங்க மனைவிகிட்டேயும் ஒரு வார்த்தை சொல்றேன்,” என, தன் மனைவியையும், இரு குழந்தைகளையும் அழைத்து வந்தார். வீடு அருகில்தான் இருந்தது.

“எல்லாரும் குண்டு!” என்றேன், என்னையுமறியாமல். அவர்கள் கோபிக்கவில்லை. பத்து வயதான மகனும், சற்றே பெரியவளான மகளும் மட்டும் நெளிந்தார்கள்.

“என்னைப் பத்து கிலோ குறைக்கலாம்னு சொன்னாங்க!” என்று மணிமாறன் தன் மனைவியிடம் பெருமையாகத் தெரிவிக்க, “நான் எவ்வளவு குறைக்கணும், ஆன்ட்டி?” என்று ஆவலுடன் கேட்டாள் சுபலட்சுமி.
அவளை நிற்கச் சொல்லி, மேலும் கீழுமாகப் பார்த்தேன். “பதினைந்து!” என்று நிர்தாட்சணியமாகக் கூறிவிட்டு, “ஒரு மாசம் சமையலில் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டாம். குடிநீரில் ஒரு பிடி சீரகம் போட்டுக் கொதிக்க விட்டு, அதையே குடித்துவந்தால் கொழுப்பு குறையும்.

“கேமரன் மலையில் காய்கறிகளுக்குப் பஞ்சமில்லைதான் அதற்காக, நிறைய சாப்பாடு போட்டால்தான் குழந்தைகளின்மீது நமக்கு அளவுகடந்த அன்பு என்றில்லை,” என்று கண்டித்தேன்.

“CHIA SEEDS என்று கடுகு போலிருக்கும் விதைகளில் கால் தேக்கரண்டியை முதல் நாளே ஒரு கோப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடியுங்கள். நான் அப்படித்தான் ஊளைச்சதையைக் குறைத்தேன் ,” என்று அடுக்கினேன்.

இந்த விதைகளில் இரண்டு மேசைக்கரண்டி அளவு நீரில் ஊறவைத்துப் பருகி, போருக்குப் போவார்களாம் பண்டைக்கால மெக்சிகோ வீரர்கள். இதில் புரோதம் முதலான பலவித சத்துக்களும் அடங்கியிருப்பதால், பசி எடுக்காது. களைப்பும் இருக்காது. (`மத்தியானம் தூங்கக்கூட முடியவில்லை!’ என்று ஒரு தூக்கப்பிரியை என்னிடம் புலம்பினார்!).

“என்னங்க! என்னமோ சொல்றாங்களே, அதை இன்னிக்கே வாங்கிட்டு வாங்க,” என்று கணவனைக் கெஞ்சினாள் மனைவி.

சிறிது நேரத்துக்குள் ஒரு பாக்கெட் சியா விதைகளுடன் வந்தார் மனிதர்.

உடல் பருமனாகவோ, நிமிர்ந்து நடப்பதைப்பற்றி நாம் அலட்சியமாகவோ இருந்தால், கூன் விழும். என்னதான் தற்காப்பு கலைகளும் நாட்டியமும் பயின்றாலும், குனிந்து நிமிருவது, வளைவது எல்லாம் கடினம்தானே?

கடும் உழைப்பாளியும், தன்கீழ் வேலை பார்ப்பவர்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டவளுமான மிஸ்.லீ தன் தலையில் ஒரு தடிமனான புத்தகத்தை வைத்து நடந்து காட்டினாள். அவர்களால் முடியவில்லை. பக்கவாட்டில் ஆடியது உடல்.

கண்டிப்பாகப் பேசியதற்கு ஈடு செய்வதுபோல், “நான் அடுத்த முறை வரும்போது, அழகா இளைச்சிருக்கணும்,” என்றேன். ஆனால் குரலில் என்னவோ விளையாட்டுத்தனமான மிரட்டல்.

“இவங்க தினமும் தேங்காய்ப்பால்..,” என்று ஆரம்பித்தவரிடம் கண்ணைக்காட்டித் தடுத்துவிட்டு, “எந்தக் குடும்பத்திலே புருஷன் மனைவிக்குள்ளே சண்டை இல்லே? ஒங்க சண்டையை வீட்டிலே வெச்சுக்குங்க,” என்றேன்.

குழந்தைகள் சிரித்தார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *