நிர்மலா ராகவன்

நீங்கள் கர்வியா, பயந்தாங்கொள்ளியா?

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d
தானே தன்னைப்பற்றிக் குறைவாக ஏதாவது கூறினால், அது அடக்கத்தின் அறிகுறி என்று பலரும் நினைக்கிறார்கள்.

“நான் ஒரு பயந்தாங்கொள்ளி!” என்று என் சக ஆசிரியை ஒருத்தி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

இதில் என்ன விபரீதம் என்றால், நாளடைவில், நாம் சொல்வதை நாமே நம்பிவிடுகிறோம். நம் உள்மனம் நாம் சொல்வதை ஆராயச் சக்தி இல்லாது, அப்படியே ஏற்று விடுவதால் வருவது இந்த அபாயம்.
குறை தம்மேல்தான் என்று உணராது, தம்மைப்போல் இல்லாது, வெற்றிப்பாதையில் பீடு நடைபோடும் பிறரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பலன்?

எடுத்த எந்தக் காரியத்திலும் வெற்றி பெறும் துணிவு சிலருக்கு மட்டும் எப்படிப் பிறக்கிறது என்று ஆராய்வோமா?

இயற்கையாக அமையாவிட்டாலும், இது அமைத்துக்கொள்ள முடிவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

என் மாணவி ஒருத்தி பெரிய பரீட்சை எழுதி, சுமாராகத் தேர்ச்சி பெற்றதும், “Well, I tried my best!” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் படிப்பில் போதிய அக்கறை செலுத்தாது இருந்தது எனக்குத் தெரியும். அவளுடைய best என்னவென்று அவள் முயற்சிகூட செய்து பார்க்கவில்லை, பாவம்!

என் சீன மாணவிகள் என்னிடம் கேட்பார்கள், “இரவில் எத்தனை நேரம் தொலைகாட்சியில் திரைப்படங்கள் பார்த்தாலும் சலிப்பதில்லை. கண்விழித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பாட புத்தகங்களை எடுத்தால் மட்டும் உடனே தூக்கம் வருகிறதே! ஏன், டீச்சர்?” என்று.

தெரியாமலா, தொலைகாட்சிக்கு `முட்டாள்களின் பெட்டி’ (IDIOT BOX) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

பார்ப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது நல்லது என்று யாரோ முடிவு செய்கிறார்கள். நாமும் அதிகம் யோசியாது, சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பார்க்கிறோம். பார்ப்பது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பரீட்சையா எழுதப்போகிறோம்! மூளைக்கு அதிக வேலை கொடுக்காததால், ரசிக்கும்படி இருக்கிறது என்றெல்லாம்தான் தோன்றிப்போகிறது ரசிகர்களுக்கு.
பாட புத்தகங்களானால், அதில் ரசிக்கும்படியாக எதுவும் இருக்காது. மூளைக்கு வேலை கொடுப்பதென்றாலே சிரமம்தான். உடனடியாக என்ன ஆதாயம் கிடைக்கிறது என்றும் யோசனை போகும்.

ஒரு காரியத்தைச் செய்தால் உடனடியாக ஏதாவது நன்மையோ, இன்பமோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் முன்னுக்கு வரமுடியாது.

குழந்தைகளுக்கு இது புரியாததால்தான் முதல் சில வருடங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக அடம் பிடிக்கிறார்கள். விளையாட்டில்தான் அவர்கள் மனம் போகும்.

ஆனால் எப்போதுமே அப்படி இருக்க முடியுமா? எந்தத் துறையாக இருந்தாலும், பணமோ, புகழோ கிடைக்க பொறுமையும் நம்பிக்கையுமாகக் காத்திருக்கும் மனப்பான்மை அவசியம்.

கதை எழுதுவதை எடுத்துக்கொள்ளுங்கள்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் நன்றாக எழுதிவிட முடியாது. அம்மொழியில் பல ரகப் புத்தகங்களையும் படித்தால்தானே எழுதுவது செம்மையாக இருக்கும்? அதுபோல், நிறைய உபயோகமான விஷயங்களையும், நற்பெயர் வாங்கிய கதாசிரியர்களின் படைப்புகளையும் பிரயத்தனப்பட்டு படித்தால் தரம் உயர வாய்ப்பிருக்கிறது.

எழுதியதைப் பலமுறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். `ஐயோ! இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டேனே!’ என்று மனம் தளரக்கூடாது. நம் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத்து வடிவில் கொண்டுவருவதற்குப் நீண்ட கால அனுபவம் தேவை.

என் சொந்தக் கதை (பொறுத்தருள்க!): எட்டு வயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற பேராவல் எழுந்தது எனக்குள்.

பத்து வயதிலிருந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால், எனக்கே புரிந்தது நான் எழுதியது அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை, எந்தப் பத்திரிகையும் ஏற்காது என்று.

`நன்றாக இல்லை என்றால் ஏன் எழுதுகிறாய்?’ என்று என் தாய் கேட்டார்.

`யோசிக்கிறபோது நன்றாக இருக்கிறது. எழுதியவுடன் ஏனோ அப்படி இல்லை!’ என்றேன் குழப்பத்துடன்.

இருந்தபோதும், மனம் தளராமல் எழுதினேன், `வேலையற்ற வேலை! இந்த எழுத்தா நாளைக்கு உனக்கு சோறு போடப் போகிறது?’ என்ற பிறரின் கேலியை அலட்சியம் செய்து.

யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முனைந்து செய்தால் வெற்றி கிடைப்பது உறுதி. சில எழுத்தாளர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்கூட அங்கீகாரம் கிடைக்கலாம். அது அவர்களது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு.

ஒரு பெரிய பெட்டி நிறைய நான் எழுதியவைகள் நிறைந்தன. `குப்பை’ என்று பிறர் கருதினார்கள். அது நான் அடைந்த பயிற்சி என்று பின்பு புரிந்தது.

பல வருடங்கள் கழித்து என் கதை ஒன்று பிரசுரமாகியது. அதன்பின், ஆங்கில நாவல்கள் நிறையப் படித்தேன். இன்னும் படிக்கிறேன். (`பெரியவர்கள் கதையைப் படிக்கக்கூடாது!’ என்று அம்மா கண்டித்துச் சொன்னதிலிருந்தே தமிழில் நிறையப் படிக்க ஆரம்பித்திருந்தேன்).

ஐந்தாண்டுகள் கழிந்ததும், சிறுகதை, நாடகப் போட்டிகளில் பரிசு!

நாற்பது வயதில், `ஆங்கிலத்திலும் எழுதிப் பார்க்கலாமே!’ என்ற யோசனை வந்தது. ஆனால் எழுதியது எனக்கே திருப்தி அளிக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்தேன்.
பிறரது கதைகளில் வர்ணனையைப் படிக்க பொறுமையில்லாது, உரையாடலுக்கு தாவுகிறவள் நான். என் பாணி கரு, நாடகம் (PLOT AND DRAMA) என்று முடிவு செய்துகொண்டேன். எழுத முடிந்தது.

நான் ஆங்கிலச் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றது கண்டு என் பெற்றோருக்குக் கொள்ளைப் பெருமை.

`நீ! ஆங்கிலத்தில் எழுதுகிறாயா! என்னால் நம்பவே முடியவில்லை. I CAN’T GET OVER IT!’ என்று பலமுறை கூறிய என் வயதொத்த உறவினர்களையும், உடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியைகளையும் அலட்சியம் செய்தேன்.

`எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’

`நீங்கள் மத்திம வர்க்கத்தினரைப்பற்றியே நிறைய எழுதுகிறீர்கள். படிப்பவர்களுக்கு போரடித்துவிடும்!’

`ஒரு வேளை, நாம் எழுதுவதெல்லாம் குப்பைதானோ?’ என்ற சந்தேகத்தை என்னுள் புகுத்தப் பார்த்தவர்கள் பலர்.

என்னைப் பாதித்தவற்றை, தெரிந்தவற்றை, எனக்குப் பிடித்தவகையில் எழுதுகிறேன். அதை ஏற்று, பிரசுரம் செய்கிறார்கள். இது போதாதா என்று இப்படியெல்லாம் பேசுகிறவர்களை அலட்சியம் செய்துவிட்டேன். நாம் எழுதுவது எந்த வகையிலாவது பிறரைத் தாக்கினால், அதுவே நாம் அடையும் வெற்றிதான்.

நாம் எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றபின்னும், `என்ன கிழித்துவிட்டாள்!’ என்று புறம் பேசுகிறவர்கள் பொறாமையால் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் தோல்வி அடைவது என்னவோ நாம்தான். நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறவர்களை `நண்பர்கள்’ என்று கருதி ஏமாறாமல் இருப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை.

`நம்மை இவள் அலட்சியப்படுத்துகிறாளே!’ என்ற ஆத்திரத்தில், `கர்வி’ என்று பிறரிடம் அவதூறு பேசுவார்கள். பேசிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.