மார்கழி மணாளன் (6)
க. பாலசுப்பிரமணியன்
திருக்காவலம்பாடி – அருள்மிகு கோபாலகிருஷ்ண பெருமாள்
ஊழிக்கூத்தன் ஒருகால்தூக்கி ஆடினான் ஆடினான்
ஆழிகளாட அண்டங்களாட அவனிகளாட அந்தோ !
அங்கங்களாட அரவமுமாட அகிலத்தில் அரனின்
தக்கத்திமிதோம் தாம்திமி தக்கத்திமி தாம்தோம் !
வெகுண்ட சிவனின் விழிவழி நெருப்பில்
மருண்ட அமரர் வேதியர் தந்தனர் வந்தனம்
சிதறுண்ட சிகையோ சீண்டிய நிலத்தில்
சிவமே சதாசிவமே பதினோரு சிவமே !
பித்தோடு ஆடியபாதங்கள் அமைதியை நாட
பற்றோடு அரங்கா ! பாரினைக் காத்தாய்
பத்தோடு பதினொன்றாய் பிறக்கா வண்ணம்
பற்றோடு பதினொன்றில் பக்கத்தில் நின்றாய் !
சத்தியத்தின் உருவமே ! சாந்தனே! சகலனே!
நித்தியத்தின் தத்துவமே ! நீலனே! நாரணா !
வித்தைகள் கடந்த வேதத்தின் மூலமே !
வேண்டினேன் வந்திடு விடியலைக் காட்டிடு!
சிலையென நினைத்தேன் சிறுமதி சுருங்கிட
கலையென நினைத்துக் கல்லுள் வடித்தேன்
மலையென நின்றாய் திருமலைத் தேவா !
இலையெனச் சொல்லா அருள்மழை அரங்கா!
கவளமாய்த் தருவேன் காதலால் என்னையே
பவளமே! பரிமளா ! பாசமாய் அணைத்திடு
குவலயம் ஈடில்லை கோவிந்தன் அருளுக்கு
நிலுவையில் வைப்பதோ நின்னருள் எனக்கு?