க. பாலசுப்பிரமணியன்

 

திருப்பேர்நகர் – அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்

 ab

திருப்பேர் தனக்கொரு ஆயிரம் கொண்டாலும்

திருப்பேர் தன்னில்  புதுப்பேர் கொண்டோனே !

முப்பேறும் தருகின்ற திருப்பேரா ! முகுந்தா !

எப்பேறும் இல்லாமைக்குத் தப்பேதும் செய்தேனோ ?

 

உப்பேதும் இல்லாமல் உணவருந்தி மகிழ்ந்தாய்

ஒப்பில்லா வயதினிலும் உளமறிந்து மணந்தாய்

தப்பாமல் தருமங்கள் காத்திடப் பிறப்பவனே

அப்பா!! அமுதா !! அனந்தா! அருளாளா !!

 

ஒருவாசம் இல்லாத வனவாசி துர்வாசர்

தருசாபம்  பிணியாகத் தவித்தானே உபமன்யு

நூறாயிரம் உணவிட்டு நூலான மன்னனிடம்

மூதான வடிவத்தில் முன்னின்ற முப்புரனே!

 

உலைகண்ட உணவெல்லாம் ஒருபோதில் உண்டாயே

இலையென்று சொல்லாத மன்னவனும் மலைத்தானே !

மடைதன்னில் நெய்யப்பம் ஒருகுடத்தில் படைத்தே

கொடையாகக் கேட்ட கோவிந்தா! அப்பக்குடத்தானே !

 

அறிந்தேன் உனையென்று அடியார்கள் ஆயிரமே 

கனிந்தே பாடிநின்றார் பாசுரங்கள் நாலாயிரமே 

மருந்தே ! மாமணியே ! மனங்கவர் மாதவனே !

மறைந்தே நின்றாய் மாதவத்தார் மனத்துள்ளே !

 

பனிக்குடம் பிரிந்தபின் பண்படாத வாழ்க்கை 

இருப்பிடம்  தேடி  எங்கெங்கோ  அலைந்ததே !

உறைவிடம் நீயேயென உள்ளமே அறிந்தபின் 

நிறைவுடன் நின்பாதங்கள் தேடியே வந்ததே !

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *