-கவியோகி வேதம்
(கனடாவின் பனிமழை குறித்து எழுதப்பட்ட கவிதை)
சன்னல்வழிப் பார்க்கின்றேன்; சரமழைதான்
பொழிகிறதோ?
என்(று)உற்று நோக்கிநின்றால் இழைஇழையாய்ப் பனிச்சாறு!
‘முகிற்’–பட்டு. கிழிந்ததுவோ? சரிகைசுக்கு நூறாச்சோ?
தொகைதொகையாய் உதிர்ந்துவந்து வீட்டின்மேல் கூரைமேல்
கார்களின்மேல், சாலையின்மேல், புல்லின்மேல் கதவின்மேல்
கூறுகெட்ட வெங்காயப் பனிஉதிர்ந்து கொஞ்சிற்று!
கூரைஎல்லாம் குல்லா! குளிர்ந்ததரை யில்வெண்‘பாய்’
சாரைசா ரையாய்-விரை சரக்கு(உ)ந்தில் ஒளிப்போர்வை!
சின்னசெடி, புல்கொத்து – இவற்றைஒரு ‘பர்தா’-போல்
மின்னியே மறைத்துபனி அட்டகாசம் செய்கிறதே!
இதற்கிடையில் அரசாங்கக் கார் ஒன்று இறகைப்போல்
சுதிவிரித்தே பனிப்பாயைச் சுருட்டி-ஓரம் தள்ளிற்றே!
என்னவெல்லாம் அதிசயம்! இதுவரை அறியேனே!
பின்னும் வெயில்தவிர சென்னையில் பார்த்திலனே!
என்றுஒரு காட்டான்போல் இளிப்புடனே பார்த்திருந்தேன்!
“சன்னல் திறந்தேநான் சரியாகப் பார்த்திடவா?”-.
என்றேயான் பேத்தியிடம் இளம்-‘மதலை’ போல்கேட்டேன்!
“சன்னலைத் திறந்தால்நீ சட்டினிதான்!”—அவள்சிரித்தாள்!

Leave a Reply