-மேகலா இராமமூர்த்தி

வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

dadandchild

திரு. வைத்தியநாதன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.

புகைப்படக் கலைஞருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றி உரித்தாகுக!

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்ற வள்ளுவத்தை இந்தப் படம் காட்சிப்படுத்தியிருப்பதாகவே என் கண்களுக்குத் தோன்றுகின்றது.

இக்காட்சி கண்டு நம் கவிஞர்களின் கற்பனை ஊற்று எப்படியெல்லாம் பாய்ந்திருக்கிறது என்பதை ஆய்ந்துவருவோம்!

***

பிள்ளைக்கலி தீர்க்க, வாராதுபோல் வந்த மாமணியான பெண்மகவின் பெருமையைப் பாராட்டி ஒரு பிள்ளைத்தமிழே பாடிவிட்டார் பெருவை திரு. பார்த்தசாரதி.

பாவையொருவள்கை பிடித்தேனானதடி பல்லாண்டு
பலஆண்டாய்ப் பிள்ளை யிலையெனும் கவலையிலே

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டாகப்
பத்தாண்டுகடந்ததடி, பலனொன்றுமில்லையடி!

ஒருவருக்குத்துணை யொருவர் மட்டும்தானா?..
ஏனிந்தக்கொடுமையடா? யெனும்குறையை இறைவன்கேட்பானா!

குழந்தைவேண்டி கும்பிடாத கடவுளில்லை
குழவியொன்றுபிறக்க ஜாதகத்தில் வழியுமில்லை.

அரசமரத்தையொரு ஆயிரமுறை சுத்திவாரு மென்றானொருவன்
ஆடும்தொட்டிலதில் கட்டென்றான் அயலாரொருவன்

மருத்துவரைப் பாரென புத்திசொன்னானொருவன்,
சோதனைக்குழாய் சோதனைக்கு தீர்வாகுமென்றானொருவன்

ஆளுகொரு வழிசொல்லஅத் துணைவழிகேட்டு
அலையாய் அலைந்தேன் அனுதினமும் திரிந்தேன்..

நன்றியுள்ள நாயும், அழுக்கைக்களைந்துண்ணும்
பன்றியையும். . .பரிவோடு பார்க்கும்போதெல்லாம். . .

வாயில்லா ஜீவனுக்கே வாரிவழங்கும் எம்பெருமான்
வாய்விட்டு அலரினாலும் குழவிவரம் கொடுப்பானில்லை!

நாம்கொண்டவிரதமும், நாம்பெற்றஞனமும் எப்பொதும்
நல்வழிக்கே என்பார்கள் பெரியோர்கள்!

வேண்டுவோருக்கு வேண்டுவன பலகொடுக்கும் பரமன்..
எனக்குமொன்று கொடுத்தான் வேண்டுமதைத் தவறாமல்!

நல்லதொரு நன்னாளில் எனக்கொரு மகள் பிறந்தா ளவளெனைத்
தேன்தமிழில் கவிபாடும் திறன்கொடுத்தாள்!

இறைவனிட மிரைந்துயான்பெற்ற இளயநிலாச்சிரிப்பதனில்
இவ்வியதார்த்த வாழ்வனைத்தும் மகிழ்ச்சி பொங்குதடி!

வரம்பெற்று வாராதுபோல்வந்த நித்தம்வளரு மென்னிளமதிக்கு
சிரி(ஶ்ரீமதி) எனப்பெயரிட்டு சீராட்டி அன்பாலே வளர்த்தேனே.

புண்ணியம்பல செய்தேனுனை ஈன்றெடுக்க
புதுப்பிறவி எடுத்தாலும் நீயே எனக்கு மகளாவாய்

சூரியனைப் போன்றயுன்முகம் பார்ப்பின்
தாமரை போன்றுஎன்முகம் விரிந்துமலரும்

பட்டாம்பூச்சியின் இறக்கைபோன்ற மென்மையுன் விரல்களின்
பட்டுப்போன்ற ஸ்பரிசத்தால், உடல்ரத்தம் உறையுதடி

கனிந்த உன்முகம் காணுகையில், கவலையெல்லாம்
காற்றடித்த மேகம்போல் கரையுதடி நொடிப்பொழுதில்

இருகையால் தூக்கியுனை உச்சி மோர்ந்தால்
இருதயமும் மூச்சுமொருகணம் பூரிப்பால்நிக்குதடி

என்னிதயம் துடிக்க அடைப்பிதழேதும் தேவையில்லை
உன்னிமைத்துடிப்பில் என்னிதயம் சீராக இயங்குமன்றோ.

உன்மழலைப் பார்வையொன்றே போதும்
என்நாவி சைக்கும் பலபாக்கள் நொடிப்பொழுதில்

என் நெஞ்சில்தவழ்தாடு முனைப்பார்க்கும் போதெல்லாம்
“என்நெஞ்சில்பள்ளிகொண்டவன்” பாடல் பலமாகக்கேட்குதப்பா!

***

”தோள்கொடுத்து உன்னைப் பலபடி உயர்த்திய தந்தையை முதியோர் இல்லப் படியேற வைத்துவிடாதே தம்பி!” என்று தோள்சாய்ந்திருக்கும் பிள்ளையிடம் வேண்டுகின்ற தந்தையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

வேண்டாம் அந்த விபரீதம்…

தெரிந்துகொள் தம்பி தெரிந்துகொள்,
தோள்கள் இவை உன்னைத்
தூக்கிச் சுமந்த
தந்தையின் தோள்கள்..

உலகம் பார்க்க உன்னை
உயர்த்திப் பிடித்து,
உயர்த்திக் காட்டிய தோள்கள்..

உன்னை உருவாக்கிடவே
உழைத்து உழைத்து
உரமேறிய தோள்கள்..

அந்தத்
தோள்சாய்ந்த நீ
தோள்கொடு முதுமையில்
தந்தை தலைசாய்க்க..

ஏற்றிவிட்ட அவரை
எந்தக் காரணம் காட்டியும்
ஏற்றிவிடாதே
முதியோர் இல்லப் படியில்…!

***

தோளில் அன்று சுமந்த பிள்ளை தூரதேசம் சென்றுவிட்டதால் அதன் நினைவுகளைச் சுமந்தபடி நிற்கும் முதுமையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

தோளுக்காக ஏக்கம்

சிரசு மட்டும் பிரதானமில்லை
எண் சாண் உடலில்
இதோ இத் தோள்களும் தான்

தோளுக்குத்தான் எத்தனை பெருமை
தோள் கண்டார் தோளே கண்டார் -என‌
பேசுகிறது இராம கதை

அண்ணல் இராமன், தம்பி இலக்குவன்
ஏறிச் சென்றதோ அனுமனின் தோளிலே தானே

இன்பச் சுமையை இதயம் தாங்கும்
துன்பச் சுமைக்கென இருப்பது இத்தோளே

காதலி, பிள்ளை, தோழ்ன், தோழி இவர்களை மட்டுமா
பெற்றவர்களையும் சுமக்கவே இத் தோள்கள்

ஆனால் இன்றோ அந்நிய நாட்டிற்கு சென்று விட்டது இத் தோள்
படிப்பு பட்டம் வலிமை கொண்ட தோள்களை
வாரிக் கொடுத்து விட்டு வாசலில்
ஏங்கிக் கிடக்கிறது நம்பிக்கையை கையிலேந்தி
இளமையும் முதுமையும்
வலிமைத் தோளில் சாய்வதற்கும் வழி நடத்தவும்

***

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

சுகமான சுமை

அன்னை எனக்கு தந்த சீர் தனமே!
சுமையே தெரியாத ஒரு சுகமே !
அன்புக்கு பொருள் சொன்ன இலக்கணமே!
ஈருயிர் ஓருயிராய் வடிவெடுத்த அதிசயமே !
அன்னை, தந்தையை உருவாக்கிய அழகு பிரம்மாவே !
தோளில் நீ வந்தமர்ந்ததால்
உன் தோழமை புரிந்தது!
தலைக்குமேலிருந்து எனைப் பார்க்கும் பார்வை!
உயிரெழுத்தாய் நீ இருப்பாய் என
உணர்த்தும் பார்வை!
உள்ளுக்குள் தன்னுடல் கொடுத்து
அன்னை சுமந்தது ஒரு பத்து மாதம்!
உலகத்தில் உன்னை ஆளாக்க
தந்தை சுமந்தது இரு பத்து வருடம்!
சுமப்பது சுகமாய் இருந்தாலும்
உன் தோளில் உறங்க மனம் ஏங்குதடா!
நீ நிழல் தரும் காலம் வரை கண்ணை இமை போல! உன்னை காத்திருப்பேன்!
தந்தை என்னும் உறவு தந்து
என் தந்தையின் உயர்வை புரிய வைத்தாய்!
வாழ்வுப் பாடம் கற்றுத் தந்தாய்! நீ தான் எந்தன் தகப்பன் சாமி!
தன்னலமில்லா தியாகத்தினால்
தகப்பன்மார் அனைவரும் அகிலத்தில் சாமியன்றோ!

கணவன் மனைவியாக மட்டும் அதுவரை வாழ்ந்தவர்களைத் தாய்தந்தையாய் உருவாக்குகின்ற, படைக்கின்ற மழலையும் ஒருவகையில் பிரம்மாதான்! அதுமட்டுமா? வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றோருக்கு வகையாய் விளங்கவைப்பதால் அதனை ஆசானாகக் கொள்வதிலும் பிழையில்லை. அடடா! சின்னஞ்சிறு மழலையொன்று அவனியில் எடுக்கும் அவதாரங்கள்தாம் எத்தனை எத்தனை!

’தகப்பன்சாமி’ என்று தன் கவிதையில் குழந்தையை வாயூறிக் கொண்டாடும் திரு. பழ. செல்வமாணிக்கம் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "படக்கவிதைப் போட்டி 94-இன் முடிவுகள்"

  1. தந்தையின் உணர்வுகளை சொல்லும் என்னுடைய கவிதையை இந்த வாரத்திற்கான சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்த திருமிகு.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும்,வல்லமைக்கும் என் உளமார்ந்த
    நன்றி-பழ.செல்வமாணிக்கம்

  2. வாழ்த்திய கவிஞர் திரு.பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.