செண்பக ஜெகதீசன்

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும். (திருக்குறள் -707: குறிப்பறிதல்) 

புதுக் கவிதையில்…

உவகையிலும் வெறுப்பினிலும்,
உண்மையைக் காட்டிவிடும்
மனிதனின் முகம்… 

அம்முகத்தைவிட
அறிதிறம் மிக்கது
எதுவுமில்லை…! 

குறும்பாவில்…

உண்மையைக் காட்டிவிடும் மனிதமுகம்
அவன் மகிழ்ச்சியிலும் வெறுப்பினிலும்,
அதைவிட அறிதிறமிக்கது ஏதுமில்லை…! 

மரபுக் கவிதையில்…

மகிழ்ச்சியில் மனிதன் இருந்தாலும்,
     -மற்றவர் மீது வெறுப்பதையே
அகத்தில் வைத்துக் கொண்டேதான்
     -அழுத்த மாக மறைத்தாலும்,
முகமது காட்டிக் கொடுத்துவிடும்
     -மனிதனின் உண்மை நிலையினையே,
அகமதைக் காட்டும் முகத்தைப்போல்
     -அறிதிற மிக்கது வேறிலையே…! 

லிமரைக்கூ…

மகிழ்ச்சி வெறுப்பின் எல்லை
மறைக்காது காட்டும் மனிதமுகம்போல் வேறு
அறிதிறம் மிக்கது இல்லை! 

கிராமிய பாணியில்…

காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்கும்
மனுசமொகமே காட்டிக்குடுக்கும்…

அவன்
சந்தோசமா இருந்தாலும்,
அடுத்தவன்மேல வெறுப்புலத்தான்
சங்கடத்தில இருந்தாலும்
அவன்மொகமே காட்டிக்குடுக்கும்… 

எதுவுமில்ல எதுவுமில்ல
அதுபோல எதயுமே கண்டுபுடிக்கும்
கருவிதான் எதுவுமேயில்ல…

காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்கும்
மனுசமொகமே காட்டிக்குடுக்கும்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.