-மேகலா இராமமூர்த்தி

வானவீதியில் கானம்பாடித் திரியும் அழகுப் புறாவைத் தன் ஒளிப்படப்பெட்டியில்  களிப்போடு அடைத்துவந்திருக்கிறார் திரு. சரவணன் ரவி. அப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

pegion

பறவைகளில் புறாக்கள் தனித்தன்மையானவை. அவற்றின் இயல்பை விளக்கவந்த பாவேந்தர் பாரதிதாசன்,

ஒருபெட்டைத் தன் ஆண் அன்றி
வேறொன்றுக்கு உடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப்பைப்போல் 
ஒளிபுரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்பதில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற்றொன்றை நாடும்!  என்று அவற்றின் தன்னேரிலா ஒழுக்கத்தை, ஓர் ஆணுக்கு ஒரு பெட்டை என்று வாழும் அவற்றின் உயர்குணத்தைப் போற்றுகின்றார்.

இனி, புறாவுக்குப் போட்டியாகத் தம் கற்பனைச் சிறகைக் காற்றில் விரிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்!

***

”கடவுள் படைப்பில் கண்ணைக் கவர்பவை பறவைகள்! வானில் பறக்கும் ஆசையை மனிதனிடம்  விதைத்தவை பறவைகள். வீடுகட்டி வாழ்வதெப்படி என்பதைக் கூடுகட்டி விளக்கியவை பறவைகள். அம்மட்டோ? இல்லறத்தை நல்லறமாய் நடாத்தவும் மாந்தர்க்குப் பயிற்சிதந்தவை பறவைகள்” எனப் பறவைகளின் இறவாப் புகழை மறவாது பாடுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

 

பறவையைக் கண்டேன்

கடவுள் படைப்பிலே நமது
கண்ணைக் கவர்வது,
நெஞ்சில் நிலைப்பது
பறவையினம்.
நீர்க்கோள் தோன்றி
பலயுகம் கடந்து
நாலறிவு பெற்ற புள்ளினம்
நீல வானில் பறந்தன !
பறவைகள்
பலவிதம், பல்லினம், பலநிறம் !
ஆறறிவு மானிடர்க்கு
வெறும் நாரில்
வீடு கட்டச் சொல்லிக் கொடுக்கும்
கூடு கட்டும்
தூக்கணாம் குருவி !
பறந்து செல்லும் பருந்து
வானூர்தி ஆக்க விதி வகுக்கும் !
பஞ்சவர்ணக் கிளி
சொன்னதைச் சொல்லும் !
ஆண், பெண் புள்ளினம்
ஒன்றாய்
இல்லறம் நடத்திக் காட்டும் !
மானிடர் போல்
ஆணும், ஆணும் கூடா !
பூத்தேன் சேர்க்கும்
தேனீக்களும் பறவை இனமே !
உயரப் பறக்கும் கழுகு
உள்ளவ தெல்லாம் உயர்வாய்
எண்ணிடச் சொல்லும் !
வண்ண வண்ணப் பறவைகள்
வானில் பறப்பதே
காணக் கிடைக்கா காட்சி !

***

”விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே! காதலுக்குத் தூதுசெல்வதும் நீ; மோதலைத் தடுக்க அமைதிப் பாதை அமைப்பதும் நீ; கவிவேந்தர் பாரதியிடம் செல்வாய்த் தூது! புவிமாதர் வாழவும், தாய்மொழி பழிப்போர் வீழவும் கருத்தாய்க் கவி வாங்கிவா!” என்று புறாவிடு தூது நடத்துகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

பறவை விடு தூது

விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே !
சிறகடித்துப் பறக்க உள்ளம் ஏங்குதம்மா!
சிகரம் தொட சிந்தை விரும்புதம்மா !
நிலவில் உறங்க ஆசை வந்ததம்மா !
நீ சிறகடிக்கும் ஓசை, லயம் சேர்ந்த இசையம்மா!
உயரப் பறப்பதினால் உன் எண்ணமும் உயர்ந்ததம்மா !
புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்!
எங்களுக்கு ஞானம் வரும், நீ காட்டும் வழியில்!
நீ செல்லாத தூரம் இல்லை!
சொல்லாத சேதி இல்லை!
அமைதித் தூது செல்ல உனக்கு நிகர் யாருமில்லை!
நீ சென்ற தூது ஒரு போதும் தோற்றதில்லை !
அமைதிக்கு பரிசு, வெற்றியன்றி வேறில்லை!
காதல் தேவதை, உண்மையில் நீ தான்!
நீ சென்ற காதல் தூது எத்தனை எத்தனை!
உன்னால் இனைந்த காதலர் தான்
எத்தனை எத்தனை!
நீ எனக்காக தூது சென்றிருந்தால்!
எனக்கொரு காதலி கிடைத்திருப்பாள்!
இருந்தாலும் என்ன ! அழகுப் புறாவே!
எனக்கு இப்போது தூது செல்வாயா?
மனைவியின் மனதறிந்து வேண்டியதைச்
சொல்வாயா!
பாரதியிடம் தூது சென்று கவிதை ஒன்று
கேட்பாயா ?
தமிழை இழிவு செய்யும் மனிதரெல்லாம்
ஊமையாய் போவதற்கு கவிதை கேட்பாயா!
பெண்ணை இழிவு செய்யும் கயவரெல்லாம்
செத்தொழிந்து போவதற்கு கவிதை ஒன்று
கேட்பாயா?
கண்ணால் துகில் உரியும் , துச்சாதன ஆண்களெல்லாம் !
குருடாய் போவதற்கு வழி கேட்டுச் சொல்வாயா?
பிள்ளைகள் மனதினிலே பாசத்தை விதைப்பாயா!
ஈன்றவரைப் பேணாத பிள்ளையெல்லாம்
முதியவராய் உடன் மாற வரம் பெற்று வருவாயா?
மாமியார், மருமகள் இணக்கமாய் இருப்பதற்கு
வழி ஒன்று சொல்வாயா!
உழவுத் தொழில் தான் உலகில் உயர்ந்ததென்று
ஊரெங்கும் சொல்வாயா?
ஆறறிவு பெற்றதினால் அகந்தை மிகக்
கொண்டு அழிந்து வரும் மனித இனம்
மீண்டு வருவதற்கு நல்ல வழி சொல்வாயா!
நான் விரும்பும் கோகிலமே !

***

”கொண்டவனுக்கு உண்மையாய் வாழும்; உண்ட இரையுமிழ்ந்து குஞ்சுகட்கு ஊட்டும்; தேடியதைப் பதுக்காது கூடியுண்ணும்; பல்வண்ணம் காட்டி நம்எண்ணம் கவரும்; அன்புக்குத் தூது செல்லும்; அமைதிக்கும் பாதை சொல்லும்” என்று புறாவின் உயர்பண்புகளைப் பட்டியலிட்டுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.   

மனிதனும் புறாவும்

ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
உயிரினமாம் அரியபுறா..!

கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
கூடிவாழும் கூட்டினம்..!

பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
அடைகாக்கும் தந்தைப்புறா..!

பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
பாடல்போன்ற முனகலோடு..

ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
பலமைல்பறக்க சக்தியுண்டு..!

வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
தன்னையே வளையவரும்..!

வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
பன்னிறவண்ண முன்பகட்டு..!

வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
பழகிடுமடிமைப் பண்பு..!

***
கலக்கமின்றித் தடை தகர்த்து இலக்கைத் தொடக் கற்றுக்கொள் சிறகடிக்கும் இந்தச் சின்னப் பறவையிடம்” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

கற்றுக்கொள்!

சிறகடித்து சிகரம் தொடும்
சிறு பறவை., இளைப்பாராமல்..
கற்றுக்கொள் அதே போல உழைத்துச் சிகரம் தொட..

வெட்ட வெளியில் சலிப்பின்றி
வெயில் பாராமல் சுற்றித் திரியும்..
கற்றுக்கொள் அதே போல உழைத்து முன்னேற..

தடைகளைத் தட்டி எறிந்து
இலக்கை எட்ட அயராது உழைத்தால்
தொடலாம் வானை.. வண்ணப் பறவையைப் போலே..

***

வானில் வட்டமிடும் வண்ணப் பறவை விண்ணைத்தொடும் எண்ணச் சிறகை நம் கவிஞர்களுக்கு வழங்கியிருப்பதை அவர்தம் கவிதைகள்வழி அறியமுடிகின்றது. பாராட்டுக்கள் கவிஞர்களே!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

தெரிந்துகொள்…

சிறகை விரித்தது பறவை,
சின்னதாகிப்போனது வானம்..

உழைப்பு எழுதிய கவிதை,
உயரம் தாண்டுது வனப்பு..

துணிச்சல் போட்ட பாதை,
துச்சமானது தூரம்..

இயற்கை எழுதிய கவிதை,
இன்னும் வனப்பானது வையம்..

தெரிந்துகொள் மனிதா,
தேவைப்படுகிறது உனக்கு-
பறவையின் திறமை…!

”முயற்சி எனும் சிறகை விரித்தால் அகன்ற வானமும் உள்ளங்கைக்குள் அடங்கும்! துணிச்சல் எனும் பாதை போட்டால் தூரமும் துச்சமாகும்!” எனும் பெரிய உண்மைகளையெல்லாம் சிறிய பறவையொன்று தன் செயலால் விளக்கிடுதே!” என்று பறவையின் திறமையை வியந்திடும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் தகுதியைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *