படக்கவிதைப் போட்டி 108-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்திருக்கும் பச்சைப்பசேல் காட்சியை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கான கருவாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.
‘பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே’ என்று இந்தப் படத்தைப் பார்த்ததும் நமக்கும் பாடத்தோன்றுகிறது!
வளமையின் வண்ணம் பச்சை!
குளுமையின் வண்ணம் பச்சை!
எழிலான இந்தப் படத்துக்கு ஏற்றமிகு கவியெழுதக் காத்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு வழிவிட்டு நான் விலகுகிறேன்.
******
”குவளையில் நீரெடுத்துக் குளித்தது போதும்! கேணியிலும் அருவியிலும் கழனியிலும் குளியல் செய்வோம் ஆனந்தமாய்! நகரங்களில் நரகவாழ்க்கை வாழும் பிள்ளைகளே…! நீங்கள் உண்ணும் அரிசிச்சோற்றைத் தரும் நெல் மரத்தில் காய்க்கவில்லை; வயலில்தான் விளைகிறதென்று அறிந்துகொள்ளுங்கள்; உண்மை வாழ்வை இனியேனும் புரிந்துகொள்ளுங்கள்!” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
நாம் நிலைக்க நீர்: உயிரின் ஆதாரம் உணவாகும்
உணவின் ஆதாரம் பயிராகும் !
பயிரின் ஆதாரம் நீராகும் !
நீரின் ஆதாரம் மழையாகும்!
மழையின் ஆதாரம் மரமாகும்!
மரம் நிழல் தரும்!
பசிக்கு கனி தரும்!
நச்சுக் காற்றைத் தான் ஏற்று!
நல்ல காற்றை நமக்குத் தரும்!
தாயும், மரமும் ஒன்றாகும்!
கொடுப்பதில் கடவுளுக்கு நிகராகும் !
நீர் நிலைக்க மரம் வளர்ப்போம் !
நாம் நிலைக்க நீர் காப்போம் !
கேணியில் நீர் இறைத்துக் குளித்ததுண்டா!
அருவியில் தலை வைத்துக் குளித்ததுண்டா !
பயிருக்கு நீர் இறைக்கும் இறைப்பானில்
குளித்துக் களித்ததுண்டா !
குவளையில் நீர் எடுத்துக்
குளித்தது முடியட்டும் !
அலை பேசியில் அனுதினமும் தான் பேசி
வாழ்க்கையை தொலைத்தது இன்றோடு போகட்டும் !
இன்பம் தரும் இல்லத்தில் தனித் தீவுகளாய்
இருந்ததெல்லாம் இன்றோடு தீரட்டும் !
கிராமத்து வாழ்க்கையை நகரப் பிள்ளைகள்
உணரட்டும் !
நெல்லில் இருந்து தான் அரிசி வரும் என்று
கட்டாயம் தெரியட்டும் !
நெல் விளைவது மரத்தில் அல்ல என்ற
உண்மை விளங்கட்டும் !
உணவு தரும் உழவர்களின் உழைப்பு
புரியட்டும்!
இயந்திர வாழ்க்கையை இன்றோடு
மறக்கட்டும் !
விளை நிலங்கள், மனை நிலமாய்
மாறாமல் இருக்கட்டும்!
*****
”அருவியில் குளிப்பதிலும் அலைகடலில் குளிப்பதிலும் இன்னபிற நீர்நிலைகளில் குளிப்பதிலும் சாலச் சிறந்தது வயலில் பாயும் நீரில் குளித்துக் களிப்பதே” என்பது திரு. செண்பக ஜெகதீசனின் தீர்மானமான கருத்து.
உயிர் நீர்…
அருவியில் உருகிடும் நீரினிலே
ஆடிப் பாடிக் குளிப்பதிலும்,
உருவினில் பெரிய அலைகடலின்
உப்பு நீரில் குளிப்பதிலும்,
அருகினில் ஆறு குளங்களெனும்
ஆயிரம் தீர்த்தம் அமிழ்வதிலும்,
பெருமை மிக்கது நம்வயலில்
பாயும் நீரில் குளிப்பதுவே…!
*****
காலமாற்றம் இயற்கைக்குக் காலனாய் வாய்த்திருக்கிறது. நீரோடை எல்லாம் வறண்ட பாலையாய்க் காட்சிதருகின்றது. பார் செழிக்க நீர்வேண்டும்; நீர் கிடைக்க மழைவேண்டும். அப்போதுதான் கழனிகள் செழிக்கும்; கனவாய்ப் போன பசுமைப் புரட்சி நனவாகும். மக்கள் வாழ்வும் வளமாகும் என்கிறது பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதை.
பசுமைப் புரட்சி ஓர் கனவு?
பச்சை வயல் பசுமைக் கதிர்..!
பாய்ந்தோடும் குழாய்த் தண்ணீர்..!
பயிர்கள் குவிந்த யிடம்…பசுமைக்கு..
பச்சைத்தண்ணீர் ஒருகொடை..!
பசிபோக்கும் நிறமும் இதுவே…நிலைக்கும்..
பாரினிலோர் தொழிலிதுவே ..!
மின்னும் நிறத்தில் பச்சை வண்ணம்..!
கிள்ளைமொழி பேசும்கிளியின்நிறம்..!
பச்சை சூழ்வயல் பார்க்கையில் நெஞ்சில்..
பரவசம் தோன்றிடும்..!
கொஞ்சும் செழுமை பசுமை எழுச்சியாய்..
நெஞ்சம் நிறைந்திடுமின்பம்..!
கால மாற்றத்தால் இயற்கை அழகையினி..
காண்ப தரிது..!
கனிந்த நீர் ஓடையெலாம் இப்போது..
கழிவுநீர் ஓடையானது..!
வானுயர்ந்த கட்டிட மதன்கீழ் மரம்போலே..
வரிசையாய் வாகனங்கள்..!
அளவற்ற அறிவியலின் மதி வளத்தால்
பிளாஸ்டிக் கழிவுகள்..!
சேறுகளில் நீரீரம் வற்றி விளைநிலத்துக்கு..
ஊறுவிளை விக்குமவலம்..!
கயல் கழனி கட்டிட மயமாக..
வயலெங்கே போனது..!?
ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து..
ஒழுகுகிற அமிலமழை..!
தடுப்பணை கட்டி நேசத்தையும் பாசத்தையும்..
தடுக்கின்றனர் அண்டைமாநிலத்தார்..!
பெருங்கடன் சுமையெனும் தாகத்தைப் போக்க..
சிறுநீர்குடிக்கும் போராட்டம்..!
செயற்கை இரசாயன தீங்கின்றி மக்கள்வாழ
இயற்கையை நேசிநீ..!
வானத்தின் கனிந்த கண்ணீர் ஒன்றேநம்..
ஆனந்தமெனக் கொள்வோம்..!
வான் பொய்க்கா நிலை வேண்டும்..நலம்
வாழும் வரம்வேண்டும்
பசுமைப் புரட்சி தழைத் தோங்க..
பாரினில் மழைபொழியவேண்டும்..!
எங்கும் பசுமை எதிலும் பசுமையென..
பொங்கும் புரட்சியாய்..
தொலைந்து போன எண்ணங்கள் மறுபடி..
உலர்ந்திடாது மலர்ந்திடுமா?..
*****
சேற்றுவயலில் காற்றாடக் குளித்துக் களிப்பதிலுள்ள இன்பத்தை, நீரின்றிப் போனால் ஊர்கள் சீரின்றிப்போகும் அவலத்தைத் தம் கவிதைகளில் அழகாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…
நீரின்றி அமையாது உலகு
தலையசைக்கும் நாற்று
தாலாட்டும் காற்று
வயல்வெளியின் குளுமை
வாலிபனின் கும்மாளம்
சுட்டெரிக்கும் அனலில்
பசுமைக் குடைபிடித்துக் குதூகலக் குளியல்
காட்சிப் படிமங்கள் காலச் சுழற்சியில்
கனவுகளாய்…
விவசாயி செய்யும் வேளாண்மையை
விவரமறியாய் தலைமுறைக்குக் கற்பிப்பது யாரோ?
கைவிடப்பட்ட இயற்கை
தரிசு நிலமாக,
தாரை வார்க்கப்பட்ட விலைநிலங்களாக,
கிணறு தோண்டிச் சேகரித்த நீரெங்கே?
நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் களவாடிய
நரியின் தடங்கள்
மணல் கூட மிச்சமில்லை
ஊற்றுநீர் ஊற்றெடுக்க மரமில்லை
மரம் வளா்க்கவோ மனமில்லை
பாராள நினைக்கும் மனிதனே!
பணம் பாதாளம் வரை பாயும்
பள்ளம் பாய நீருண்டா?
பாதாளம் தோண்டினாலும் நீரில்லை
பகுத்தறிய வேண்டுமையா நீயும்
நாகரிக மனிதா!
மாளும் இயற்கையை மீட்டெடுத்தால்
பூமியின் மார்பகங்களில் நீரமிர்தம் நீளும்
பூபாளம் பாடலாம் நாளும்!
நீரின்றி அமையா யாக்கை இது. வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? என்றான் மகாகவி.
ஆனால் இந்தத் தலைமுறைக்கு நீரின் அருமை தெரியவில்லை; ஆற்றை, அதன் நீரோட்டத்தை அழியாது காப்பதன் அவசியம் புரியவில்லை. அதனால் அல்லவோ நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் மணலைக் களவாடிய நரிகளின் தடங்கள் தென்படுகின்றன. பாருக்கே சோறூட்டிய புலிக்கொடி பறந்த சோணாட்டு விவசாயிகள் இன்று வறட்சி நிவாரணம் கேட்டுத் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்தும் அவலத்தை கலியின் கொடுமை என்பதா? இல்லை…விதி செய்த சதி என்பதா?
மாளும் இயற்கையை மீட்டெடுத்தால் மட்டுமே பூமித்தாயின் மார்பகங்களில் நீரமிர்தம் ஊறும் எனும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

