”கண்ணன் அனுபூதி’’
——————————————–

170628 -New Forever -lores

கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
உனைஏன் கேட்கநான் உண்டு….!
உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்….!

விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….!
துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
பாரா திருப்பதேன் பகர்….!
பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
நரஹரியே மோனத்தூ ணாக்கு….!
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….(10)
இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன்
மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப்
பார்க்காத போதும் பாடப் பரவசத்தில்
கார்கால மேகத்தில் காண்….!

காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம்
கோர்க்கும் குயுக்தியின் கண்….!

கன்னங் கருத்தது காரிருள் போன்றது
நண்ணும் நமக்கொளி நாளது -முன்னம்
பிறக்காது பின்னர் இறக்காதாம் இன்னும்
திறக்காசொர் கத்தாள் அது….!

அதனால் இதுவாய் இதனால் அதுவாய்
மதனால் மயங்கும் மனமே -முதலாம்
பதியாய் இருந்து பசுக்களை மேய்ப்போன்
கதியாய்க் கிடக்கக் களிப்பு….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.