கிரேசி மோகன்

—————————–

பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்
மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே ,பெருமாளே சரிதானே….(1)

நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
நோய்வாய் கிடந்து வளைந்த நேரத்தில்
தாய்போல் தேற்றி தூக்கி நிறுத்த வல்ல
மாயா ஜால மருந்தாமே பெருமாளே சரிதானே….(2)

கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்
நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
பூணல் பொலிவாமே பெருமாளே சரிதானே….(3)

முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
பயமில்லையாமே பெருமாளே சரிதானே….(4)

கள் ஒழுகு மலர் தேடி கருவண்டு மொய்ப்பது போல்
உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா
கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
தெள்ளமுதப் பிரபந்தம் சொல் பெருமாளே சரிதானே….(5)

சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்
புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்
நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
பலன் பரம் பதமாமே பெருமாளே சரிதானே….(6)

பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்
நித்திய கல்யாண வைபவன் அருளால்
முத்தி அடைவாராமே பெருமாளே சரிதானே….(7)

இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
செல்லாத இவ்வாழ்வை செலவழிக்க முயலாமல்
மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
எல்லாமும் தெளிவாமே பெருமாளே சரிதானே….(8)….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.