கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கல்லில் கலைநயம் சொல்லில் பொருள்மயம்
துள்ளும் அபிநயம் தோற்றம் -உள்ளும்
புறமும் உலவிப் பெருகும் பலவாம்
இறைவன் அறிவே இவள்….
”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
—————————————–
எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
தின்னும் பசியவள் தீராத தாகமவள்
உண்ணா முலையவளை உண்….!
இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
பக்தித் துறையவள் முக்தி அறையவள்
சக்தியுறை பாதம் சரண்….!
முதிர்ந்த தவத்தோர் மரத்தில் இருந்து
உதிர்ந்த சருகுகளை உண்பர்: -புதிரிவளோ,
உண்ணா மலையாய், உறுதியுடன் நின்றடைந்தாள்
பின்நாள் அபர்ணா பெயர்….!
வெண்பா அல்ல வேறு….!
——————————————–
கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே (OR)தோழி எனஅவளே….கிரேசி மோகன்….!
அம்பாள் பஞ்சகம்
(க்ரேஸி மோகன்)
—————————————————————————————————————————
மதியது கொண்டவனின் – மரகத
மங்கைக்கடியவன் முன்
விதியது வீழ்ந்திடுமே ! – வெவ்விய
வினையது சாய்ந்திடுமே !
கதிர் முன் பனி போலே – கவலைகள்
கரைந்து போகுது பார் !
எதிர் வரும் துன்பெமெலாம் -என்னிடம்
என்னிடம் ஏவல் செய்யுது பார்! (1)
கருமயிலே, பரமன் -கபாலி
கணவருடன் அழகாய்த்
திருமயிலாப் புரியில் -திகழும்
தேவி பராசக்தீ !
ஒரு பொழுதும் மறவேன் -உமையே
ஓமெனும் மந்திரமாய்
உறைபவளே வருவாய் -உலகில்
உழலுமெனக் கருள்வாய் (2)
அம்மா என்றுனையே -அடியேன்
ஆசை மனம் கொண்டு
இம்மா புவியினிலே -இயம்ப
இமயக் கரு முகிலே
சும்மா நிற்பதுவும் -சரியோ
சொல்வாய் சிவ சக்தீ !
பெம்மான் சொக்கருடன் -பிடியே
பிள்ளை என் முன் வருவாய் ! (3)
பச்சை நிறத்தவளே -பதியின்
பாகம் கொண்டவளே
அச்சை ஒடித்திடுமோர் -அழகன்
ஆனை முகன் தாயே !
மெச்சத் தகும் ஊராம் -மயிலை
மாது மஹா காளி !
பிச்சை அளித்திடுவாய் -பரமே
பக்குவ மனமதனை ! (4)
வள்ளிக் குறுதுணையாய் -வேலன்
வளர்ந்த தொரு மலையாம்
வெள்ளிப் பனி மலையில் -வாழும்
வேந்தற் குரியவளே !
உள்ளக் கோவிலதில் -உனை நான்
உறங்க வைத்திடுவேன்
தெள்ளத் தமிழ முதால் -தாயுனைத்
தாலாட் டிடுவேனே ! (5)
*********************************************************************