-மேகலா இராமமூர்த்தி

shadow lighting

திரு. பார்கவ் கேசவனின் இருளும் ஒளியும் உறவாடும் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

நிழலோவியமாய்ப் பெண்; அவளருகே அழலுருவாய் ஓர் ஒளிவட்டம். இருளும் ஒளியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லாமல் சொல்கிறதோ இந்த நிழற்படம்?

ஒளிகண்டு உவக்கும் மனித மனம் இருள்கண்டு மருள்கின்றது. 

படிமம், குறியீடு போன்ற பொருண்மைகளைக் கொண்டு உட்பொருளை நுட்பமாய் விளக்கும் புதுக்கவிதை போல், காண்போரின் உளப்பாங்குக்கேற்ப உருக்காட்டும் இந்த ஒளிஓவியம்குறித்து நம் கவிவலவர்கள் என்ன சிந்தித்திருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்.

*****

”சிவந்த கடல்போல் எரியும் என் மனத்துக்கு ஒற்றடம் கொடுக்கும் நிலவுப் பறவையே! உன் மோன கானத்தை இன்னும் பாடு! விடிந்ததும் உன்னைக் கடந்துபோகிறேன்” எனும் இளம்பெண்ணின் எண்ணக்குமுறலை வண்ணமுறப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. சந்திரா மனோகரன்.

நிலாப் பேச்சு

தொலைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த வெண்பறவைக்கு
துயரம் என்பதே இல்லையா ?
அதன் விழிகளுக்கு யாரைப் பிடிக்கிறதோ தெரியவில்லை
ஓர் இளம்பெண்ணின் பறவை ஓலம்
அந்த செவிட்டு நிலவுக்கு எட்டாது !
அதன் கதகதப்பிலும் அப்பிக்கிடக்கும் இருளிலும்
அவள் நினைவுகள் நீர்த்துப்போனவை
இன்னும் பாடு ….இன்னும் பாடு !
உன் சப்தமற்ற இசையில் விடிந்ததும் கடந்துபோவேன்
நிலவு பாவம்துணையற்ற ஏகி !
ஒருவேளை உன் பிம்பத்தின் சாயலில் நானும் …?
கடலிலும் , கரையிலும் , மணலிலும்
சிப்பிபோல் கிடக்கும் உன்னை சேமிப்பேன் அப்போது
சலசலக்கும் நீர்வெளியில் நீ சரசமாடுகிறாயே
ஆயுசுக்கு அது போதும் எனக்கு !
என் மௌனத்தை உடைப்பதும் , கட்டுவதும்
உன் பாங்கு ஒப்புமையற்றது !
சிவந்த கடல்போல் சிலபோது என்மனம் எரிகிறது
உன் ஒற்றடம் பெரிது அதை அணைப்பதற்கு
உயிரற்ற அவன் நிழல்களை இனி நீ நனைக்காதே !
கடந்துபோன நதியின் மிச்சம் இல்லை
கடலின் கருமையில் கரைய மறுக்கும் என் நினைவுகளில்
இறந்தவனின் மோனம் நொறுங்கிய சிற்பமாய் ..
கற்பாறையாய் இறுகிப்போன என் மனசில்
சிதறும் உன் ஒளிக்கதிர்களில் மிளிரும் என் எதிர்காலம் ..

***** 

”அலர் நீ! மலர் நீ! என்று கொண்டாடிய காதற் கணவர் ஈசனின் திருவடி மலர் ஏகிவிட, அவர் எப்போது வருவார் தன் கலிதீர” எனக் காத்திருக்கும் மங்கை இசைக்கும் சோக கீதத்தைக் கேட்கிறோம் திருமிகு. ஹேமா வினோத்குமார் கவிதையில். 

நீ!! நான்!! தனிமை!!

பலயுகங்களாய்த் தனிமையில் நீ
நாட்களில் நான்!!
தனிமையில் வெறுப்பு
இவைகள் தமக்கில்லையோ??
மும்மாதங்களுக்கு முற்பொழுதில்
பச்சை நிறப் பட்டுடுத்தி
மஞ்சள் முகம் பூசி
மணங்கமழ மல்லிகைசூடி
நெற்றித் திலகமிட்டு
காதிற்கினிய வளையோசையுடன்
பெற்றோர் மற்றோர் உடனிருக்க
காதலித்து கரம்பற்றினேன் என் கள்வனை!!
மும்மாதந்தள்ளி மகிழம்பூவாய்
ஈரலர்கள் என்னுள் பூத்திருக்க
பகிர்வதற்குள் விண்ணுலகமாள
சென்றாரோ என் கணவர்!!!
அலர் நீ!!அகலம் நீ!!!என்றவர்
இப்பொழுது ஈசனிடம்!!!
பெற்றெடுத்த தாயிருக்க
கரம்பற்றிய நானிருக்க
அவசர பணியாற்ற
விண்ணுலகம் சென்றாரோ??
வெகுண்ட மனதோடு
மீண்டும் வருவார் என்றெண்ணி
நம்பிக்கையில்!!
உன்னைப்போல் நானும்!!!
தனிமையில்!!!

***** 

நிலவின் கறையைத் தனக்குத் தந்து, கரைசேர்க்க மறந்துசென்ற கண்ணாளனை நினைந்துவாடும் பெண்ணைப் பார்க்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் பாவில்.

வருவானா…

நீதான் மண்ணில்
நிலவென்று சொல்லியவன்,
நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..

நிலவே
உன் கறையை
எனக்குத் தந்துவிட்டான்..

சொன்னதுபோல வருவானா,
நான்
சோர்ந்துபோக விடுவானா..

சொல்லிடு நிலவே அவனிடமே,
சீக்கிரம் வரச்சொல் என்னிடமே…!

*****

”வானுக்கு வெளிச்சம் தரும் வெண்ணிலவைப் போல் உன் வாழ்வுக்கு வெளிச்சம் தர பெண்ணிலாக்கள் உண்டு; ஆடவ ஆதவர்களும் உண்டு! ஆதலால், அறியாமை இருள்விரட்டி அறிவொளி கூட்டப் புறப்படு!” என்று இருட்டில் நிற்கும் பெண்ணைத் தெருட்டுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

வெளிச்சம் தந்த இருள்:

உலகிற்கெல்லாம் வெளிச்சம் தரச் செங்கதிரோன் வந்து விட்டான் பெண்ணே!
 இருட்டிலே இன்னும் ஏன் நிற்கின்றாய் பெண்ணே!
பாரதி பெண் விடுதலைக்கு, குரல் கொடுத்ததற்கும் பின்னே!
உனக்கு மட்டும் ஏன் விடியவில்லை பெண்ணே!
குடும்பத்திற்கே வெளிச்சம் கொடுத்தாய் பெண்ணே!
இருந்தாலும் உன் புகழை மறைத்தார் இருளின் பின்னே!
கருவறை இருட்டில், உயிர்களைச் சுமந்தாய் பெண்ணே!
கைம்மாறாய் கிடைத்தது இருளடைந்த வாழ்வு தானே பெண்ணே!
ஆண்களை வெளிச்சம் போட்டுக் காட்ட!
நீ இருட்டாய் இதுவரை இருந்தது போதும் பெண்ணே!
கல்விச் சூரியன் ஒளி படாமல் மறைத்தனர் ஆண்கள்!
ஞானஒளி உனக்கு கிடைத்து விடும் என அஞ்சித் தானே பெண்ணே!
ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் வெளிச்சம், குடும்பத்தின் வெளிச்சம்!
இந்த உண்மையை ஆண்கள் மறந்தது ஏனோ பெண்ணே!
நீ இருட்டில் இருப்பதற்கு, ஆண்கள் மட்டுமா காரணம் பெண்ணே!
பெண்களின் பங்களிப்பும் உண்டு இதில்! அறிவாயா பெண்ணே!
ஒற்றுமை பெண்களுக்குள் குறைவு! வருத்தமான உண்மை இது பெண்ணே!
இனி, உங்களுக்கு இதமான வெளிச்சம் தர, பெண் நிலாக்கள் அருகிருப்பார் இளம் பெண்ணே !
உங்கள் உயர்வு உலகெங்கும் நிறைந்திருக்க இளைய ஆண் கதிரவன்கள்
உன்னோடு இணைந்திருப்பார் அருமைப் பெண்ணே!

*****

”கட்டியவன் தேசநலன்காக்கும் போரில் துஞ்சியபோதும் அஞ்சாது மகனை அனுப்பினேன் தேசங்காக்க! அவனைக்கண்டு, அன்னையவள் உனைக்காணக் காத்திருக்கிறாள்; வழி பார்த்திருக்கிறாள் என்று தூது சொல்லாயோ பகலவனே” என்று ஆதவனுக்கு தூதுவிடும் அன்னையைக் காட்டுகின்றார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன் தன் பாட்டில்.

அல்லும் பகலும் அலைந்து திரிந்து- இளைப்பாற
அன்னை மடி தேடி ஓடும் பகலவா..

எல்லைக் கோட்டில் அல்லும் பகலும் பாடுபடும்
என் மகன் எப்போது வருவான்
என் மடி சாய்ந்து ஓய்வெடுக்க…??!!

கட்டிய கணவனை கயவன் சுட்டானைன்ற சேதி கேட்ட நொடியே
கட்டிளங்காளையை தட்டி அனுப்பினேன் – தேசங்காக்க

அவனி முழுதும் வலம் வரும் நீ
அவனைக் கண்டு தூது சொல்வாயா…??
அன்னையவள் உனக்காக காத்திருக்கிறாள் என்று..

தூது சொல்வாயா..
உயிரைக் கையில் பிடித்து
உறங்காமல் காத்திருக்கிறாள்
உனை ஈன்றவள் என்று..

காத்திருக்கிறேன் இனி உனக்காக
“பத்திரமாய் திரும்புவான் உன் மகன்” எனும்
பதில் கொண்டு வரும் வரையில்..
பகலவா…

***** 

அருந்தமிழ்க் கவிகளுக்குக் கவிவிருந்து படைக்கத் துணையாவாள்; அழுங்குழந்தைக்கு அமுதூட்ட வருவாள்! சங்கரனின் தலையில் திங்களாய்த் தவழ்வாள்; மங்கையர்க்கென்றும் மங்கலம் தருவாள்” என்று வானில் உலவும் நிலவை அழகுச்சொல்லெடுத்துப் போற்றுகின்றார் பெருவை. திரு. பார்த்தசாரதி.

கதிரவன் காதலி..!

செங் கதிரோன்தன் காதலியைக் கனிவுடன் தேடுவதைத்..
……….திங்களவள் மறைந்திருந்து அவன் தவிப்பைப் பார்ப்பாள்.!
பொங்கும் ஆவலால் அவன் முகமுழுதும் சிவந்திருக்கும்..
……….தங்காது ஓரிடத்தில் உலகுமுழுதும் ஒருநாளில் சுற்றுவான்.!
மங்கையவளைக் கண்டதும் மயக்கத் திலவன் மறைவான்..
……….மணமேடை காணமுடியா நிலையில் இருவரும் ஒன்றாக..
சங்கமம் ஆகிவிட்டால் அகிலமனைத்தும் இருள் கவ்வும்..
……….சோகத்தினால் அவள் பெருமையை அவனே பாடுகிறான்.!
எங்கு நோக்கினும் எனக்குள் அவளிருப்பதை அறிவேன்..
……….என்னுதவி இல்லையெனில் இவ்வுலகு அவளுதவி பெறும்.!
பங்கு கேட்காத ஒர்உறவென்றால் அவள் ஒருத்திதான்..
……….பற்றுள்ளதாயும் மகவிற்கு அமுதூட்ட ஓடோடி வருவாள்.!
இங்கிவளைக் கவிதையின் கருவாய் கவிஞரும் கொள்வார்..
……….இவளை நினையின் அருந்தமிழ் அருவியென ஓடிவரும்.!
குங்குமப் பொட்டுக்காரி குவலயத்தின் குறை தீர்ப்பாள்..
……….கிரகங்களில் இவள் அழகுக்கு ஒப்பில்லை என்பார்கள்.!
சிங்கங்கள் இரவிலிரைதேட சிறிதே வெளிச்சம் தருவாள்..
……….சிற்றிடைப் பாவையின் வளைந்த புருவம் ஒத்திருப்பாள்.!
செங்கொன்றை மலரைப் போல சிலநாள் சிரித்திருப்பாள்..
……….சட்டென மேகத்தில் மறைந்து பட்டென வெளிப்படுவாள்.!
பொங்கலிட்டு வழிபட எனக்குமுன் அவள் தோன்றுவாள்..
……….சங்கரன் அவளைத் தலைமேல் வைத்தே சிறப்பித்தான்.!
மங்களம் இனிமை அன்பு அமுதமெனும் சொற்களுக்கு..
……….மங்காத நன்மதிப்பை மங்கையருக்குகந் தளிப்பாளவள்.!

***** 

கணவனின் அன்பின்றி வாழு(டும்) தன்னிலையை வெண்ணிலவிடம் உரைத்து ஆறுதல்தேடும் பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு(மிகு?). சபி கௌன்.

நீயும் நானும்…

தொட்டுத் தொடரும் பந்தம் எனத் தோன்றும்
தொலைவில் இருந்து உனைப் பார்ப்பவர்களுக்கு

நெருங்கிச் சென்றால் தான் தெரியும்
நெருப்புப் பந்தும் நீரும் கலக்கவில்லை என்று..

மணமுடித்து மாதங்கள் பல உருண்டோடியும்
மகிழம் பூக்கள் மலரவில்லை எனக் குற்றச்சாட்டு

உனைப்போல் நெருங்கிச் சென்றாலும்
உன் கடல் போல் விலகியே செல்கிறான் என்னவன்

பழி சொல்லும் பந்தங்கள் அறிய வாய்ப்பில்லை
பக்குவமாய் நிதர்சனம் மறைத்து மனதில் அழுவதால்

உன்னைப் பார்த்து தேற்றிக் கொள்கிறேன்
உயிர் வாழ வழி பார்த்துக் கொள்கிறேன்

நான் படும் துயர் போல்
நாட்கணக்கின்றி நீயும் பட்டால் கூட
நானிலம் போற்ற வாழ்ந்து கொண்டிருக்கிறாய்….

***** 

கடந்துபோன பௌர்ணமி நாட்களைக் கனத்த மனத்தோடு அசைபோட்டுப் பார்க்கும் ஆரணங்கைத் தன் கவிதையின் நாயகியாக்கியிருக்கிறார் திருமிகு. சொல்லின் செல்வி.

ரேகை தொலைத்த தேவதை

அமாவாசையில் ஏதுமற்ற
வானம் போல நானிருந்தேன்
வளர்பிறையின் நிலவாய்
என் வசம் நீ வந்தாய்
முழுமதியின் நாளின்போது
பெளர்ணமிக் காதலாய்
நாம் மணம் புரிந்தோம்.
ஆனாலும்
தேய்பிறை நிலவாய்
நம் பிரிவில் நான் இழந்தேன்
மீண்டும்…
அமாவாசையின் ஏதுமற்ற
வானம் போல நானிருக்கிறேன்.

இதோ.. இப்போது
இந்நிலவைக் காணும் போது
நம் நினைவலைகளில்
என் எண்ண அதிர்வுகளில்
கண்ணீர் வடிக்கிறேன்.
கண்ணீர் வடிந்த கன்னங்கள்
மென்மையைத் தொலைத்துவிட்டன.
விரல்களில் ரணமேறியதால்
ரோஜா இதழ்களே
என் விழிநீரை ஏந்தி
பதியம் போடுகின்றன.
ஆம்…
என் கண்ணீரைத்
துடைத்துத் துடைத்தே
என் கைவிரல் ரேகைகள்
தொலைத்துவிட்டேன்.

துளை சரியில்லாத குழல்
இசை மறுப்பதைப் போல..
தூரிகை சரியில்லாத ஒவியம்
அழகை இழப்பதைப் போல..
சாயம் சரியில்லாத சேலை
நிறம் போவதைப் போல..!
சாலை சரியில்லாத பாதை
தடம் மாறுவதைப் போல..!
உளி சரியில்லாத சிலை
வடிவம் இழந்ததைப் போல…
என் வாழ்க்கை அதன்
வசந்தத்தை இழந்துவிட்டது,

ஆகவே..
அன்று வந்த துணைவா..
எந்தன் இருதயத்திலிருந்து
உனை வெளியேற்றி
உனை நுழைக்காத முடியாத
கடும் மனநிலையாய்
இருதயத் தமனிகளால்
கடும் பூட்டு போட்டுவிட்டேன்
என்றாலும்
நம் பெளர்ணமி நாட்களை
என்னால் மறக்க இயலாது!
என்றும் மறைக்க இயலாது.!

***** 

”பாவையின் பார்வைபட்டு வெண்ணிலவு செந்நிலவானதோ?” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

வெண்ணிலவே செம்மையானதோ பாவை முகம் கண்டு,
முகத்தின் அழகு அகத்தில் சிலசமயம் தெரிவதுண்டு
தனிமையில் இனிமை காண முடியாத நிலமையுண்டு
உன் ஏக்கத்திற்கு, என்றைக்கும் உன்னிடமே தீர்வுண்டு

***** 

வானில் தெரியும் ஒளிவட்டத்தை மதியாகவும் கதிராகவும் வைத்து, இருளில்நிற்கும் பாவைக்குப் பொருள்பொதிந்த மொழிகளை ஆறுதலாகவும் அறிவுரையாகவும் அள்ளித்தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்! 

இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் சிறப்பைப் பெறும் கவிதை அடுத்து…

விடியல் கற்கண்டு

விடியலுக்காகக் காத்திருந்தது போதும்
பெண்ணே! ..
பெண்ணியம் பேசும்
பெண்ணியம் என்பது
ஆண்களுக்கு எதிரான
காழ்ப்புணர்ச்சி அல்ல.!
பெண்களுக்கான விழிப்புணர்ச்சி!
பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டிய
சுயமரியாதை எழுச்சி!

சமதர்மச் சமுதாயத்தை,
சுயமரியாதையைப்
போற்றுகிற ஒரு குரல்!..
அடக்கு முறைக்கு எதிராக
ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக
ஒலிக்கும் போராட்டக் குரல்!..
தனிமனிதப் பழக்கவழக்கத்தின்
வெளிப்பாடுகளுக்கும்
அது சார்ந்த உரிமைப்
பிரச்சனைகளுக்குமான
சுதந்திரத் தேடலுக்கான
ஒரு தார்மீக குரல்..!

கடவுள் நம்பிக்கையற்ற
ஓர் ஆணைப் பகுத்தறிவாளராக
அறிவு ஜீவியாக
ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம்
எதையும்
பகுத்து அறியும் ஒரு பெண்ணை
பெண் நாத்திகவாதியாக
செயல்பட அனுமதிக்காத
போலி ஆத்திகத்தை எதிர்க்கும் ஒரு குரல்..

இயற்கையிலேயே பெண்
பலவீனமானவள் என்பது
முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டி
ஓங்கி ஒலிக்கும் ஒரு கம்பீரக் குரல்

அதிகாரத்தை துஷ்பிரயோகத்தை
எதிர்ப்பதற்கான ஒரு குரல்..!

பொதுப்பண்புகளை
கண்மூடித்தனமாக
ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம்
நிலவுவது போல்
அதை மறுக்கும் சுதந்திரமும்
பொருட்படுத்த வேண்டி ஒரு குரல் !

கற்பனாவாதக் கட்டுப்பாடுகள்
அவற்றை மீறுவதில் நிலவும்
சுவாரசியத்தை ஒழுக்க
மீறலுக்கான வெற்றியாகவும்
புரட்சிகரச் சிந்தனையாகவும்
தவறாக புரிந்துக்கொள்வோரை
கண்டித்து மன்றாடும் ஒரு குரல்..!

பெண்ணின் சிந்தனை
ஆண்களுக்கு விடுதலை அளிக்கவும்
வல்லமைமிக்கது என்பதை
உணர்த்த எழுந்த குரல்…!

மனித மதிப்பிற்கான
சமூக அளவுகோல்
மாறும் வரை…
ஓயாத கடலைப் போல
காத்திரமான புயலைப் போல
சுதந்திரமான பறவையாய்
விடியலைக் கேட்கும் கிழக்காய்த்
தொடர்ந்து தொடர்ந்து
ஒலிக்க வேண்டிய குரல்..!

பெண்ணே.. !
உன் உரிமை
நிழலாய்க் கசப்பது அல்ல!
நிஜமாய் இனிக்கும்
விடியல் கற்கண்டு..!

 

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமைத் தீர்ந்துவருதல் முயற்கொம்பே” என்றார் பாவேந்தர். ”அந்தப் பெண்ணடிமைத்தனத்தை மண்ணோடு மண்ணாக்கும் ஒரு குரல்! பெண்ணின் சுயமரியாதையையும், சிந்தனையையும் வந்தனை செய்யும் ஒருகுரல்! அவள் பகுத்தறிவைப் பாருக்குணர்த்தும் ஒரு குரல்! அந்த உரிமைக்குரல் எப்போது கேட்கும்? பெண் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது வாய்க்கும்? அந்நாளே இனிக்கும் கற்கண்டுத் திருநாள்!” என்று இனிய சொற்கொண்டு பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் திருமிகு. முழுமதியின் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதை என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.