க. பாலசுப்பிரமணியம்

 

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்

“முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்; முயலாமை என்றும் வெல்லாது”- எனது கார் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபொழுது சுவற்றில் எழுதப்பட்ட இந்த வாசகத்தைப் படித்தேன். திரும்பத் திரும்பப் படித்தேன். எத்தனை உண்மையான வார்த்தைகள்! முயலும் தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. ஆமையும் தன் இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. அந்த இலக்கை அடைவதில் அவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம் – கொஞ்ச நேரமே ! ஒன்றின் வேகத்தில் இன்னொன்றால் செல்ல முடியாது. ஏனெனில் இயற்கையில் அவைகளின் உருவகமும் உடல்  பாங்கும் வேறுபட்டுள்ளன. தங்கள் உடல் பாங்குகளுக்கேற்றவாறும் தங்களுடைய இயற்கை வாழ்விற்கேற்றவாறும் அவைகள் பயணித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தக் கருத்து நமக்கும் பொருந்தும். இயற்கையில் நம்முடைய உடல் பாங்குகள், சக்தி நிலைகள், உணர்வு நிலைகள் மற்றும் உடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் வேறுபட்டவை. எனவே நாம் ஒருவேரோடு ஒருவர் போட்டி போடுதல் மிக்க தவறான செயல். நாம் நம்முடைய இயற்கைக்குத் தகுந்தவாறு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆனால் வெற்றி பெறுவதற்கு முயலும் முயற்சிக்க வேண்டும், ஆமையும் முயற்சிக்க வேண்டும். அதே போல் நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் சாதனைகள் செய்ய, வெற்றிபெற, சிகரங்களைத் தொட முயற்சி செய்தல் மிகவும் அவசியம். அறிவையும், திறமையும் மட்டும் வைத்துக்கொண்டு முயற்சி செய்யாமல் இருந்தால் வெற்றிப் படிகளில் நிற்க முடியாது, சில நேரங்களில் முயற்சியே செய்யாமல் இறைவனின் திருவருளை மட்டும் நம்பி பலர் வாழ்வில் காத்திருக்கின்றனர். இவர்களில் சிலபேருக்கு வேறு சில காரணங்களால் ஓரளவு வெற்றி கிடைக்கின்றது. ஆனால் அனைவருக்கும் வெற்றிக்கு முயற்சிதான் வழி. முயற்சி செய்யும்பொழுது அதற்கான கூலி நிச்சயம் கிடைத்துவிடும் என்று வள்ளுவர் மிக அழகாக உரைக்கின்றார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

முயற்சி என்பது சரியான திசையில் சரியான அளவில் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது விழலுக்கிறைத்த நீராகிவிடும். முயற்சி வெற்றி பெற ஒரு மனிதனுக்கு என்னென்ன தேவைப்படுகின்றது?

  1. தன்னம்பிக்கை (Self-confidence)
  2. ஆர்வம் ( curiosit)
  3. நோக்கத்தில் தெளிவு ( Clarity of vision)
  4. துணிவு (courage)
  5. செயல் திறன் (Skill)
  6. வளங்கள் (Resources)
  7. உழைப்பு (Hard work)
  8. பொறுமை (Patience)
  9. சவால்களை சந்திக்கும் திறன் ( Ability to face challenges)
  10. கால நிர்வாகத் திறன் (Time Management )

மேரி கியூரி என்ற போலந்து நாட்டு விஞ்ஞானி வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தவர்.  தன்னுடைய ஆராய்ச்சிக்காக தன்னுடை கையிருப்பிக்களை எல்லாம் இழந்து, ஆறிச்சிக்குத் தேவையான உபகாணங்களைக் கூட வாங்க முடியாமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தன் வாழ்க்கையை நடத்தியவர். போட்டி காரணமாக அவருக்குத் தேவையான அறிவியல் மூலதனைகளைக் கூட அவரால் பெற முடியவில்லை. அந்த ஏழ்மையான நிலையிலும் இரவு பகலாக வேலை செய்து ‘ரேடியம்” என்ற பொருளைக் கண்டுபிடித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடுப்புத்தான் பின்பு  எக்ஸ் -ரே கதிர்வீச்சுக்கள் மூலமாக பல நோய்களை கண்டறிய உதவியாக இருந்தது. இவருடைய கண்டுபிடிப்புக்காக பின்பு இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. உலகிலேயே முதல் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி என்பது மட்டுமல்லாமல் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணியாக இவர் விளங்கினார்.

தொடர்ந்து இருந்த சவாலான சூழ்நிலைகளிலும் தன்னுடைய முயற்சியை விட்டுவிடாமல் இயலாமை என்ற சொல்லுக்குத் தலைவணங்காமல் சாதனை படைத்த இந்தப் பெண்மணி என்ன கூறுகின்றார்?

” வாழ்க்கையில் எதையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது புரிந்துகொள்வதற்கான நேரம், பயப்படுவதற்கானது அல்ல. ”

“நாமெல்லாம் வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். இதை நாம் எந்த விதத்திலாவது சாதித்தே ஆகவேண்டும்.”

சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த ஆக்கப்பூர்வமான உணர்வினை ஊட்டி விட வேண்டும். அவர்களுடைய கனவுகளின் உயரம் சிகரத்தை தொடுவதாக இருக்க வேண்டும். மிகப் பெரிய கனவுகளைக் கண்டு அதற்கான முயற்சிகள் செய்து சிறிதளவு அதில் தோல்வி அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் சரித்திரம் படைத்தவர்களாக ஆகின்றார்கள். சிறிய கனவுகளைக் கண்டு அவற்றை உடனேயே அடைந்தவர்கள் கடலில் கரைந்த உப்பாகக் காணாமல் போகின்றார்கள்.

பெரிய கனவுகளைக் காணலாமே.. அதற்கான தெளிவான நோக்குடனும் உறுதியுடனும் தைரியத்துடனும் முயற்சி செய்து பார்க்கலாமே.

வாழ்க்கை என்பதே நம் கனவுகளுக்கு ஒரு உருவகம் கொடுப்பதுதானே !

வாழ்ந்து பார்க்கலாமே !

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *