-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. அனுபாலா எடுத்த இந்த நிழற்படத்தைத் திருமதி. சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார். இவ்விருவருக்கும் என் நன்றி!

”தொழுத கையராய் அழுத கண்ணராய் நிற்கும் அடியார்முன் ஆண்டவனும் நெகிழ்ந்திடுவான் உளம்!”

இந்தப் படத்தினைக் காண்கையில் உம் உளத்தில் ஊறும் உணர்ச்சிகளைத் திரட்டிக் கவிதையாய்ப் படைத்திட கவிவலவர்களைக் கரங்கூப்பி அழைக்கின்றேன்.

*****

”உள்ளத்தில் உறைந்திருக்கும் பரம்பொருளை வெளியில் தேடுவதில் பொருளில்லை. ஆகவே தேடுவோம் அவனை உள்முகமாய்” என்று உண்மை உரைக்கின்றார் ஆ. செந்தில் குமார்.

கடவுளை சற்றே சிந்திப்போம்!

இந்த
உடலே திருக்கோயில்!
உள்ளமே கருவறை! – அதில்
உறைபவனே இறைவன்!
உரைத்தாரன்றே திருமூலர்…

இந்த
உடலைப் பேணாமல்
உள்ளத்தைக் காணாமல்
உலகில் எங்கெங்கோ தேடினாலும்
உட்பொருள் கிடைப்பானா?

அந்த
கோயிலின் புறத்தே
கோவணத்திற்கும் வழியின்றி
கோடி மக்கள் பசித்திருக்கக்
கோயிலின் அகத்தே உண்டியலில்
கோடி கோடியாய்க் கொட்டினாலும்
கொலுவிருக்கும் குலசாமி அருளுமா?

அந்த
கடவுளைச் சற்றே சிந்திப்போம்!
கடவுள் அதன் உட்பொருள்
கட உள் என்பதாகும்!
கண்களை மூடி மனதினுள்ளே
கடந்து போவோம்!
கடவுள் அங்கே இருப்பானே!

அந்த
உள்ளத்தின் உள் உறைபவன்தான்
எங்கெங்கும் நீக்கமற நிறைந்துளான்!
கண்ணைத் திறந்து காண்பவை எல்லாம்
அவனின்றி வேறேது??

*****

”நெஞ்சம் மகிழ நிறைந்திருக்கும் பிள்ளையார், நாம் தஞ்சம் அடைந்திடத் தாயாக வந்திடுவார்” என்று விநாயகரைத் தன் கவிதையின் நாயகராக்கிப் போற்றுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

சாலை விநாயகர்..!

நெஞ்சம் மகிழவே
……….நிறைந்ததொரு பிள்ளையார்
தஞ்சம் அடைந்திடவும்
……….தாயாக வந்திடுவார்
எஞ்சிய சாலையும்
……….எங்கேயும் இல்லையே
விஞ்சியே நிற்கும்
……….வரையில்லா எண்ணிக்கை
மஞ்சளும் குங்குமமும்
……….மக்களும் கொண்டுபோய்ப்
பஞ்சமிலாது பூசிடுவார்
……….பட்டிதொட்டி யெங்குமாய்
அஞ்சுவிரல் ஐந்தும்
……….இரண்டாகச் சேர்த்துயர
அஞ்சனக் கண்மூடி
……….அங்கே தொழுதிடுவார்

*****

”கூட்டுக் குடும்பமெல்லாம் சீட்டுக்கட்டாய்ச் சிதறிவிட, கும்பிட ஆளின்றிக் குலதெய்வமும் தனிமையில் வாடுதே” என்று வருந்திப் பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

தனிமையில்…

குடும்ப மெல்லாம் சேர்ந்திருக்க
கூட்டுச் சேர்ந்து கும்பிட்டார்,
குடும்ப நலனைக் காக்குமென்றே
குலத்தின் தெய்வம் என்றுரைத்தார்,
அடுத்து வந்த காலத்திலே
அவரவர் பணியில் சென்றுவிட்டார்,
கொடுத்து வந்த குலதெய்வமும்
கொடிய தனிமையில் வாடிடுதே…!

*****

நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

கடவுளைக் காணலாம்!

இருகரம் கூப்பி இறைவனை வணங்கும் மனிதா!
பணிந்தே இறைவனை வேண்டும் வரம் யாதோ மனிதா!
மாட மாளிகை வேண்டி நின்றாயோ மனிதா!
பொன்னும், பொருளும் யாசித்தாயோ மனிதா!
பட்டம் பதவி கேட்டு நின்றாயோ மனிதா!
உன் குடும்பம் நலமுடன் வாழ வணங்கி நின்றாயோ மனிதா!
ஏழை, எளியோர்க்கு உதவாமல், இறைவனை வேண்டிப் பலனில்லை!
அன்னை, தந்தையைப் பேணாமல் ஆலயம் செல்வதில் பலனில்லை!
பாவத்தினால் வந்த பணத்தினிலே
இறைவனுக்குப் பங்கு கொடுப்பதும் பலனில்லை!
உழைப்பவரின் ஊதியம் குறைத்துத்
திருப்பணி செய்வதில் பலனில்லை!
எளியவரை மகிழ வைத்து இறைவனைக் காணலாம்!
கடுஞ்சொல் தவிர்த்தால் கடவுளைக் காணலாம்!
ஆசை துறந்தால் ஆண்டவனை அடையலாம்!
பிறர்கென வாழ்ந்தால் கடவுளாய் வாழலாம்!

”மனிதா! இருகரம் கூப்பி இறையிடம் வேண்டுவதென்ன? பொன்னும் பொருளுமா? பட்டமும் பதவியுமா? தன்னலமே என்றும் குறியா யில்லாமல் பிறர் நலமும் நாடு; துன்ப வித்தான ஆசையைத் துறந்து ஆண்டவனைத் தேடு” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டும் வரிகளைத் தாங்கிநிற்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.