அழகில் தியானம்!

பவள சங்கரி

 

கீச்சிடும் புள்ளின் தேனோசையின் அதிர்வு
துயில் கலைத்ததும் கனவின் சொச்சமும்
விழியில் காட்சியாகி விரியும் கணமும்
பனியில் பூத்த சிறுமொட்டின் அழகியலும்

துள்ளித் திரியும் சிறுமுயலின் பரவசமும்
வஞ்சமும் காழ்ப்பும் வசவுமில்லா நேசமும்
தஞ்சமென சிறுவங்கும் மாடமாளிகை போகமும்
அன்றையப் பொழுதை இதமாய் தன்வசமாக்கி

என்றனையும் ஆட்கொண்டு ஆழ்மன தியானமாக்கி
அல்லல் யாவையும் அசட்டையாய் நீக்கி
தொல்லைகள் இல்லா புவியை உருவாக்கி
அழகில் தியானம் அறிவில் தெளிவு மனதில் உறுதி!

மங்கும் மாலையிலும் மயக்கமில்லை மனதுக்கு
என்றுமில்லை நிரந்தரத் துயில் சூரியனுக்கு
இன்றுபோய் உதயமாகி வருவாய் நாளை
பணிந்திருந்து பக்குவமாய் இயங்குவாய் ஆக்கப்பூர்வமாய்!

—————————————–

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *