மீன்குளத்தி அம்மன் கோயில் வழிபாடு
-முனைவர் ரா.திவ்யா
திருக்கோயில் அமைப்பில் தமிழகக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன. அதுபோலவே, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோயில்களும் தனித்தன்மையுடன் சிறப்புப்பெற்று விளங்குகின்றன. தமிழகக் கோயில் அமைப்புக்கும் கேரளக் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு உள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாகும். கேரளாவில் பத்மநாபன் கோயில், குருவாயூர் கோயில், சபரிமலைக் கோயில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயில் ஆகியவை பெரும்புகழ் பெற்று விளங்குகின்றன.
வரலாறு
ஏறத்தாழ பல ஆண்டுகளுக்கு முன்னர் பிற இடங்களுக்குப் பிழைப்பைத் தேடி முதியவர் ஒருவர் கேரளாவிற்கு நடைப்பயணமாகி வந்து சேர்ந்தார். அவர்கள் வீரசைவ வேளாள மன்னாடியார் வகுப்பைச் சேர்ந்த மூன்று தாய் வழிக் குடும்பத்தார் ஆவார்கள். அம்முதியவர் தொழிலுக்காக எங்கு சென்றாலும் அந்நாட்களில் எல்லாம் தங்களது தெய்வமான மீனாட்சி அம்மனைத் தரிசித்து விட்டே செல்வார். பின்னைய நாளிலெல்லாம் தனக்கு வயதானதால் அடிக்கடிப் போக முடிவதில்லை. ஒரு சமயம் அம்மனைத் தரிசித்து உன்னை வணங்க இனி வரமுடியாது என்று வருந்திக் கொண்டு சிறு மூட்டையும், குடையும் எடுத்தவாறு நடந்து வந்தார். சிறிது தூரமாக நடந்த பின் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த குளத்தின் அருகிலே மூட்டையையும், குடையையும் வைத்துவிட்டு, தண்ணீர்க் குடிக்கச் சென்றார். சிறிது நேரம் கழித்து அம்மனை நினைத்துக் கொண்டு மூட்டையைத் தோளிலே போட்டு, குடையைத் தூக்க, அது நகராததை எண்ணினார். அங்கு விளையாடுகின்ற சிறுவர்களை அழைத்துப் பார்க்கச் சொல்லி அங்கு வாழுகின்ற மக்களை அழைத்தார். அங்கு குடியிருப்பது அம்மன் மீனாட்சியே எனக் கூறினார்கள். அங்குள்ள இடங்களுக்கெல்லாம் இச்செய்தியானது பரவியது. அம்மன் குடியிருந்த காரணத்தால் அவ்விடமானது குடமந்து எனப் பெயர்பெற்றது. என்று தகவலாளி அம்மன் வந்த வரலாற்றினைக் கூறுகிறார். இந்நாளில் குடமந்து என்ற பெயரானது மருவி கொடுமந்து எனப் பெயர் பெற்றது. இக்கொடுமந்து என்ற இடத்தில் தான் அம்மன் எண்ணூறு ஆண்டுகளாக எழுந்தருளியுள்ளதாகக் கூறுகின்றனர்.
கோயில் பெயர்க்காரணம்
இக்கோயிலில் மீன்கள் மிகுந்து காணப்படுகின்றன. இங்குள்ள மீன்களுக்கு “மீனூட்டு” நிகழ்ச்சி நடைபெறும். “மீன்கள் குளத்தில் அதிகமாக இருப்பதால் மீன்குளத்தி அம்மன் என்று பெயர் வந்தது” எனக் குறிப்பிடுகிறார்.
“குளத்தில் மீன் இருப்பது, அம்மன் மதுரையில் இருந்து வந்தாள். அம்மதுரையை பாண்டியன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடைய கொடி மீன் கொடி என்பதாலே இக்குளத்தில் மீன்கள் வளர்கிறது” என்ற (தக.நடராஜ்) கருத்தினைக் குறிப்பிடுகிறார்.
தகவலாளிப் பெயர்ப்பட்டியல்
- தக.நடராஜ் – பல்லசேனா
- வசந்தி – கோயமுத்தூர்
- தாமஸ் – பொள்ளாச்சி
*****
கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி.