-மேகலா இராமமூர்த்தி

மெழுகுவர்த்தியும் அழகான குழந்தையும் ஒருவரை ஒருவர் நோக்கி மௌனமாய்ப் பேசிக்கொள்ளும் இதமான காட்சியை நிழற்படமெடுத்து வந்திருப்பவர் திரு. வாசகன் பாலசூரியன். இந்தப் படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

”ஒளியிலே தெரிவது தேவதையா?” என்று பாடத்தோன்றும் இந்தக் குழந்தையின் சுந்தர முகத்தில் ஏதோ சிந்தனைப் பின்னலும் இருக்கவே செய்கின்றது. பிஞ்சின் நெஞ்சில் நிழலாடும் எண்ணத்துக்குக் கவிவண்ணங் கூட்டி வாசகர்க்குக் காட்ட கவிஞர் பெருமக்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

***** 

”நங்காய்! எதிர்காலத்துக்கு ஒளியூட்டும் கல்வியில் கவனம் செலுத்தாது சித்தத்தைச் சிற்றொளியில் வைக்கலாமா? ஆழ்ந்து படி…வெற்றியைப் பிடி” என்று சிறுமியின் நல்வாழ்வுக்கு நம்பிக்கையொளி ஊட்டுகின்றார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா. 

பெதும்பைப் பெண்ணே!

ஊடுருவிப் பார்க்கின்றாய் ஒளிரும் சுவாலைதனை
தேடுவது எதையென்று தெரியவில்லையோ உனக்கு?
புத்தகத்தின் முன்னிருந்து சித்தத்தைச் சிற்றொளியில்
வைத்துள்ளாய் நீ அங்குன் வாழ்வினொளி காண்பாயோ?
கற்பதனாலுன்றனுக்குக் கடுகளவும் தோல்விவரப்
போவதில்லை ஆதலினால் பொழுதினை நீ வீணாக்கி
உற்றுப்பார்க்காது உருகும் மெழுகுதனை
சற்றேயுன் புத்தகத்தில் தலைகுனிந்து கவனம் வை.

வாழ்வினொளி காண வை கவனம் கற்பதிலே
தாழ்வில்லையென்றும் தலை குனிந்து கற்பவர்க்கு
வீட்டில் விளக்கின்றி வீதிக்குச் சென்றங்கே
தெருவிளக்கிற் கற்றுத் தேறிப் பரீட்சையிலே
மேதாவிகளானோர் மிகுபலபேர் உள்ளார்கள்
ஆதலினால் நங்காய் ஆழ்ந்து படி புத்தகத்தை
மீதி விளைவதெல்லாம் வெற்றியன்றி வேறில்லை.

*****

”மரணப் படுக்கையில் அன்னை; கள்ளுக்கடையில் அப்பன்; அழுகின்ற மெழுவர்த்தி ஒளியில் படித்து நான் யாரைக் காப்பாற்ற?” என்று வேதனையில் வெ(து)ம்பும் சிறுமியைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில்.

அழுதிடும் மெழுகுவர்த்தி!

எங்கள் வாழ்வே இருளானது!
மங்கிப் போன விளக்கு!
ஒருத்தி
ஊதியமும் இல்லை!
மரணப் படுக்கையில்
தாய்! கையில்
மருந்து வாங்கப் போன
காசை
பறித்துக் கொண்டு
கள்ளுக் கடைக்குப் போனது
அப்பன்!
நாளைக்குத் தேர்வு!
மங்கிய தெரு விளக்கும்
மின்னலில் அணைந்தது!
கடன் வாங்கிய
மெழுகு வர்த்தி யானது
அழுது, அழுது
மெலிந்தது!
நான் படித்து பட்டம் வாங்கி
யாரைக் காப்பாற்ற?
தாயையா ?
குடித்து விட்டு வாசலில்
வசை புராணம் பாடும்
அப்பனையா?

*****

”கலைமகளும் அலைமகளும் மலைமகளும் மகிழ்ந்தருள, வாழ்விலின்பம் வழியட்டும், துன்பங்கள் ஒழியட்டும்” என்று சிறுமிக்கு வாழ்த்துப்பா பாடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

வாழ்க வளமுடன்…

கன்னித் தமிழனைத்தும் கலைமகளும் உனக்கருள்க!
எண்ணிய செல்வங்களை அலைமகளும் உனக்களிக்க!
இன்னலில்லாப் பெருவாழ்வை மலைமகளும் மனமுவக்க!
இன்னபிற நன்மைகளைப் பெறுவதற்குநீ முயல்க!

அணையாத விளக்காக அன்பெங்கும் ஊற்றெடுக்க!
துணையாகச் சொந்தங்கள் எப்போதும் உடனிருக்க!
அணிகலனாய் நற்பண்பை இறுதிவரைநீ சுமக்க!
இணைந்திருக்கும் நட்புகள் எப்போதுமுனை சூழ்க!

மடைதிறந்த வெள்ளமென வாழ்விலின்பம் பொங்க!
இடைத்தோன்றும் துன்பமெலாம் தவிடு பொடியாக!
அடையத் துடிக்கும் இலக்கனைத்தும்நீ தொடுக!
தடையேதும் இல்லாத தனிப்பாதைநீ பெறுக!

*****

சிறுமிக்கு  இனிய வாழ்த்துக்களையும், அவள் எதிர்காலத்துக்கு வளஞ்சேர்க்கும் நல்ல அறிவுரைகளையும் தம் பாக்களில் அள்ளி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையை நாம் அறிந்துகொள்ளும் நேரமிது!

வாழ்த்துங்கள்!

வறுமையின் ஆட்சி வீட்டினிலே
வரவினை மிஞ்சிடும் செலவினமே,
பொறுமையின் வடிவிலே பெண்ணவள்தான்
போதையின் பிடியில் ஆண்மகன்தான்,
சிறுவராய்ப் பிள்ளைகள் சிரமத்திலே
சீர்பெறக் கவனம் படிப்பினிலே,
குறுகிய குடிசையில் விளக்கொளியில்
கற்றிடும் குலமகள் வாழ்த்துவீரே…!

”வறுமையின் ஆட்சியைப் பொறுமையோடு சகிக்கும் தாய் ஒருபுறம்; அதுபற்றிய சிந்தனையேயின்றி போதையின் பாதையில் போகும் பொறுப்பற்ற தந்தை மறுபுறம்; இவர்கட்கு நடுவில் சிறிய விளக்கொளியில் சீரிய எதிர்காலத்துக்காகக் கல்விகற்கும் குலமகள் இவள்; இவளை வாழ்த்துங்கள்!” என்று ஈரநன்மொழி கூறும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.