குறளின் கதிர்களாய்…(249)
–செண்பக ஜெகதீசன்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
-திருக்குறள் -672(வினைசெயல் வகை)
புதுக் கவிதையில்…
செயல்படும்போது
காலம் கடத்திச்
செய்யவேண்டியதை,
அவசரப்படாமல்
காலம் கடத்தி
உரிய தருணத்தில்
செய்யவேண்டும்..
காலம் கடத்தாமல்
உடனடியாகச்
செய்யவேண்டியதைச்
செய்வதற்குக்
காலம் கடத்தித் தூங்கிடாதே…!
குறும்பாவில்…
வினைசெய்யக் காலதாமதமாய்ச் செய்யவேண்டியதைத்
தாமதித்து உரிய காலத்தில் செய்யவேண்டும்,
தாமதிக்காது செய்யவேண்டியதை உடனே செய்யவேண்டும்…!
மரபுக் கவிதையில்…
செயல்கள் செய்யும் வேளையிலே
செய்யக் காலம் தாழ்த்தியேதான்
செயல்பட வேண்டிய வினைகளிலே
செய்யத் தாமதம் காட்டிவிடு,
பயனது பெற்றிட உடனடியாய்ப்
பணியது செய்திட வேண்டியதில்
துயிலது கொள்ளும் தடையின்றி
தொடங்கிடு வினையை உடனடியே…!
லிமரைக்கூ..
செயல்படுவதில் வேண்டும் தூக்கம்,
செயலதற்குத் தாமதம் வேண்டுமெனில், இல்லையேல்
உடனேசெய் பெற்றிடவே ஆக்கம்…!
கிராமிய பாணியில்…
காலநேரம் பாத்துத்தான்
எந்த
காரியத்தயும் செய்யணும்,
கவனமாத்தான் செய்யணும்..
காலங்கடத்திச் செய்யவேண்டியத
அவசரப்படாம
காலங்கடத்திதான் செய்யணும்..
காலங்கடத்தாம
ஒடனே செய்யவேண்டியதுல
காலங்கடத்திடாத,
ஒடனே செய்யி…
தெரிஞ்சிக்கோ,
காலநேரம் பாத்துத்தான்
எந்த
காரியத்தயும் செய்யணும்,
கவனமாத்தான் செய்யணும்…!