-நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது. எல்லாச் சமூகங்களிலும்போல் அமெரிக்காவிலும் இடதுசாரிகள், வலதுசாரிகள், பழமை விரும்பிகள், புதுமைவாதிகள் என்று பல பிரிவுகள் உண்டு. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதுவரை அரசல் புரசலாக இருந்த இந்தப் பிளவுகள் இப்போது வெளிப்படையாகத் தோன்றியிருக்கின்றன. வெள்ளை இனவாதிகளின் கை மிகவும் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இவர் சொல்லும் பொய்களுக்கு அளவேயில்லை. தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டு நடுநிலை வகிக்கும் பத்திரிக்கைகளை மக்களின் எதிரிகள் என்கிறார். நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் அடிக்கடி உண்மையே வெல்லும்,உண்மையை மறைக்க முடியாது என்ற வாக்கியங்கள் அடங்கிய ஒரு பக்க விளம்பரங்களை வெளியிட்டாலும் ட்ரம்ப் பொய்களை உதிர்ப்பதை நிறுத்துவதில்லை. மற்றவர்கள் என்னென்ன பொய்கள் சொல்லுகிறார்கள் என்று இவர் சொல்கிறாரோ அந்தப் பொய்களை இவர்தான் தினமும் கூறிவருகிறார். அமெரிக்காவில் ஜனாதிபதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களைத் தங்களுடைய ஆலோசகர்களாகவோ பெரிய அரசுப் பதவிகளிலோ வைத்துக்கொள்ளுவதில்லை. எங்கேயோ ஒரு சிலர்தான் அப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். ஜான் கென்னடி தன்னுடைய தம்பி ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரலாக வைத்துக்கொண்டார் என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட ஜனாதிபதிகள் மிகவும் குறைவு. ட்ரம்ப்போ தன் மகள், மருமகன், மகன் என்று நெருங்கிய உறவினர்களைத் தனக்கு அரசியல் ஆலோகசகர்களாக அரசாங்கச் செலவில் வைத்துக்கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்தும் அவர்களை வற்புறுத்தித் தன் மருமகனுக்கு மிகவும் ரகசியமான அரசாங்க ஆவணங்களைப் பார்க்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் அமெரிக்க நடுவராக மருமகனை நியமித்திருக்கிறார். இவர் இந்தத் தீர்வுக்குப் பாலஸ்தீனத்தில் நிறையத் தொழில்களைத் தொடங்கி பால்பஸ்தீனர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இந்தச் சாக்கில் பாலஸ்தீனத்தில் நிறைய முதலீடு செய்து கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதுதான் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இவருடைய தீர்வு!

உலகில் சர்வாதிகாரிகள் உள்ள நாடுகளைப்போல் அமெரிக்காவில் தானும் சர்வாதிகாரியாக விளங்க வேண்டும் என்று ட்ரம்ப்ஆசைப்படுகிறார். பதவிக்கு வரும் முன் ஒரு வியாபாரியாக இருந்த இவர் ஒரு ஜனநாயக நாட்டில் அரசை நடத்துவதற்குப் பல checks & balances இருக்கின்றன என்பதை அடியோடு புறக்கணித்துவிட்டுத் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார்.தான் பொய்களாகச் சொல்வதோடு தன்னைச் சார்ந்த மற்றவர்களையும் பொய்கள் சொல்லவைக்கிறார். பதவி ஆசையால் இவருடைய மந்திரிசபையில் பதவி ஏற்ற சிலர் இவருடைய அட்டகாசம் தாங்காமல் பதவியைத் துறந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்; இவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைப் பதவியிலிருந்து தடித்தனமாக விலக்கியிருக்கிறார்.

சமீபத்தில் சென்ற பத்து வருடங்களாக ட்ரம்ப்புக்கு வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோகன் என்பவர் ட்ரம்ப் தன்னை நடத்திய விதத்தையும் பொய்கள் சொல்லவைத்ததையும் தாங்க முடியாமல் அவருக்கு எதிராகப் பல உண்மைகளை அமெரிக்கப் பாராளுமன்ற கீழவை உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார். அரசு ஒழுங்காகக் காரியங்கள் செய்கின்றதா என்பதைக் கண்காணிக்க கீழவை அங்கத்தினர்கள் யாரையும் விசாரிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு விசாரணையின்போது தான் ட்ரம்ப்பால் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை விலாவாரியாக கோகன் விளக்கினார். மேலும் ஒரு பெரிய எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றுவிட்டால் அதை ஏற்றுஅவர் எளிதில் பதவி விலக மாட்டார் என்றும் நாடுபலாத்காரத்தில் இறங்கலாம் என்றும்ட்ரம்ப்பிற்காகத் தான் வேலைசெய்தபோது ஏற்பட்ட தன்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுவதாகவும் கூறியிருக்கிறார். இவருடைய எச்சரிக்கை அப்படியொன்றும் நடப்புக்கு அப்பாற்பட்டதல்லவென்றும் ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் தன்மையைக் குறைப்பதோடு அதை அழித்துவிடவும் கூடும் என்று பல பத்திரிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள். கிளின்டனின் வெளியுறவு மந்திரியாக இருந்த மேடலின் ஆல்பர்ட் எழுதிய ‘Fascism: A Warning’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதுபோல் நாஜிக்கள் ஜெர்மனியைக் கைப்பற்றியது போலவோ ஃபாஸிஸம் இத்தாலியில் தலையெடுத்தது போலவோஅமெரிக்காவிலும் நடக்கலாம் என்றும் பலர் பயப்படுகிறார்கள். கலிபோர்னியா மாநிலகீழவை அங்கத்தினர் அமெரிக்க ஜனநாயகம் பெரிய ஆபத்தில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர் அமெரிக்கக் குடியரசின் ஸ்தாபனங்கள் (institutions)– எஃப்.பி.ஐ, நீதித்துறை, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள் – மிகவும் வலுவாக இருப்பதாகவும் ட்ரம்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தயங்காது என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

‘ஜனநாயக அரசுகள் எவ்வாறு தங்கள் முடிவை எதிர்கொள்கின்றன’(How Democracies Die)என்னும் புத்தகத்தை எழுதிய ஸ்டீவன் லெவிட்ஸ்கியும் டேனியல் ஸிப்லாட்டும் அமெரிக்க ஜனநாயகத்தை அப்படி எளிதாக ட்ரம்ப்பால்அழித்துவிட முடியாது என்கிறார்கள். 1930-களில் இருந்த ஜெர்மனி போலவோ இப்போதுள்ள துருக்கி, வெனிஸுவேலா, ஹங்கேரி போலவோ அமெரிக்கா இல்லையென்றும் அமெரிக்காவில் ஜனநாயக ஸ்தாபனங்களும் எதிர்க் கட்சியும் மிகவும் வலுவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இருந்தாலும், அமெரிக்க விழுமியங்கள் மாறிக்கொண்டு வந்ததாலேயே ட்ரம்ப் போன்றவர்கள் பதவிக்கு வந்ததாகவும், இன்னும் மாறிய எண்ணங்கள் தொடர்ந்து இருப்பதாகவும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எச்சரிக்கிறார்கள். 2018 தேர்தலில் ஜனநாயக் கட்சியின் அங்கத்தினர்கள் பெரும்பான்மையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ட்ரம்ப்பின் ஏகாதிபத்தியத் தோரணைக்கு மக்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒரு பத்திரிக்கையாளர் ட்ரம்ப்பின் ஏகாதிபதியாக (autocrat) வேண்டும் என்ற ஆசைக்குத் தடைபோடத் தேர்தல்களும் எதிர்க்கட்சியும் இருக்கும்வரை ட்ரம்ப்பால் அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது என்கிறார்.

இதே மாதிரி நாம் இந்தியாவைப் பற்றியும் சொல்ல முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். இந்திய ஜனநாயகம் அமெரிக்க ஜனநாயகத்தின் அளவு வலிமை பொருந்தியதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்ல முடியவில்லை. இந்து மதத்தையும் அதன் அங்கமாக விளங்கும் ஜாதிகளையும் அறவே ஒழிக்க வேண்டும் என்று பறைசாற்றிய பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வும் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கும் பி.ஜே.பி.யும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுசேர்ந்திருப்பதைப் பார்த்தால் இந்தியாவில் அரசியல் விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன என்று சொல்ல வேண்டும். அதன் விளைவாக இப்போது இருக்கும் ஜனநாயகத்தின் கொஞ்சநஞ்ச சாயலையும் முழுவதுமாக அழித்துவிட்டு, சந்தர்ப்பவாத அரசியல் மோதியை ஏகாதிபதி ஆக்கிவிடும்போல் தெரிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.