-சியாமளா ராஜசேகர்

சென்ற வாரம் ( 23:03:2019) பைந்தமிழ்ச் சோலையில் வேறெங்கும் சுவைத்தறியா விருந்து சுடச்சுட பரிமாறப் பட்டது. அவ்விருந்தின் சுவை என்றும் நெஞ்சத்தை விட்டு  அகலாது. அப்படி என்ன விருந்து என்கிறீர்களா ? செந்தமிழ் விருந்து ! தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு சாதனை விருந்து …..ஆசுகவி விருந்து ! ஒருமணி நேரத்தில் 100 பாடல்கள் அந்தாதியில் . நேரலையாக …!! அந்த அற்புதப் படையலைப்  பரிமாறியவர்கள் யார் தெரியுமா ?? பைந்தமிழ்ச் சோலை நிறுவனரும் , பைந்தமிழ்ப் பேராசானுமாகிய மரபு மாமணி பாவலர்  மா. வரதராசன் அவர்களுடன் பன்முகத்திறன் கொண்ட பைந்தமிழ்செம்மல் , ஆசுகவி விவேக் பாரதியும் ! இருவரும் இணைந்து சிந்தைக்கினிய விருந்தளித்தனர். இதில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
ஆசானுடன் மாணாக்கன் இணைந்து களமிறங்கியது …பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சோலைக் குயில்கள் அனைவருமே உற்சாகத்தில் மிதந்தனர். விருந்து சுவைக்கப் பசியோடு காத்திருந்தனர். இளங்கன்று பயமறியாதே! சோலையின் இளங்குயிலும் “பார்க்கத்தானே போறீங்க இந்தக் கவிஞர்களோட ஆட்டத்த!!!” என்று சவால் விட்டது. வெண்டளையானியன்ற தாழிசை அந்தாதியில் ” இறைமை ” யைப் பாடுபொருளாகக் கொண்டு சரியாக  இரவு ஒன்பது மணிக்கு விருந்து சமைக்க கவிஞர்கள் இருவரும் தயாராய் இருக்க , பைந்தமிழ்ச் செம்மல் அழகர்  சண்முகம் அவர்கள் “உலகம்” என்ற முதற்சொல்லைச் சரியாக இரவு 8.55 மணிக்குக் கொடுத்தார். கம்பராமாயணத்தின் முதற்பாடலின் முதற்சொல்லைக் கொடுத்துப் பச்சைக் கொடிகாட்ட கவித்தேர் தமிழன்னையின் ஆசியோடு புறப்பட்டது.

“உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும்
தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம் ?” என்று விவேக் தொடங்க

“பெறுதலைத் தானீக்கிப் பேரானந்த தத்தில்
உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் ?” என்று பாவலர் தொடர

களைகட்டத் தொடங்கியது பைந்தமிழ்ச் சோலை . 30 நொடிகளுக்கொரு பாடல் சோலையில் மலர்ந்து மணம் பரப்பியது. அதன்  நறுமணத்தை நுகர நூற்றுக்கணக்கானோர் சோலையில் கூடினர். எல்லோர் விழிகளும் இமைகொட்டாமல் அலைபேசியையும் . கணினியையுமே மொய்த்துக் கொண்டிருந்தன. என்ன வேகம் ! என்ன வேகம் ! . இடைவெளியின்றித் துள்ளி வந்தன பாக்கள் இருவரிடமிருந்தும் ! ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர் குருவும் சீடனும் !! சோலைக் கவிஞர்கள் நுட்பமாய் ஆய்ந்துகொண்டிருந்தனர் அவசரத்தில் எங்கேனும் பிழை தென்படுகின்றதா என்று ! ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம் .

நேரம் செல்லச் செல்ல ஆட்டத்தைக் கண்டுகளிக்க , விருந்தைச் சுவைக்க மேலும் பலர் கூடினர். சோலையே திருவிழாக் கோலம் பூண்டது. சுவைஞர்களின் விழி சோர்ந்தபோதும் சமைக்கும் கவிஞர்களின் விரல்கள் சற்றும் சோர்ந்திடவில்லை. .

சொல்லழகும், பொருளழகும் …அடடா ! அந்தச் சொக்கனே சொக்கியிருப்பான் இவர்தம் பாக்களில் ! புயலெனச் சுழன்று நிமிடத்திற்கு இரண்டு பாக்கள் பறந்து வந்தாலும் சித்தர்களின் வாக்கினைப் போல் தெள்ளத் தெளிவாய்த், தெவிட்டாத் தெள்ளமுதாய் அமைந்திருந்தது சிறப்பு !! உலகம் என்ற சொல்லில் தொடங்கி அதே சொற்கொண்டு முடித்து மண்டலவந்தாதியாய் அமைந்தது மற்றுமோர் சிறப்பு.

காட்டாக சில பாடல்கள் தருகிறேன் ….. நான் சுவைத்த அற்புத விருந்தை எல்லோரும் சுவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ….!!! இப்பாடல்களில் அமைந்துள்ள எதுகை, மோனை அழகும், கவித்துவமும் நெக்குருகச் செய்யும். ,முழுதும் இவ்வாறே அமையப்பெற்றுள்ளது.  இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .என்பதுபோல் மும்மூன்று பாக்கள் கொடுத்துள்ளேன்.

1. மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்?….. விவேக் பாரதி

விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்? ….. பாவலர்

2. இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்…. பாவலர்

பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்?….. விவேக் பாரதி

3. நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம்?….. பாவலர்

நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? ….. விவேக் பாரதி

வாழ்வின் நிலையாமையையும் , இறையருளின் மேன்மையையும் மிகச் சிறப்பாய்க் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தததைப் பலரும் பாராட்டினார்கள் . இந்தச் சாதனை தமிழிலக்கிய உலக வரலாற்றில் பதிவாகிப் பலருக்கும் உந்துசக்தியாய் அமையும். இந்த மின்னல் வேக விளையாட்டில் இருவருமே மாபெரும் வெற்றியாளர்கள் ! இதுகுறித்து பைந்தமிழ்ச்சோலை நிறுவுனர் பாவலர் மா வரதராசன்,

பத்திரக்கிரியாரின் மெய்ஞானப்புலம்பலை அடியொற்றி, அதேயாப்பில் ஆனால் அந்தாதியாக இச்சாதனையை யாம் செய்துமுடித்தோம். எவ்விதமோவெனின், ஒன்றரை மணிநேரத்தில் நூறுபாடல்களென, நாற்பது நொடிக்குள் ஒரு பாடல் என்ற வேகத்தில், வெண்ட டையோடும், அந்தாதியோடும், பேரின்பப் பொருளினின்றும் சற்றும் விலகாமல், பொருண்மைச்சிறப்புடனும் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. எம் சோலையாலன்றி வேறியார்க்கும் இச்சாதனை வய்க்குமோ என்பது ஐயமே.! எல்லாம்வல்ல பரம்பொருளும் எந்தமிழ்த்தாயின் அருளுமே இதற்கு அணியமாயிற்றென்பது கண்கூடு” என்கிறார்.

இந்த வெற்றிக் கூட்டணி தம் ஆட்டத்தை இன்றோடு நிறுத்தவில்லை . வாராவாரம் சனிக்கிழமைகளில் தொடரவிருக்கிறது.

இப்படிப்பட்ட அற்புத விருந்தைச் சுவைக்க …..”பைந்தமிழ்ச் சோலைக்கு” வாருங்கள் !!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *