நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 27
–நாங்குநேரி வாசஶ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 27 – தவம்
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
மத்தவங்க தனக்கு செய்யுத துன்பத்த பொறுத்துக்கிடுததும் அவங்களுக்கு பதிலுக்கு துன்பம் செய்யாம இருக்குததும் தான் தவம்.
குறள் 262:
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
தவ ஒழுக்கம் ஒடயவங்களால தான் தவம் செய்ய முடியும். அது இல்லாதவங்களால முடியாது.
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்
துறவிங்களுக்கு சாப்பாடும் மத்ததும் குடுத்து ஒதவணும் னு நெனச்சி குடும்ப வாழ்க்கைல இருக்கவங்க தவம் செய்யுதத மறந்து இருக்காங்களோ?
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும் உள்ள தவம் ங்குத நோம்பு வலிமையா உள்ளவனால நெனைச்ச நேரம் எதிரிங்கள தோக்கடிக்கவும் சேக்காளிங்கள ஒசத்தவும் முடியும்.
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
உறுதியான நோம்பால நெனைச்சத நெனச்ச மாதிரி அடஞ்சுக்கிட முடியும்ங்கதால குடும்ப வாழ்க்கைலயும் அது முனஞ்சி செய்யப்படுது.
குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
தவம் செய்யுதவங்க மட்டுந்தான் தனக்குரிய கடமைய செய்யுதவங்க மத்தவங்க ஆச அலைகழிக்கதால வீணாப்போன காரியத்த தான் செய்வாங்க.
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
புடம்போட்ட தங்கம் மினுங்குததுபோல தன்னய நோவடிச்சுக்கிட்டு ஒரு குறிக்கோள நினைச்சி நோம்பு இருக்குதவங்க எந்த துன்பம் வந்தாலும் ஒசந்து நிப்பாங்க.
குறள் 268:
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
தன்னோட உசிருங்குத பற்றுதலும், தான் ங்குத அகம்பாவமும்இல்லாதவங்களோட பெருமய புரிஞ்சிக்கிட்டு ஒலகத்து மத்த உசிருங்கல்லாம் கும்பிடும்.
குறள் 269:
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
தவத்தால வலிமையடஞ்ச ஒருத்தனால எமனயும் செயிக்க முடியும்.
குறள் 270:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
ஏதுமில்லாத ஏழங்க அதிகமா இருக்குததுக்கு காரணம் தவம் செய்யுதவங்க கொறைவாவும், செய்யாதவங்க நெறய பேரும் இருக்கதுதான்.