Photo-poetry-contest-247

-மேகலா இராமமூர்த்தி

பச்சைக் கிளிகள் மெல்லிய கிளைகளில் ஊசலாடும் அழகை இச்சையோடு படமெடுத்துத் தந்திருப்பது PicturesQueLFS. கண்ணைக் கவரும் இந்த வண்ணப் படத்தைப் படக்கவிதைப்போட்டி 247க்குப் பரிந்துரைத்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.

”மக்கள்தாமே ஆறறி வுயிரே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” (தொல்: பொருள் – 577) என்ற நூற்பாவில் மக்கள் ஆறறிவுடைய உயிர்கள். அவர்களைப் போலவே பிற உயிர்களிலும் ஆறறிவு படைத்தவை உள என்கிறார் தொல்காப்பியர். இதற்கு உரைவரைந்த இளம்பூரண அடிகள் மக்களல்லாத குரங்கு யானை கிளி முதலிய உயிர்களும் ஆறறிவு படைத்தவையே என்று விரித்துரைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார்.

எனவே கிளிகள் அறிவிற் சிறந்தவை என்பதில் ஐயமில்லை. அதனால்தான், அவை மனிதர்கள் ‘கிளப்பதை’ (சொல்லுவதை) அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவ்வாறு கிளத்தல் பற்றியே அவை ’கிளி’ எனப் பெயர்பெற்றன என்ற கருத்துமுண்டு.

கிளியின் சிறகைப் போலிருக்கும் பொன்னின் ஒருவகைக்குக் ’கிளிச்சிறை’ என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கின்றனர் நம் பண்டைத் தமிழர். கிளிகளைப் பற்றிக் கிளப்பதற்குச் செய்திகள் பலவுண்டு. எனினும், இக் கிள்ளைகள் பற்றிய கவிதைகளோடு கவிஞர்கள் பலர் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று அமைகின்றேன்.

*****

”கிளிகளிரண்டும் அரங்கனின் நாமத்தை உச்சரித்து, மென்சிறகை மெல்லத் தோய்த்ததால் சிவந்தெழுந்தது பூந்தளிர்” என்று கவி ஓவியம் தீட்டியுள்ளார், திருமிகு. சக்திப்ரபா.

அரங்கன் நாமத்தை
அனுதினமும் அரங்கேற்றும்
கிளிகளிரண்டும் – வறண்ட
கிளைகளில்
பையக் காலூன்றி
ரங்கா ரங்கா என்றே
ராகமிசைத்து
மென்சிறகின் வர்ணத்தை
மெல்லத் தோய்த்ததில்,
உலர்மேனி சிவந்து
கிளர்ந்தெழுந்த பூந்துளிர்!

 *****

”சருகான மரத்திலும் நீ; சாய்ந்தாடும் கொடியிலும் நீ; பசுமைநிறச் செடியிலும் நீ; பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ என எங்கெங்கும் உன் வண்ணம்; அதில் உருவாகுது ஆயிரம் எண்ணம்; எமைவிட்டுப் பறந்துவிடாதே பைங்கிளியே!” எனக் கிள்ளையிடம் கொஞ்சுமொழி பேசுகின்றார் திருமிகு. எம். சுதா.

கிளி

பச்சைநிறக் கிளியே உனைக்
கண்டால் பரவச நிலையே!
சொன்னதைச் சொல்லும் கிளியே
நீ சுந்தர வதன எழிலே!

பழங்களைத் தின்னும் கிளியே உனைப்
பார்ப்பவர் மனதில் மகிழ்வலையே!
காதல் சிந்தனை தூண்டும் கிளியே
நீ சிறகடித்துப் பறப்பது பைம்பொழிலே!

சருகான மரத்திலும் நீ
சாய்ந்தாடும் கொடியிலும் நீ
பசுமைநிறச் செடியிலும் நீ
பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ

எங்கெங்கு காணினும் உன்றன் வண்ணம்
மனமகிழ்ச்சியை அளிக்கும் அதுவே திண்ணம்
அதில் உருவாகும் ஆயிரம் எண்ணம்
அத்தனையும் புதுப்புது ஜாலவர்ணம்

மதுரை மீனாட்சி கையில் நீ
மார்கழி நாயகி கோதை கையிலும் நீ
நல்ல சேதிகள் நாளும் சொல்ல
நாங்களும் இருக்கிறோம் அவ்வழகைக் காண
கிளியே கிளியே நீ பறந்து போகாதே!

*****

”அடுத்தவர்க்குக் கொடுக்க மனமில்லா மாந்தர்களே! ஈத்துவக்கும் இன்பத்தைக் கிள்ளைகளிடம் கற்பீரே!” என்று இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கிளிகள் பாடம்…

அடுத்த வேளை உணவிற்கே
ஆலாய்ப் பறந்திடும் ஏழையர்முன்,
கிடைத்த உணவு போதாதெனக்
கூடுதல் வாங்கிப் பாழ்படுத்தி
அடுத்த வர்க்கும் கொடுக்காத
அன்பே யில்லா மாந்தர்களே,
கொடுத்துக் கூட்டமாயச் சேர்ந்துண்ணும்
கிளிகள் பாடம் கற்பீரே…!

*****

”வேற்றுமொழி ஓதி தினம் வாடி வதங்கும் பள்ளிச்சிறார் போலன்றிப் புனந்தோறும் சுற்றித் தினையுண்ண வா கிள்ளாய்!” என்று கிள்ளைகளை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

அன்னையுடன் ஆடிப்பழகும்
அற்புத வாய்ப்புமின்றிச்
சுற்றி வட்டமிட்டுச்
கற்றிடுமோர் சூழலற்றுக்
கூண்டில் அடைபட்டு
வேற்றுமொழி ஓதி தினம்
வாடி வதங்கிடும்
பள்ளிச் சிறார் போலன்றி
புனம்தோறும் சுற்றி நாளும்
புதுக் காற்றைச் சுவாசித்து
தினைவளத்தைத் தான் புசித்து
திளைத்திட வா! என் கிள்ளாய்!

*****

கொஞ்சுமொழியால் என் நெஞ்சம் கவர்ந்த கிள்ளைகாள்! உமைக் காண்கையில் நான் கவிஞன் ஆகிறேன்! செடியைவிட்டு என் தோளில் ஏறுங்கள்; நாம் நட்புக் கொள்வோம்! என்று கிளிகளைப் பாசத்தோடு அழைக்கிறார் திருமிகு. பா.மஞ்சு பார்கவி.

கூண்டுக்குள் இருந்து சுதந்திரம் கிடைத்துப்
பறந்துவந்த பச்சைவண்ணக் கிளிகளே!
உங்கள் பரபர ஓசைகேட்டு ஓடி வந்தேன்
அங்கே றெக்கை விரித்து அமர்ந்திருந்த
ஒரு கிளியைப் பிடித்தது!

அதைப் பார்க்க அருகில் சென்றபோது
என் ஓசையைக் கேட்டு எங்கோ ஒளிந்துகொண்டது!
ஆனால் பழுத்த மிளகாய்போல் உன்மூக்குக்
காட்டிவிட்டது கிளியே நீ அங்கே என்று!

கொஞ்சுகின்ற கிளியே! என் மனதைக்
கொள்ளை அடித்ததைச் சொல்வாயோ!?
உன் வசியம் செய்யும் விழி
என்னை மயக்கிடச் செய்யுதே!

உன் கொஞ்சும் பேச்சு என்னைக் கவர்ந்திடுதே!
சொன்னதைச் சொல்லும் வித்தை எங்குக் கற்றாய்?
கிளியே உன்னைப் பார்க்கும்போது
கவிதை என்னும் கண்மணியைக்
கரம்பிடித்து நான் கவிஞன் ஆகிறேன்!

செடியில் அமர்ந்து என்ன செய்கிறாய்?
பறந்து வந்து என் தோளின்மேல்
அமர்ந்துவிடு நாம் நட்புக்கொள்வோம்!

*****

”ஆபரணங்களில் பதிக்கப்படும் மரகதக் கல்லைப்போல் மரத்தை அலங்கரிக்கும் கிளிகளே! உம் எச்சில்கூடப் புவியைப் பசுமையூட்டப் பயன்படுகின்றது!” என்று கிளிகளுக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார் திருமிகு. அபிநயா சம்பத்.

வறண்டு நிற்கும் குச்சிகளை
அலங்கரிங்க அதில் அமர்ந்திருக்கும் கிளிகளே….!

பெண்களின் கழுத்தை அலங்கரிக்கும்
ஆபரணங்களை, மேலும் அழகூட்ட அதில்,
பதிக்கப்படும் பச்சை மரகத மணிகளைப் போன்று
அத் தாவரங்களை அலங்கரிக்கின்றீர்….!

நீங்கள் அமர்ந்ததால் என்னவோ,
அச்செடியில் மாத்திரம் பச்சை இலைகளின் சங்கமம்….!

மனிதர்களின் கொடிய செயலால் இப்படி
வறண்டு கிடக்கின்றது இப்புவி!
ஆனால் உங்களின் எச்சில் கூட
இப்புவியைப் பசுமையாக்குகின்றது….!
உங்கள் எச்சில் கூட இப்புவியை
பசுமையாக்குகின்றது பச்சை கிளிகளே…!

சாய்ந்து வறண்டு விழப்போகும்
அந்தச் செடிகளைப் பிடித்து இப்புவியில்
பசுமையை நிலைநாட்டுகிறீர்….!
இந்த மனிதர் கூட்டம் உங்களிடம்
பாடம் கற்க வேண்டும்!

*****

”கிளியே! சுதந்தரமாய்ப் பறந்துதிரிந்த உன்னைக் கூண்டிலடைத்துச் சீட்டெடுக்கப் பழக்கியதேன் மானுடன்? சிறகைவிரித்து மெல்ல விண்ணைநோக்கிப் பறந்திடு! வெற்றிக்கனி உண்டு மகிழ்ந்திடு!” என்று கிள்ளைக்கு நல்லுரை நவில்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

கூண்டுக்குள் கிளியே
உன்னைக் கண்டு கண்டு
சுதந்திரமாய்ப் பறந்து திரிவதைக் கண்டதும்
சொர்க்கம் என்று நினைத்தேன்

பறந்து திரிந்து காய் கனிகளை
உண்டு மகிழ்ந்த உன்னைச்
சிறகொடித்துக் கூண்டிலடைத்துச்
சிறு உணவிற்குச்
சீட்டெடுத்துக் கொடுக்க பழக்கியதேன்?

எடுத்துக் கொடுக்கும் சீட்டை வைத்து
எதிர்காலம் சொல்லி முடிக்க
எல்லாம் அவன் செயல் என்று அறிந்தும்
எதிர்காலம் அறிந்து நீ என்ன செய்வாய்?

எதிர்வரும் நிகழ்வுகளை
எதிர்பார்த்துக் காத்திருக்கக்
கவலை உன்றன் நெஞ்சில்
மெல்லக் குடிபுகுமே!

ஜோதிடத்தில் வைத்த நம்பிக்கையை
உன்மீது வைத்துத் தன்னம்பிக்கையோடு முயன்றிடு!
சிறகை விரித்து மெல்ல விண்ணை நோக்கிப் பறந்திடு!
வெற்றிக்கனியை உண்டு மகிழ்ந்திடு!

மானிடரின் ஜாதகத்தைச்
சொல்லி முடிக்க நீ உதவிட
உன்னைப் பற்றி இங்குச் சொல்லி
ஜோதிடனாய் நான் மாறினேனோ?

*****

அழகிய பாமாலைகள் புனைந்து பசுங்கிளிகளுக்குச் சூட்டிமகிழ்ந்த கவிஞர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

என் நிற மரங்களெல்லாம் இன்று
செந்நிறமாய் மாறி நிற்பதறிந்து
குடும்பத்துடன் ஓடிவந்து பார்த்தேன்…

திரும்பிய திசையெங்கும் பச்சை கண்டு
திக்கெட்டும் மானுடர் இச்சை கொண்டுத்
திகைப்புடன் நம் தேசம் புகுந்ததொரு காலம்!

வளங்கள் அனைத்தும் அழித்து
வானுயரக் கட்டிடங்கள் செழித்து
உயிரினங்கள் மாற்றுதேசம் தேடுது இக்காலம்!

தாய் மண்ணைப் பிரிந்து
தாயிழந்த பிள்ளையாய் வறிந்து
தவித்துத்தான் நிற்கிறோம் அந்நிய தேசத்தில்!

வாயற்ற ஜீவனென்று விட்டுவிட்டாய்
வாழ்க்கை என்பதைத் தொலைத்துவிட்டாய்
என் கதி விரைவில் உனக்கென்பதை மறந்துவிட்டாய்!

நான் தொலைந்துபோனது போல்
நீ தொலைந்து போகுமுன்னே நிதானமாய் யோசி!

கண்ணை அழித்து ஓவியம் வாங்கி
மண்ணை அழித்துச் சொத்துக்கள் சேர்த்து – உன்
மக்களை செவ்வாய் கிரகம் அனுப்பும் எண்ணமோ?

பசுமைதனை அழிக்குமுன்னே பலமுறை யோசி – உன்
தலைமுறை வாழ வழிவிட யோசி!

”கண்ணை அழித்துச் சித்திரம் வாங்குதல்போல், மண்ணை அழித்துச் சொத்துக்கள் சேர்க்கும் மானுடா! இத்தேசத்தை அழித்துச் செவ்வாய்க் கோள்புக உத்தேசமா?” என்று மானுடனால் புவிக்கு நேரும் கெடுதியை நச்சென்று கவிதையில் பதிவுசெய்திருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.