இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 16

அவ்வைமகள்
16. தோழமையின் பரிசுத்தம்
மனித உறவுகள் பலப்பல – அவற்றுள் நட்பு – தோழமை என்னும் உறவு இன்றியமையாத ஒன்று.
தனிமனிதர்கள், சமுதாயம் என்னும் தோப்பை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு நட்பே நிலமாக, வித்தாக, நீராக, எருவாக, களைநீக்கியாக, வேலியாக, எல்லாமுமாக அமைகிறது என்பதைத் தெற்றென விளக்கியவர் வள்ளுவர் ஒருவரே.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்குரிய யாவுள காப்பு
என்று நட்பியலைத் துவங்கும் வள்ளுவர் நட்பின் கூறுகள் ஒவ்வொன்றையும் தனது குறட்பாக்களில் விண்டு விண்டு வைத்து வாக்கியச் சாட்டையால் விளாசித் தீர்க்கிறார்.
நட்பியலின் பதினாறு அதிகாரங்களில் மட்டுமல்ல; திருக்குறளில் பல்வேறு பிற இடங்களிலும் கூட நட்பின் சிறப்புக்கள் வெளிப்படுகின்றன. அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறன் இல் விழையாமை பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவு அறிதல், கல்லாமை, கூடாவொழுக்கம் ஆகிய அதிகாரங்களிலேயும் கூட நட்பின் பல கூறுகள் பேசப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் மேலாக, வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை, மக்கட்பேறு ஆகிய அதிகாரங்கள் தருகின்ற சித்தாந்தங்களிலே கூட நட்பின் மகத்துவதை, வள்ளுவர் மேம்படுத்துகின்ற பாங்கை நாம் மறப்பது எவ்வாறு?
நட்பு – தோழமை என்கிற உறவை, வள்ளுவர் இத்துணை விரிவாகப் பேசுவதன் காரணம் அதன் முக்கியத்துவமே.
வள்ளுவரின் நட்பு பற்றிய கருத்துக்களை ஆராதனை செய்தவன் பாரதி. கண்ணன் என் தோழனில், வள்ளுவரது நட்பியல் பரிமாணங்களை நீளவகலத்தோடு அவன் ஆழமாக ஏன் ஆக்ரோஷணமாகவே பிரதிபலிக்கிறான்.
உள்ளத்திலே கர்வம் கொண்ட போதினிலே
ஓங்கியடித்திடுவான் – நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வாரத்தை சொன்னால் அங்கு
காறி உமிழ்ந்திடுவான் -சிறு
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட
பாசியை எற்றிவிடும் – பெரு
வெள்ளத்தைப்போல் அருள் வார்த்தை சொல்லி
மெலிவு தவிர்த்திடுவான்
வள்ளலாரும் ஸ்டீவ் ஜாப்சும் என்ற தலைப்பின் கீழ், நாம் இருவர் பற்றியும், பேசி வரும் இத்தருணத்தில், நட்புக்கு இங்கே என்ன வேலை என்று எண்ணத் தோன்றும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த தொழிற்நுட்பப் புரட்சி, சமுதாயம் தழுவிய உலகளாவியதொரு புரட்சி. இந்தப் புரட்சி, தொழிற்கூடம், தொழிற்பணிகள், பணியார்களுடனான தொடர்பு, அவர்களோடு தோளுடன் தோள் நின்று பணிசெய்வது, இரவு பகல் பாராமல் பணிசெய்யுமாறு அவர்களை ஊக்கப்படுத்தி நெறிமுறை செய்வது என்பதோடல்லாது, வணிகம், பண மாற்று லாப நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு, கூட்டங்களை ஏற்பாடு செய்வது, கூட்டங்களில் பேசுவது, பத்திரிகை யாளர்களுடன் பேசுவது என எத்தனையோ பணிகளை உள்ளடக்கியது.
இவை எல்லாப் பணிகளிலும் ஒன்று மையமானது – ஆதாரமானது – அதுவன்றி மற்றைவை எவையும் நடக்கா – இயங்கா எனும்படியான ஒன்று உண்டு என்றால் அதுதான் நட்பு – தோழமை. மிகக் குறிப்பாக, ஜாப்ஸின் நிறுவனமான ஆப்பிளில், பணி செய்தவர்களிடம் அவரது தோழமை என்கிற தலைப்பில் நமது விவாதம் மிக முக்கியமானது.
இங்கு, முதலில், ஸ்டீவ் ஜாப்சிற்கு நட்பு உணர்வு – தோழமை நேசம் இருந்ததா – இருந்திருந்தால் – அது எவ்வாறு இருந்தது என்பதே நம் சிந்தனை.
இத்தருணத்தில், மீண்டும் நாம் வள்ளுவனிடம் சென்றாக வேண்டும்.
அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் முனைப்புடன் தந்திட்ட வள்ளுவத்தில், பொருட்பாலை ஏழு இயல்களாகப் பிரித்தல் மரபு: அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என்று. இதில், குடியியலுக்கு முன்பாக, படையியலுக்குப் பின்னாக, நட்பியலை வள்ளுவர் வைத்த நேர்த்தி இருக்கிறதே அப்பப்பா! அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம்முள் பரவசம் பெருகும்.
குடிமைக்கு நட்புதான் முதன்மை – மற்றவை எல்லாம் அப்பால் என்று அநாயாசமாய் வள்ளுவன் சொல்லிப்போன பெற்றியைப் போற்ற வார்த்தைகள் போதா.
ஆம்! வள்ளுவன் காட்டியது போல, ஒரு நிறுவனம் என்பது குடிமை, அது ஒரு நாட்டின் நிர்வாகம் போன்றது. நிறுவனம் நாடென்பதால், ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஒரு நாட்டின் மக்கள் போன்றவர்கள். நிறுவனத்தின் தலைவன் அரசனே போலாகிறான்.
இந்நிலையில், அரசனைப் பற்றி வள்ளுவன் கூறுவதைக் கவனிப்போம்:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும் என்பது இக்குறளின் பொருள்.
மன்னனின் நிலம் மீக்கூறுவதற்கு இரட்டைக் கட்டளையை விதிக்கிறார் வள்ளுவர். தோற்றத்தில் எளிமை – கடுஞ்சொல் இல்லாமல் இருப்பது.
தோற்றத்தில் எளிமையானவர் என்பது ஜாப்ஸின் மாபெரும் அடையாளம்தான். அவர் எளிமையை உலகே அறியும் – அதுவும் இன்றைய ஊடகங்களில் வலம் வரும் அவரின் உருவப் படங்கள் மீண்டும் மீண்டும் அவரது எளிமையைப் பறைசாற்றுவதை நாமறிவோம். எனவே அவரது தோற்ற எளிமை நமது விவாதப் பொருளாக இருக்க இயலாது.
அதேநேரத்தில், தோற்றத்தின் எளிமையால் மட்டுமே ஒருவன் பிரசித்தி பெற்ற நல்ல தலைவனாக மாறிவிட இயலாது என்று வள்ளுவர் ஏற்கனவே சொல்லிவிட்டதால் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரசித்தத்திற்கு அவர் எளிமைத் தோற்றம் மட்டுமே காரணமாய் இருந்திருக்க வாய்பில்லை என்று கொள்வோம்.
தோற்றத்தின் எளிமையோடு வாக்குக் கடுமை இல்லாது இருந்தாலொழிய தலைவன் உருவாவதில்லை என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கடுஞ்சொல் அற்றவராய் இருந்தாரா என்பதை நாம் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது.
கடுஞ்சொற்கள் ஒருவர் வாயில் –உருவாகுவது எவ்வாறு என்று பார்த்தால், பளிச்சென்று தெரியும் மூன்று காரணங்கள் உண்டு. (1) அதிகாரத் திமிர் (2) தனக்கு எல்லாம் தெரியும் என்பதான தலைக்கனம்; (3) கீழ்மையான பழக்கவழக்கங்கள்/சொல்லாடல் உள்ள குடும்பத்தில் பிறந்திருப்பது அல்லது – கீழ்த்தரமான நண்பர்களுடன் சேர்க்கை வைத்திருப்பது என்று.
ஒரு மன்னனுடைய – தலைவனுடைய வாயில் கடுஞ்சொற்கள் உருவாவதற்கு மூன்றாவது காரணம் ஏற்பு இல்லாத ஒன்றாகவே இருக்கும். எனவே பெரும்பாலும், அதிகாரத் திமிரும், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற தலைக்கனமுமே ஒரு மன்னனை- ஒரு தலைவனைக் கடுஞ்சொல் பேச வைக்கும்.
ஸ்டீவ் ஜாப்சைப் பொருத்தவரை அதிகாரத் திமிரும், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற தலைக்கனமும் கொண்டவராக எவராலும் சித்தரிக்கப்படவில்லை என்பதனாலும், அவரும் அவரது நிறுவனமான ஆப்பிளும் பிரசித்தம் அடைந்தவை என்பதனாலும் அவர் கடுஞ்சொல் பேசாதவர் என்று முடிவு செய்துவிட்டுப் போய்விடலாம்.
ஆனால், பழகுபாங்கில் ஜாப்ஸின் சொல்லாடலின் தன்மை உண்மையிலேயே எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துகொண்டு அதன்பின் இதுபற்றி முடிவு செய்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஸ்டீவ் ஜாப்சின் ஆப்பிள் நிறுவனப் பணியாளர்கள் பெரும்பாலாருடைய ஒருமித்த கருத்து என்னவென்றால், ஜாப்ஸ் பேச்சிலே நெளிவு சுளுவு இருக்காது – கண்டிப்பும் அழுத்தமும் எப்போதும் இருக்கும் – பல தருணங்களில் கேட்பவர்களுக்கு அதைச் சுலபமாய் எடுத்துக் கொள்ளவியலாது! குறிப்பாக, பணியில், “இதைசெய்வது கடினம்” என்று பணியாளர் எவரேனும் சொன்னால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார் – என்பதே!
இந்த விமரிசனத்தைக் கேட்ட மாத்திரத்தில், ஜாப்ஸ் தலைக்கனம் பிடித்த தற்குறி, கடுஞ்சொல் உடையவர் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது அப்படி இல்லை.
ஜாப்ஸின் அணுகுமுறை எவ்வாறானது என்பதை விளக்க ஒரு எடுத்துகாட்டை நமக்கு அளிக்கின்றனர் ஆப்பிள் பணியாளர்கள்.
தமது அலுவலகத்தில், ஜாப்ஸ் ஒருநாள், லாரி கென்யன் என்ற பெயருடைய ஒரு பொறியாளரின் அறைக்குள் நுழைகிறார். நுழைந்து கென்யனிடம், மேகின்டாஷ் இயக்க தளம் (Macintosh Operating System) இயக்கத் துவங்குவதற்கு (booting time) அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதே என்று புகார் செய்கிறார். கென்யன் ஜாப்சிற்கு விடையாக, இயக்கத் துவக்கம் தாமதமாவதற்கான காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.
ஜாப்சோ, கென்யன் தந்த விளக்கத்தைக் கேட்கக் கூட விரும்பவில்லை என்பார் போல – கென்யன் பேசிமுடிக்கும் முன்பே குறுக்கிட்டுப் பேசுகிறார். “அது ஒருவரது வாழ்வைப் பாதுகாக்கும் என்பதாக எடுத்துக்கொண்டு, , மேகின்டாஷ் இப்போது இயக்கத் துவக்கத்துக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்திலிருந்து ஒரு பத்து வினாடிகளைக் கத்தரித்து எடுத்து விடமுடியுமா?” என்றபடியே மடமடவென வெண்பலகைக்குச் சென்று ஒரு கணக்கு போட்டுக் காட்டுகிறார். “ஐம்பது லட்சம் பேர் மேகின்டாஷ் பயன்படுத்துவதாகக் கொள்வோம். ஒருவருக்கு பத்து வினாடிகள் என்று எடுத்துக் கொண்டால், ஆண்டொன்றுக்கு முன்னூறு லட்சம் மனித மணிகளாகும். இது நூறு பேரின் முழு வாழ்நாளாகும்!” என்று சுருக்கென நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லிவிட்டு, கென்யனின் அறையை விட்டு வெளியேறுகிறார்.
கென்யனுக்கு, இதனால் ஜாப்ஸின் மீது கோபம் கொப்புளித்ததா? அவர் ஜாப்சை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினாரா? அல்லது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆப்பிளை விட்டு வெளியேறினாரா?
இல்லை!
மாறாக – சில வாரங்களிலேயே இருபத்தி எட்டு வினாடிகள் சீக்கிரமாக மேகின்டாஷ் இயக்கத் தொடங்குமாறு செய்தார் ஜாப்ஸ் கேட்டது வெறும் பத்து வினாடிகள் மட்டுமே.
ஆட்களைத் தட்டிகொடுத்து வேலை வாங்க வேண்டும் என்று சொல்வார்களே அதைப் போன்றது இது. தட்டிக் கொடுப்பது என்பதனைச் சவால் தருவது என்பதாகக் கொண்டவர் ஜாப்ஸ் என்பது புரியும்.
சிந்தித்துப் பாருங்கள் – தட்டிக் கொடுப்பது என்பது வேலை செய்யாதவனை வேலை செய்யவைப்பதான பாணி. அங்கே வேலை செய்யா ஒருவனை ஊக்குவிப்பதுதான் நோக்கம் – இங்கே, பணியின் தரம் முக்கியமில்லை – நீ எப்படி செய்தாலும் பரவாயில்லை – நீ வேலை செய் என்பதான நிலை அது. ஆனால், ஜாப்ஸின் துறை முன்னோடியான தொழில்நுட்பத்துறை – ஆப்பிளுக்கு வேலைக்கு வருபவர்கள், வேலை செய்ய விழையாமல் வருவதில்லை – அத்தகைய நபர்கள் தெரிவு செய்யப் படுவதுமில்லை. ஒருவேளை எதோ தவறுதலாக வேலை செய்ய விழையா நபர்கள் எவரேனும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பின், அவர்கள் தக்க வைக்கப்படமட்டார்கள் என்பது ஆப்பிளில் ஒரு நெறி முறை – ஏனெறால் – அது ஒரு தொழில்நுட்ப நிறுவனம் – இங்கே பொருட்கள் விற்பனையாகி வியாபாரம் நடக்கவேண்டும் அன்றேல் இங்கே பிழைப்பு நடக்காது. உருவாக்கப்படும் பொருட்களின் தரமும் உழைப்பும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு இசைந்தனவாய் இருந்தால்தான் பொருட்கள் விலை போகுமே தவிர வேறெந்த ஒன்றாலும் இல்லை. பொருட்கள் வியாபாரச் சந்தையில் தோற்றதென்றால் ஒரு தொழில்நுட்பப் பணிச்சாலையை நடத்தமுடியாது. எனவே தான், சவால் தந்து ஊக்குவிக்க வேண்டிய நிலைப்பாட்டை ஜாப்ஸ் எடுக்க வேண்டியவராகிறார்.
ஆப்பிளில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் சவால் என்றால் அது நித்திய சவால். வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி, நாளுக்கு நாள் என்பதான தொடர்ந்த சவால்கள் அவர்கள் முன்னே இருக்கும். உலகின் அதிபிரமாதமான பொருட்களை உருவாக்க வேண்டும் என்று ஓயாத சவால். இதுதான் ஆப்பிளின் நித்தியக் கட்டளை.
இவ்வாறான தொடர் சவால் நிலையும், அதற்கான தொடர் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நிலைமையினால், “நீங்கள் பயமுறுத்தப்படுவதாக நினைக்கவில்லையா?” என்று கேட்டபோது , அந்தப் பணியாளர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“ஜாப்ஸின், உலகின் அதிபிரமாதமான பொருட்களை உருவாக்கவேண்டும் என்கிற ஆவல் உன்னதமான காரணத்திற்கானது. தொழில்நுட்பத்தின் மூலம் உலகை மாற்ற வேண்டும் என்பது ஜாப்ஸின் ஆசை. இதுகாறும் எவையெல்லாம் செய்ய இயலாது என்று உலகமக்கள், நினைத்திருந்தார்களோ, அவ்வகையான அற்புதச் செயல்களை அவர்கள் செய்யுமாறு அவர்களை தொழில்நுட்பத்தின் மூலம் பலப்படுத்தும் புனித நோக்கம் இது!” (அடிக்குறிப்பு 1 ஐ க் காண்க)
மீக்கூறும் மன்னன் நிலமாக ஆப்பிள் நிறுவனம் – மன்னனாக ஜாப்ஸ் என்பதற்கு ஜாப்ஸ் தனது நிறுவனத்தில் பணிசெய்த ஊழியர்களிடம் காட்டிய தோழமையும், அவர்களுக்கு ஜாப்ஸ் தெரிந்தெடுத்துக் கொடுத்த ஊக்கச் சொற்களுமே என்பதை சொல்லாமல் இருக்க எவராலும் முடியுமோ?
இதைத்தான் பாரதி “பெருவெள்ளத்தைப்போல் அருள் வார்த்தை சொல்லி
மெலிவு தவிர்த்திடுவான்” என்று சொன்னானோ?
ஆப்பிள் பணியாளர்களுக்கு, சவால்களோடு இன்னுமொரு ஊக்க சக்தியும் ஜாப்சிடம் இருந்து வந்தது அதுதான் அவர் நெகிழ்ந்து கண்ணீர் வடிப்பது. செய்யமுடியாத சாதனை ஒன்றைப் பணியாளர்கள், ஆப்பிளில், நிகழ்த்திவிட்டார்கள் என்றால் ஜாப்ஸ் அழுது கரைந்துவிடுவார். அந்த நெகிழ்வில் ஜாப்ஸ் தமக்குத் தந்த சவாலில் தாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போக, அடுத்து வரப்போகிற இன்னும் பெரிய சவாலுக்குப் பணியாளர்கள் காத்திருப்பார்களாம்.
அவரது நெகிழ்ந்து கரையும் தன்மை பற்றி, ஐசக்சன் (ஜாப்ஸின் சரிதையை எழுதியவர்) கேட்டபோது, அப்போதைக்கப்போது நான் பரிசுத்தத்தின் முன்னிலையில் இருப்பதைக் காண்கிறேன் – அது ஆத்மப் பரிசுத்தம் – அன்பின் பரிசுத்தம். (அடிக்குறிப்பு – 2 ஐக் காண்க)
ஜாப்ஸ் தங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையம் விசுவாசத்தையும் ஆப்பிள் பணியாளர்கள் சிலாகிக்க, பணியாளர்களின் விசுவாசத்தை ஆத்மப் பரிசுத்தம் – அன்பின் பரிசுத்தம் என்று ஜாப்ஸ் சிலாகித்த காதல் அடியார்கள் மீது, இறைவன் அன்புறுவதும்; இறைவனின்பால் அடியார்கள் அன்புறுவதுமான காதல் போன்ற அளப்பெரும் தன்மையுடையது.
காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, நெக்கு உள்ளார்வம் மிகப்பெருகி நினைந்து, நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் – என்னும் திருஞானசம்பந்தரின் தேவார வரிகள் நம்முள் ஆற்றா இன்பமாய் அலர்ந்து அலைசெய்வதான நெக்குருகும் நேரமிது.
(மேலும் பேசுவோம்)
அடிக்குறிப்பு
- Peers called his drive to create amazing products “The Noble Cause,” Sculley recalls, because Jobs wanted to create technology that would change the world by enabling people to do amazing things they never thought were possible before. (Walter Isaacson (2012). Real Leadership Lessons of Steve Jobs, Harvard Business Review, April 2012, ,https://hbr.org/2012/04/the-real-leadership-lessons-of-steve-jobs)
- “Every once in a while, I find myself in the presence of purity — purity of spirit and love — and I always cry.” https://www.businessinsider.com/steve-jobss-crying-reveals-his-emotional-side-2016-2)