வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 22

0
1

தி. இரா. மீனா

பசவேசர் தொடர்ச்சி

16. “பனைமரத்தடியில் பால்குடமிருந்தால்
பால்குடமென்று சொல்லமாட்டார்கள் குடமென்பார்
இந்த நிந்தனையின் சிந்தனையைப் பொறுக்க மாட்டான்
கூடலசங்கமதேவன்“

17. “இசையின் நுணுக்கம் தெரியாது
இசைவரிகளின் அளவு தெரியாது
தாளகதி தெரியாது
இசைக்கருவியை மீட்டிடத் தெரியாது
அமுதகணம் தேவகணமறியேன்
கூடலசங்கதேவனே ,உனக்குக் கேடு ஏற்படாமல்
நான் விரும்பியபடி பாடுவேன்“

18. “நெய்யின் சுவைக்கு ஈட்டியை நக்கும்
நாய் போன்றது என்வாழ்வு
உலகப்பற்று என் மனதை விடவில்லை
இதைப் பொறுப்பது உனது தர்மம் கூடலசங்கமதேவனே“

19. “உலகில் பெரியதொரு கடைவைத்து
நம்மகாதேவ வணிகசெட்டி உட்கார்ந்திருந்தார்
ஒன்றான மனமெனில் ’சட்’ டெனப் பேசுவார்;
இருமனமென்றால் பேசமாட்டார்
தம்படி இழக்கமாட்டார், அரைத் தம்படி பயனடையார்
நம்கூடலசங்கமதேவன் புத்திசாலி“

20. “இசைப்பிரியன் சிவனென்பார் அவன் இசைப்பிரியனல்லன்!
வேதப்பிரியன் சிவனென்பார் அவன் வேதப்பிரியனல்லன்!
நாதமிசைத்த இராவணனுக்கு ஆயுள் பாதி ஆனதே !
வேதமோதிய பிரம்மன் தலையறுந்து போனதே!
நாதப்பிரியனுமில்லை, வேதப்பிரியனுமில்லை
பக்திப்பிரியன் நம்கூடலசங்கமதேவன்“

21. “நாளை வருவது இன்றே நமக்கு வரட்டும்
இன்று வருவது இப்போதே வரட்டும்
இதற்கு அஞ்சுவது யார்?
“ஜாதய்ய மரணம் துருவம்“ – என
கூடலசங்கதேவன் எழுதியதைத் திருத்த
ஹரிபிரம்மானாலும் இயலாது“

22. “ஆயுள் முடிந்தாலன்றி மரணமில்லை
சொன்ன சொல் தவறினாலன்றி வறுமையில்லை
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு அஞ்சுவதேனோ?
கூடலசங்கமதேவரின் துணைகிடைத்த பின்னும்?

23. “நீரைக் கண்டால் மூழ்குவார்
மரத்தைக் கண்டால் சுற்றுவார்
வற்றிப் போகும் தண்ணீரையும் காயும் மரத்தையும்
நம்புபவர்கள் உன்னை எப்படியறிவார்கள்
கூடலசங்கமதேவனே?”

24. “நீருக்கு ஆம்பல் அழகு, கடலுக்குத் திரையழகு
பெண்ணுக்கு குணமழகு, வானிற்குப் பிறையழகு
கூடலசங்கமனின் அடியாருக்கு
நெற்றியின் நீரழகாம்“

25. “பாவம் புண்ணியம் அவரவர் விருப்பம்
’ஐயா’ என்றால் மோட்சம் ’அடே’ என்றால் நரகம்
இறைவனே! சரணனே வெற்றி உண்டாகட்டும் உனக்கு.
“வாழ்க நீ” எனச் சொல்வதிலேயே
கைலாசமுள்ளது கூடலசங்கமதேவனே“

26. “மாரியும் மாகாளியும் வேறில்லை
மாரியென்றாலென்ன?
கண்கள் தவறாகப் பார்த்தால் மாரி
நாக்கு தவறாகப் பேசினால் மாகாளி
கூடலசங்கமதேவனின் நினைவை மறந்தால் அது மாரி.”

27. “சமத்துவ அன்பு, சமத்துவ இன்பம்
சமத்துவ சுகம் அறியவில்லையெனில்
இலிங்கம் வணங்கி என்ன பயன்?
கூடலசங்கமதேவனை வழிபட்டு
நதியுள்  நதி இணைந்தது போல இல்லையெனில்
இலிங்கம் வணங்கிப் பயனென்ன?”

28. “உலகின் குறையத் திருத்த நீங்கள் ஏன் முயல்கிறீர்கள்
உங்கள் உடல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் மனங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
அடுத்த வீட்டுத் துன்பத்திற்காக அழுபவர்களை
கூடலசங்கமதேவன் நம்புவதில்லை”

29. “வேடன் பிடித்துவரும் முயலுக்கு விலைகொடுப்பார்
அரசன் பிணமெனில் பொடிக்காசும் தரமாட்டார்
முயலினும் கீழானது மனித வாழ்க்கை
கூடலசங்கம சரணரை நிறைமனதுடன் நம்புவாய்“

30. “மனதிற்குப் பிடிக்காத கணவன்
மனதில் நிலைப்பதில்லை தோழி
சிவனல்லாது வேறு புருஷர்கள்
எனக்குப் பிடிக்காது தோழி
கன்னியாயிருக்கும் போது கூடினேன்
சிறுவயதில் உன்னுடன் வாழ்ந்தேன்
உன் ஆணை ஐயனே கூடலசங்கமதேவனே”

31. “என்னென்பேன் என்னென்பேன் ஒன்றிரண்டானதை?
என்னென்பேன் என்னென்பேன் இரண்டொன்றானதை?
என்னென்பேன் என்னென்பேன் அழியாப் பெருமையை?
வள்ளல் கூடலசங்கமதேவன் தானேயறிவான்“

32. “வழிபாடுள்ளவரை இலிங்கத்தைப் பாடினேன்
பேச்சுள்ளவரை ஜங்கமரைப் பாடினேன்
நாவுள்ளவரை பிரசாதத்தைப் பாடினேன்
இம்மூன்றும் அழிந்தபிறகு என்னையே பாடினேன்
கூடலசங்கமதேவனே!”

33. “சம்சாரமென்பது காற்றில் உள்ள விளக்கு
செல்வமென்பது சந்தைக்கூட்டம்
இதை நம்பிக் கெடவேண்டாம் – செல்வமென்பது
மறக்காமல் கூடலசங்கமதேவனுக்குச் செய்யும் பூஜை”

34. “பூலோகமென்பது இறைவனின் நாணயச்சாலை
இங்கு செல்லுபடியெனில் அங்கும் செல்லுபடியாவார்
இங்கு செல்லுபடியில்லையெனில் அங்கும் இல்லை
கூடலசங்கமதேவனே.”

                                          [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.