சேக்கிழார் பாடல் நயம் – 79 (என்ன)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
என்ன அவ்வுரை கேட்டுஇயற் பகையார்
‘’யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில்
அன்ன தெம்பிரான் அடியவர் உடைமை;
ஐயம் இல்லைநீர் அருள்செயும்’’ என்ன
‘’மன்னு காதலுன் மனைவியை வேண்டி
வந்தது இங்கு”என அங்கணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து
தூய தொண்டனார் தொழுதுரை செய்வார்!
இயற்பகை நாயனாரை நோக்கி நீறு பூசிய அந்தணராயும், தூர்த்த வேடம் உடையவராயும் ஊரார்முன் ஒரு சிவனடியாராகச் சிவபெருமானே இயற்பகையார் வாழும் தெருவில் நடந்து வந்தார். அவருடைய திருமேனியில் இருவகை வேடமும் பொலிந்தது! அவ்வாறு வந்த சிவனடியார் இயற்பகையார் வாழும் இல்லத்து வாயிலில் புகுந்து நின்றார். இயற்பகையாரோ, ‘’எந்தையாகிய சிவபிரான் அடியார் எழுந்தருளினார்!‘’ என்றெண்ணி எப்போதும் நின்ற இன்பம் மிக்க ஆதரவுடைய உள்ளத்தில் பேரன்பு ததும்ப அவர்முன் சென்று வணங்கினார்; சிறப்பு மிக்க பாத பூசைகள் செய்து, ‘’எம் முன்னோர்கள் செய்த பெருந்தவத்தின் விளைவாகவோ, என் முன் எழுந்தருளினீர்?’’ என்று போற்றினார்.
அங்கே வஞ்சனையுடன் வந்த மறையவர் ‘’கொன்றைமலர் அணிந்த சடையை யுடைய சிவபிரானடியார்கள் தம் விருப்பத்தைக் கூறி வேண்டினால், குற்றமாயினும் அதனை மிகச்சிறந்த குணமே என்றெண்ணி அதனைச் சிறிதும் மறுக்காமல் வழங்குவீர் என்று ஊரார் கூறிய உண்மையைக் கேள்வியுற்றேன்! இன்று, இங்கு உங்களிடம் ஒரு பொருளை வேண்டி வந்துள்ளேன்! அதற்க்கு நீர் இசைந்தால் நான் என் கருத்தைக் கூறுவேன்!’’ என்றார்.
அதனைக் கேட்ட இயற்பகையார் ‘’நீங்கள் விரும்பிய பொருள் யாதாயினும், அப்பொருள் என்னிடம் இருக்குமாயின், அப்பொருள் எம்பிரான் அடியவர்க்கே உரியதாகும்; இதில் சிறிதும் ஐயமில்லை; நீங்கள் விரும்பும் பொருள் இன்னது என்று தெளிவாகக் கேட்டருள்க‘’ என்று பணிவுடன் கூறினார். அடியாராகிய அந்தணர், ‘’மிகுந்த காதலுடன் இருக்கும் உன் மனைவியையே வேண்டிப் பெற்றுக் கொள்ள இங்கே வந்தேன்’’ என்றார். அவர்தம் இவ்வேண்டுகோளை தம் எதிரே அஞ்சாது நின்று கேட்டபோதிலும், அதற்காக உள்ளம் கலங்காமல், முன்பு இருந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி கொண்டு, தூய்மைமிக்க தொண்டராகிய இயற்பகை நாயனார், மீண்டும் அந்த அந்தணரைப் பணிவுடன் வணங்கினார்.
இப்பாடலில் ‘’யாதும்’’ என்ற சொல் எப்பொருளாக இருந்தாலும் என்ற பொருளை உடையது. மேலும் ‘’ஒன்றும்‘’ என்ற சொல்லுக்கு, ஒப்பற்றது, உயர்ந்தது, என்றும் நான் பிரியக்கூடாத என் தனித்த உடமை என்றெல்லாம் கருதத் தக்கது என்பது பொருள். ‘’எம்பிரான் அடியவர் உடைமை’’ என்ற தொடருக்கு, ‘’எளியேன் முன் வந்து நின்ற தேவரீராகிய எம் தலைவரின் உடைமையே!‘’ என்பது கருத்து.
இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவதும், அவர்கள் எழுந்தருளும் இல்லங்களைக் கோயிலாகவே கருதி வழிபடுதலும் அடியார் செயல் என்பதைச் சிவஞான போதம்,
‘’மாலற நேயம் மலிந்தவர் வேடமும்,
ஆலயம் தானும் அரண் எனது தொழுமே!’’
என்று கூறுகிறது. மாணிக்க வாசகர் இறைவனை ‘’ உடையாய் ‘’ என்று கூறியதும் இதைக் கருதியே! மேலும்,
‘’உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் ..
குற்றாலத் தினிதுறையும் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி வேண்டுவனே‘’
என்று பாடுகிறார், அப்பரடிகளோ
‘’கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும்
தனிமு டிக்கவித் தாளும் அரசினும்
இனியன் தன்னடைந் தார்க்குஇடை மருதனே ‘’
என்ற பாட்டில் ‘பாவை நல்லாரினும் இனியன்’ என்கிறார்; சுந்தரர்,
‘’மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்!’’ என்று தம் உறவுகளின் மேலுள்ள புற்றுக்களை நீக்கி, இறைவன் திருவடியையே பற்றினார். திருவாதவூரடிகள் புராணம்,
“உருப்பொ லாதவர் இழிகுலத் தவர்நல்
லொழுக்க மில்லவர் என்று நம்மளவில்
விருப்பி லாதவர் எனினும் மெய்ந்நீறும்
மிக்க சாதன வேடமும் கண்டால்
தரிப்பி லாதுசென்று எதிருற வணங்கித்
தக்க போனகம் அளித்தவர்க்கு எளிதா
விருப்பர் தாமவ ரடியவர்க் கடியார்
என்பர் யான்எனது எனும்செருக் கறுப்பார்.”
என்று பாடுகிறது. ஆகவே இயற்பகை நாயனாரின் மனம் இறைவனையும் சிவனடியாரையுமே எல்லாவற்றிலும் மேலாகக் கருதியது. மேலும் இப்பாடலில்,
‘’அங்கணர் எதிரே சொன்ன போதிலும்’’ என்ற தொடரால், அவர் மனைவியின் மேல் எனக்கு ஆசை, என்று புறத்தே போய்ச் சொன்னாலும் உடனே அது கேட்டுமிகவும் வெகுள்வார் உள்ள உலகில்,’’ தமக்கு எதிரே நின்று அந்தணர் சொன்ன போதிலும்’’ என்ற பொருள் புரிகிறது. அதன் பின் ‘’முன்னையின் மகிழ்ந்து, தொழுதுரை செய்வார்! ‘’ என்ற தொடரால் கேட்பதற்கு முன் இருந்ததை விட அதிகமாக உள்ளத்தில் மகிழ்ந்தார் இயற்பகையார் என்பதும், மீண்டும் அந்த அந்தணரை முன்பைவிட அதிகமாகத் தொழுதார் என்பதும் புலனாகின்றது.
கம்பராமாயணத்தில் வசிட்டர் கூறியதைக் கேட்ட தசரதன்,
‘’மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அப்பெருவில்
இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்’’
என்ற பாடலை நினைவூட்டுகிறது. இயற்பகையாரின் உண்மையான உளப்பாங்கினை உரியவாறு எடுத்துக் காட்டும் சேக்கிழாரின் திறம் போற்றுதற்கு உரியது.
