செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(322)

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

– திருக்குறள் – 310 (வெகுளாமை)

புதுக் கவிதையில்...

அளவோடு சினமிருந்தால்
ஆபத்தில்லை,
அளவைக் கடந்தவன்
அழிந்து
இறந்தவனுக்கு ஒப்பாவான்..
சினத்தைத் துறந்தவன்
சிறந்த ஞானமுடைய
துறவி போன்ற
பெருமை பெறுகிறான்…!

குறும்பாவில்...

அளவுகடந்த கோபமுடையவன் இருந்தும்
இறந்தவன் போலாகிறான், சினமடக்கி வாழ்பவன்
சிறப்பு பெறுகிறான் துறவியாக…!

மரபுக் கவிதையில்...

இருக்கும் சினம தளவுகடந்தால்
இறந்தவன் போல்தான் மனிதனுமே,
பெருகும் கோப மடக்காமல்
பெயரில் வாழ்கிறான் பிணமாக,
பெருமை மிக்கது சினமடக்கல்
பெற்றுத் தந்திடும் உயர்நிலையே,
தருமே சிறப்பு துறவியாக
தீதாம் சினமதைத் துறந்தவர்க்கே…!

லிமரைக்கூ..

உயிரோடு இருந்தாலுமவன் பிணமே
கோபமளவைக் கடந்துவிட்டால், துறவியாய் உயர்த்தும்
கோபத்தைத் துறந்துவிட்ட குணமே…!

கிராமிய பாணியில்...

கோவப்படாத கோவப்படாத
அளவுக்குமிஞ்சி கோவப்படாத,
அழிவத்தருற கோவம் வேண்டாமே..
அளவுக்கு மிஞ்சி கோவப்படுறவன்
ஆளு உயிரோட இருந்தாலும்
செத்தவன் போலத்தான்..
கோவத்த அடக்கக் கத்துக்கிட்டு
கொணத்தோட வாழுறவன்,
கொணத்துல ஒசந்த
சாமியாரு போலத்தான்..
அதால
கோவப்படாத கோவப்படாத
அளவுக்குமிஞ்சி கோவப்படாத,
அழிவத்தருற கோவம் வேண்டாமே…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *