Tag: கே.எஸ்.சுதாகர்

  • குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ நாவல் – ஒரு பார்வை

    குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ நாவல் – ஒரு பார்வை

    கே.எஸ்.சுதாகர்

    (ஆனந்த விகடனில் பல சிறுகதைகளை எழுதியவரும், ஆனந்த விகடன் பவள விழாச் சிறப்பிதழில் பரிசுபெற்ற ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற குறுநாவலைத் தந்தவருமான குரு அரவிந்தனின் சமீபத்திய நாவல் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’. இவரின் ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ நாவலுக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர், ஓவியங்கள் வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.)

    குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல் வாசித்தேன். மணிமேகலைப் பிரசுரமாக இந்த ஆண்டு (2019) வெளிவந்த இந்த நாவலை வாசிக்கும்தோறும் பாரதியின்

    `நல்லதோர் வீணை செய்தே – அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’

    என்ற கவிதை வரிகள் தான் நினைவிற்கு வந்து போயின.

    மெல்ல மெல்ல வாசகரை உள் இழுக்கும் உத்தி, ஆரம்ப அத்தியாயங்களிலேயே தெரிகின்றது.

    தேவகி ஒரு நடன ஆசிரியர். அவரிடம் நடனம் பயிலும் மகள் கமலினியும், மாலதியும் இனிய தோழிகள். இனிய தோழிகள் என்றாலும் இருவேறு துருவங்கள். அவர்கள் இருவரினது  கொள்கைகள் வேறு வேறானவை. கமலினி ஆங்கில மோகமும் அமெரிக்கா ஆசையும் கொண்டவள். ஆனால் மாலதி
    அப்படியல்ல. தமிழும் பரத நாட்டியமும் மூச்சாக வாழ்பவள். கமலினியின் குறும்புக்காரத் தம்பி கண்ணன். அவனது பார்வை சற்றே மாலதியின் மேல் விழுகின்றது. எங்கே மாலதிக்கும் கண்ணனுக்கும் இடையே காதல் உருவாகிவிடுமோ என மனம் பதைபதைக்கும் வண்ணம் நாவல் நகர்கின்றது.

    மாலதிக்கு அம்மா இல்லை. அப்பா சுந்தரம் மாஸ்டர். மச்சான் ராஜன். இவர்களுடன் விறுவிறுப்பாகச் செல்லும் நாவல் சொல்லும் செய்தி என்ன? ஒரு ஆண்மகன் தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் புரிதல், ஆங்கில வெளிநாட்டு மோகம், ஒருவர் தான் பயின்ற கலைகளை அழியாது காத்தல், விதவைத் திருமணம். நடன இசைப்பிரியர்களுக்கு இந்த நாவல் ஒரு வரப்பிரசாதம்.

    இசையால் வசமாகும் இதயங்களுக்கு, இந்த நாவலில் கொட்டிக் கிடக்கும் பரத நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் `போனஸ்’ தகவல்கள். கமலினி மணம் முடித்து அமெரிக்கா போய்விடுகின்றாள்.
    அதன் பின்னர் மாலதி தன் அத்தை பையன் ராஜனை வேண்டா வெறுப்புடன் மணம் செய்து கொள்கின்றாள். ராஜன் குடிகாரன், கேடு கெட்டவன். இவர்களிடையேயான உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், கண்ணன் மாலதியைத் திருமணம் செய்து கொள்கின்றானா என்பதே நாவல்.

    கமலினி அமெரிக்கா சென்ற பின்னர், அமெரிக்கா பற்றிச் சொல்லிச் செல்லும் ஆசிரியர், கதையின் ஆரம்பத்தில் கதை நடைபெறும் களம் பற்றி விபரிக்கவில்லை. கதை எங்கு நடைபெறுகின்றது என்பது ஆரம்பத்தில் தெளிவில்லாமல் இருந்தது. இசை நடனம் ஆடல் பாடல் என ஆரம்பித்த
    நாவல், திசை மாறி பயணம் சென்று, மீண்டும் தொடக்க நிலைக்கு வருகின்றது. மற்றும் தேவகியின் கணவர் கனகேஸ்வரன் என்ற பாத்திரமும் நாவலுக்குக் கனதியில்லாமல் சும்மா வந்து போகின்றது.

    நாவலின் அட்டைப் படம் பற்றிய ஒரு சுவையான தகவல். கனடாவில் பிறந்து வளர்ந்த, புதிய தலைமுறையைச் சேர்ந் ஐஸ்வர்யா சந்துரு நாவலின் அட்டைப் படமாக உயிர்பெறுகின்றார். இவர் நாட்டியத்திலும் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

    எமது நாட்டில் எத்தனையோ மாணவர்கள் பரதம், சங்கீதம், வீணை, மிருதங்கம் போன்றவற்றைக் கற்று வருகின்றார்கள். இவர்களில் எத்தனை வீதமானவர்கள் தொடர்ந்தும் அந்தக் கலைகளைத் தக்கவைத்துக் கொண்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்? வெறுமனே இவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் போதுமானதா? புலம்பெயர்ந்த நாட்டில் பெற்றோர்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போலும். இருபது வருடங்களுக்கு முன்னர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இந்த நாவல், காலத்தின் தேவையறிந்து நூல் உருவாக வருவது வரவேற்கத்தக்கது.

    எளிமையான நடை. மனத்தில் வந்துபோகும் பாத்திரங்கள். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு குடும்பப் படம் பார்த்தது போன்ற மன நிறைவு நாவலைப் படித்தபோது ஏற்பட்டது.

    Share
  • குட்டி இளவரசன் (வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்)

    கே.எஸ்.சுதாகர்

     

    கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

     

    அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.

     

    எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலட் ஆகிவிடுகின்றார்.

     

    கதைசொல்லி ஆறு வயதாக இருக்கும்போது, இரையை சப்பிப் சாப்பிடாமல் முழுதாக விழுங்கும் பாம்பு (boa constrictor) ஒன்றின் படத்தைக் காண்கின்றான். அதன்பின்னர் அப்பிடியானதொரு படத்தை அவனும் வரைகின்றான். அது ஒரு மலைப்பாம்பு, யானையை விழுங்கிவிட்ட ஓவியம். அதை வயது வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அவர்கள் அதனைத் தொப்பி என்கின்றார்கள். பின்னர் அவன் தான் கீறிய படத்திற்குள் ஒரு யானையை வரைந்தபோது அவர்கள் அவனது படத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். கூடவே அவனுக்கு ஒரு ஆலோசனையும் சொல்கின்றார்கள். அந்தப் படம் கீறும் வேலையை ஒருபுறம் போட்டுவிட்டு  வர         லாறு, பூமிசாஸ்திரம், கணிதம், இலக்கணம் போன்றவற்றைப் படிக்கும்படி சொல்கின்றார்கள். அதன்பின்னர் அவன் தனது ஓவியனாக வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகின்றான். வயது வந்தவர்கள் பொதுவாக, எதையும் தங்கள்பாட்டில் புரிந்து கொள்வதில்லை என்றும்  சலிப்பின்றி எப்போதும் சிறுவர்களுக்கு தமது கருத்துகளைத் திணித்து விடுகின்றார்கள் என்றும் சொல்கின்றார் கதைசொல்லி.

     

    எனது மகன் காட்டிய ஓவியம் அதுதான். யானையை விழுங்கிவிட்ட மலைப்பாம்பின் ஓவியம்.

     

    Antoine de_Saint Exupery பிரான்ஸ் தேசத்தில் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது இராணுவ உளவு விமானியாகப் பணியாற்றியவர். 1940களில் ஜெர்மனியர்கள் பிரான்சிற்குள் புகுந்தபோது அமெரிக்காவிற்கு தப்பியோடினார். 1943களில் வடக்கு ஆபிரிக்காவில் மீண்டும் விமானப்படையில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடல் மேலாக உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெர்மனிய விமானப்படையினரால் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்தார். ‘Southern Mail’, ‘Night Flight’, ‘Wind, Sand and Stars’ என்பவை இவர் எழுதிய ஏனைய புத்தகங்கள்.

     

    ‘The Little Prince’ அமெரிக்காவில் இருந்தபோது இவர் எழுதிய நாவல் ஆகும். சிறிய கோள் ஒன்றிலே தனித்து வாழ்ந்த சிறுவனைப் பற்றிய கதை இது. ஒருதடவை ஆபிரிக்காவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவரது விமானம் சகாராப் பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகியது. இவரும் சக விமானியும் அதில் தப்பிப் பிழைத்தார்கள். அந்தச் சம்பவமே ‘குட்டி இளவரசன்’ எழுதுவதற்கு காரணமாகியது.

     

    நாவலின் பெயரும் – அந்தப் புத்தகத்திற்கான ஓவியங்களும் – குட்டி இளவரசன் ஒரு சிறுவர் இலக்கியமே என அடித்துச் சொல்கின்றன. அப்படியாயின் எப்படி இது வயது வந்தோர்க்கான இலக்கியம் ஆகும்? புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, ‘குட்டி இளவரசன்’ வயது வந்தோர்க்கான சிறுவர் இலக்கியம் என்பது தெரிந்து விடுகின்றது. எல்லா வயது முதிர்ந்தோரும் ஒருகாலத்தில் சிறுவர்களாகத்தானே இருந்திருக்கின்றோம். அப்படியென்றால் எப்படி ஒரு சிலரால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது?

     

    பிரெஞ்சு மொழியில் (அந்துவான் து செந்த் எக்சுபெரி) வெளிவந்த இந்தப்புத்தகம் இதுவரை 180 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிகமாக அச்சேறிய பைபிள், மார்க்கிரட் மிக்சல் எழுதிய Gone With The Wind இற்கு அடுத்தபடியாக உள்ள நூல் குட்டி இளவரசன். தமிழில் வெ.ஸ்ரீராம் + மதனகல்யாணி மற்றும் யூமா வாசுகி என்போரால் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்.

     

    ஒருதடவை மனித சஞ்சாரமற்ற சகாராப் பாலைவனத்தில், கதைசொல்லி தன்னந்தனியாகப் பறந்து கொண்டிருக்கும்போது விமானம் பழுதடைந்து விபத்திற்குள்ளாகின்றது. ஒருவாரத்திற்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருந்தது. இரவு மணலில் படுத்துறங்குகின்றார். அதிகாலை சூரிய உதயத்தின்போது ஒரு குரல்,

    ”உங்களால் முடியுமானால் ஒரு ஆட்டின் படம் கீறித் தரமுடியுமா?”

     

    யாருமற்ற வனாந்தரத்தில் குட்டி இளவரசன் அறிமுகமாகின்றான். கதை தொடங்குகின்றது. குட்டி இளவரசனுக்கு விமானம் புதுமையாக இருக்கின்றது. தனது இருப்பிடத்தில் எல்லாம் சின்னதாக இருப்பதாகச் சொல்கின்றான். ஒரு பூ, மூன்று எரிமலைகள் மாத்திரமே அவனது உலகில் இருக்கின்றன. அவனே அந்த உலகத்தைச் சுத்திகரிக்கின்றான். அவனே பூவிற்கு நீர் ஊற்றுகின்றான். ஒவ்வொருநாளும் குட்டி இளவரசனின் உலகம் பற்றி புதிது புதிதாக அறிகின்றார் கதைசொல்லி. ஒருநாளில் 44 தடவைகள் சூரிய அஸ்தமனம் நிகழ்வதாகவும், தனது உலகில் புலிகள் இல்லை எனவும் கூறுகின்றான். தனது உலகிற்கு ரோசாச்செடி வந்தது எப்படி என்பது பற்றியும், தான் அந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றான்.

     

    ஒவ்வொரு உலகத்திற்கு பயணம் செல்லும்போதும், குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. அரசன், தற்பெருமை கொண்ட மனிதன், மது அருந்துபவன், வியாபாரி, விளக்கேற்றுபவன், பூகோளசாஸ்திரி என ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திப்பவர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவனது சிந்தனைகள் வளர்ந்தோரைக் காட்டிலும் வேறுபட்டவை. அவர்களது பதிலில் திருப்தியுறாத குட்டி இளவரசன், தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒவ்வோர் உலகாகச் செல்கின்றான். எந்த உலகை நான் தரிசிப்பது நல்லது என பூகோளசாஸ்திரியிடம் ஆலோசனை கேட்கின்றான்.

     

    அதன்பின்னர் பூகோளசாஸ்திரியின் ஆலோசனைப்படி பூமிக்கு வருகின்றான். அவன் வந்து சேர்ந்த இடம் ஆபிரிக்கா. பாம்பு, மலர், நரியென்று ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றான். கண்களால் பார்க்க முடியாததை இதயத்தால் பார்க்க முடியும் என்கின்றது நரி. ஓர் அரசனின் விரலைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவன் தான் என்கின்றது பாம்பு. அதன் பின்னர் விமான ஓட்டியான கதைசொல்லியைச் சந்திக்கின்றான். நட்புக் கொள்கின்றான். பாலைவனத்தின் தனிமையை குட்டி இளவரசனுடன் போக்கிக் கொள்கின்றான் கதைசொல்லி. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல, அவை சிரிக்கின்றன, அதை உணருங்கள் என்று கற்றுத் தந்துவிட்டு பிரிந்து விடுகின்றான் குட்டி இளவரசன்.

     

    எப்பொழுதாவது ஆபிரிக்கா பாலைவனத்திற்கு பிரயாணம் செய்ய நேரிட்டால், அவனை நீங்கள் சந்திக்கக்கூடும் என்ற ஏக்கத்துடன் நாவல் முடிவடைகின்றது.

     

    நாவலை வாசிக்க வாசிக்க விரிந்து செல்கின்றது உலகம். குட்டி இளவரசன் ஒவ்வொரு உலகத்திலும் சந்திக்கும் அவர்கள், நாம் தினமும் காணும் மனிதர்களா? பூடகமாக அப்படித்தான் சொல்கின்றார்.

     

    இந்த நாவலையும், அந்துவான் து செந்த் எக்சுபெரியையும் கெளரவிக்கும் முகமாக பிரெஞ் தேசம் தமது ஐம்பது பிராங் நோட்டில் – குட்டி இளவரசன், மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.

     

    இந்த நாவலை மையமாக வைத்துக் காலத்துக்குக் காலம் பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் வந்துள்ளன.

     

    சிறுவர் இலக்கியங்கள் பொதுவாக வளர்ந்தவர்களால் தான் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் வாசிப்பதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்கும் என இவை எழுதப்படுகின்றன. அதன் மூலம் சிறுவர்கள் இவற்றைக் கிரகித்துக் கொண்டு தமது மனவளத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்களே அருகிவிட்டன.  வளர்ந்தோருக்கான ‘சிறுவர் இலக்கியம்’ பற்றிச் சொல்லத் தேவையில்லை.

     

    Share
  • கனவு காணும் உலகம்!

    -கே.எஸ்.சுதாகர்

    பன்நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்துவரும் எமது மக்கள்—மூதாதையர்கள்—ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும் தவறிவிட்டார்கள். யாழ் நூலகம் எரிந்து போனதும், போர் காரணமாகப் பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.

    pic1அவுஸ்திரேலியா கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்குப் பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் கொடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008ஆம் ஆண்டு, ஆதிகுடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

    இந்தக் கட்டுரை மெல்பேர்ணில், டண்டினோங் pic2மலைச்சாரலில் இருக்கும் ஆதிவாசிகள் பற்றிய சிற்பங்கள் ஓவியங்களைப் பற்றிச் சொல்கின்றது. ஆனால் இந்தப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆதிவாசி அல்லர். வில்லியம் பில் றிக்கெற்ஸ் (William Bill Ricketts) எனப்படும் வெள்ளையினத்தவர் ஆவார்.

    வில்லியம் பில் றிக்கெற்ஸ்…

    மெல்பேர்ணில் சனத்தொகை மிகவும் குறைவாக இருந்த காலப்பகுதியில், தங்கவேட்டை காரணமாகப் பலர் புலம்பெயர்ந்து வரத் தொடங்கியிருந்தார்கள்.

    pic3இவரது தாத்தா வில்லியம் றிக்கெற்ஸ் 1857ஆம் ஆண்டளவில் தனது மனைவி மேரி ஆன் சகிதம் பிரித்தானியாவில் இருந்து மூன்று நான்கு மாதக் கடல் பிரயாணத்தின் பின்னர் மெல்பேர்ண் வந்து சேர்ந்தார். இவர்களுக்கு 12 பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அல்பிரட் என்பவர் சுசான் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசிப் பிள்ளையாக பில் 1898ஆம் ஆண்டு பிறந்தார். இவர்கள் றிச்மண்ட்  என்னும் பகுதியில் குடியிருந்தார்கள்.

    பில் தனது ஆரம்பக்கல்வியில் பெரிதும் நாட்டம் கொள்ளவில்லை. பாடசாலையை விடுவது என்று தீர்மானித்ததும் தமது உறவினரின் நகை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயிலுனராகச் சேர்ந்தார்.  அப்போது அவருக்கு வயது பதினான்கு. இசையில் ஆர்வம் கொண்ட இவர் வயலின் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

    வில்லியம் பில் றிக்கெற்ஸ், 1935ஆம் ஆண்டளவில்pic4 மவுன்ற் டண்டினோங்  பகுதியில் நாலரை ஏக்கர் நிலப்பரப்பை வாங்கினார். அது முதற்கொண்டு அங்கேயே வசிக்கலானார். இயற்கை எழில் கொஞ்சும் சரிவுப்பாங்கான அந்தப்பகுதியின் பாதை மருங்கிலும் குகைகளிலும் களிமண்ணினால் ஆன உருவங்களைச் செய்து வைத்தார்.

    ஆதிவாசிகளின் நம்பிக்கை வாழ்க்கை முறைகளினால் ஈர்க்கப்பட்ட மிகச்சில வெள்ளை இனத்தவர்களில் இவரும் ஒருவர். விலங்கு தாவரம் மனிதன் இயற்கை – இந்தப்பின்னணியில் இவரது படைப்புகளின் தொனி அமைந்திருக்கும். இவரது கற்பனையில் உருவாகும் படைப்புகளிற்குப் பூர்வீகக்குடிகளின் சின்னங்களைக் குறியீடாகப் பாவித்துள்ளார். இவரது காப்பகத்தின் முக்கியமான படைப்புகள் ஆதிவாசிகளின் உருவங்களாகும். அவை ஆதிவாசிகளினதும், அவர்களுக்கும் பூமிக்குமிடையேயான பரிசுத்தமான தொடர்புகள் பற்றியனவுமாகும்.

    காடு இவருடைய விருப்பத்திற்குரியது. அதுபோல பச்சை இவருக்குப் பிடித்த நிறம். இவருடைய பெரும்பாலான ஆடைகள் பச்சை நிறத்தையே கொண்டிருந்தன. அதேபோல இவரது படுக்கை ஜன்னல் விரிப்புகள் எல்லாமே பச்சை நிறத்தைக்  கொண்டிருந்தன.

    உயிரினங்கள்மீது இவர் வைத்திருக்கும் மதிப்பு அளப்பரியது.

    இவர் வசித்த பகுதிகளில் நுளம்பு, எலித் தொல்லைகள் அதிகம். இவர் நுளம்புகளை விரட்டுவதற்கு ஒருபோதும் நுளம்புத்திரி பாவித்தது கிடையாது. அவற்றைக் கொல்லக்கூடாது என்பதில் கவனமெடுப்பார். எலிகளைப் பிடித்து வேறு காட்டுப் பகுதிகளில் கொண்டுபோய் விட்டுவிடுவார்.

    இவர் 60 வருடங்களுக்கும் மேலாகத் தனது படைப்புருவாக்கங்களைச் செய்து வந்தபோதிலும், தன்னை ஒரு ஓவியனாகவோ சிற்பியாகவோ முத்திரை குத்துவதை விரும்பவில்லை. இவர் தனது படைப்புகள் தன்னூடாக வருகின்றனவேயொழிய தன்னுடயவை அல்ல என்கின்றார்.

    இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    இவரது படைப்புகளில் ‘Dromana’—Seawinds Garden, Arthurs Seat, Victoria— மற்றும் “GunBrute’—William Ricketts Sanctuary, Mount Dandenong, Victoria குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

    1949 – 1960 இடைப்பட்ட காலப்பகுதியில் அடிக்கடி மத்திய அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வாழும் Pitjantijatjara, Arrente ஆதி இனமக்களுடன் வாழ்ந்தார். அவர்களின் பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகளினால் பெரிதும் கவரப்பட்டார். தன்னை அந்த இனமக்களுக்காகத் தத்துக் கொடுத்தார். இவரது பெரும்பாலான படைப்புகள் மத்திய அவுஸ்திரேலியா பகுதியில் உள்ள Alice Springs பகுதியில் உள்ள pitchi Ritchi பூங்காவில் உள்ளன.

    1960களில் அவர் அங்கு இல்லாத காலப்பகுதியில் அவரது படைப்புகள் அழிக்கப்பட்டும் களவாளப்பட்டும் போயின. இதனால் அவற்றை அரசு பொறுப்பேற்று, பாதுகாப்புக் கருதி மேலும் நிலப்பகுதியை வழங்கியது. தற்போது மொத்தம் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காப்பகம் இருக்கின்றது, வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துபோகும் இடமாக உள்ளது. காட்டிற்குள் அமைந்திருந்த சரணாலயத்தில், விக்டோரியா அரசினால் இவருக்கெனக் கட்டிக் கொடுக்கப்பட ஒரு அறை கொண்ட வீட்டில் 1962 முதல் பில் வசிக்கலானார். இவரின் அந்த அறை அவரின் படுக்கை, குசினி, ஸ்ரூடியோ, விருந்தினர் அறை எனப் பல வடிவங்கள் எடுத்தன.

    1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதுச்சேரி (இந்தியா) சென்று, ஸ்ரீ அரவிந்தர் ஆச்சிரமத்தில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்.

    இவரை நான் பார்ப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கு நான் வருவதற்கு முன்பதாக 1993இல் அவர் இறந்து போனார். இறக்கும் வரை மவுன்ற் டண்டினோங் சரணாலயத்தில் ஆதிவாசிகள் பற்றிய செயற்திட்டங்களை முன்னெடுத்தார். இவரை ஒரு தடவை, மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணி அவரது சரணாலயத்தில் சந்தித்ததாக என்னிடம் சொல்லியிருந்தார்.

    ***

    References:

    Whitefella Dreaming, The authorized biography of WILLIAM RICKETTS, by Peter Brady, 1994.

     

     

     

    Share
  • அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

    கே.எஸ்.சுதாகர்

    அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

     போட்டிகள் பற்றிய பொது விதிகள்

    1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
    2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
    3. குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
    4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
    5. போட்டிக்கு அனுப்பப்படும் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
    6. குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.
    7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

     

    இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:

     முதலாம் பரிசு – 400 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

     இரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

     மூன்றாம் பரிசு – 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

    சிறப்புப் பரிசு – தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.

    முடிவுத்திகதி: 30.09.2016

    இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    போட்டி முடிவுகள் 2016 கார்த்திகை மாதம்  அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

    அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:-  real24news@hotmail.com   

    மேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com இணையத்தினைப் பார்க்கவும்.

    Share
  • ‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்

    – கே.எஸ்.சுதாகர்.

    இந்த ‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதியை வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் இது பல அரிய விடயங்களைப் பொக்கிஷமாகத் தந்து நிற்கின்றது. பாடாத பொருளில்லை எனும்படியாக பொருட்பரப்பு விரிந்து காணப்படுகின்றது. இதன் ஆசிரியர் ஜெயராமசர்மா – பாரதியார், கவிமணி, பட்டுக்கோட்டையார், கவியரசர், மகாகவி போன்றவர்களின் கவிதைகளில் திளைத்து, அவர்களை அடியொட்டி எழுதிச் செல்கின்றார். இவர் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப்பட்டதாரி. கல்வியியற்துறை, சமூகவியற்துறை, கற்பித்தல் நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேறியவர். அத்துடன் ஆசிரியர், அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என்ற பல பதவிகளை வகித்தவர்.

    உணர்வுகள்bஇவரின் புத்தகத்திற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், கவிப்பேரரசு வைரமுத்து என்பவர்கள் வாழ்த்துரையும் – டாக்டர்.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்), முனைவர் இரா.மோகன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), முனைவர் அரங்க.பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முனைவர் சரசுவதி இராமநாதன் என்பவர்கள் அணிந்துரையும் வழங்கிக் கௌரவித்திருக்கின்றார்கள். இதிலிருந்தே இத்தொகுதியின் கனதியைப் புரிந்து கொள்ளலாம்.

    இங்குள்ள கவிதைகள் ஏற்கனவே பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்களில் வெளிவந்தவை.

    இவரது தொகுதிக்கு அணிசேர்த்திருக்கும் கவிதைகள் – பக்தி, மொழி, அன்பு, போதனை, சாதனை, இயற்கை, நினைவுகள், கொண்டாட்டம், கற்பனை, காதல் என்ற வகைப்பாடுகளில் அமைந்துள்ளன. இவர் கவிதைகளைத் தொகுக்கும் யுக்தியே ஒரு கவிதைதான்.

    கவிதைகள் எல்லோருக்கும் கைவரப் பெறாதது. நான்கு வரிகள் எழுதியவுடன் சிலருக்கு நாக்குத் தொங்கும். இவருக்குக் கவிதைகள் உள்ளத்திலிருந்து ஆற்றொழுக்காக ஒரு ஊற்று போல வருகின்றன. இங்கு வருகின்ற பல பாடல்களில் சந்தம் இருக்கின்றது, சிந்தும் இருக்கின்றது. நாட்டுப்பாடல்களும் இதனூடாக வெளிப்பட்டு நிற்கின்றன. பெரும்பாலான கவிதைகள் மரபுக்கவிதைகளாக உள்ளன.

    உணர்வுகளில் தலையாயது பக்தி. இதுவே இப்பொழுது எல்லாருக்கும் முதற்கண் தேவை. அந்தப் பக்தியுடன் ஆரம்பிக்கின்றது இந்த ‘உணர்வுகள்’ என்ற கவிதைத்தொகுதி. பக்தியில் முதல் வருவது ‘மணி ஓசை’. ‘கைவிஷேசமாக’ ஒலிக்கும் இந்தக்கவிதை என் மனதில் எழுப்பும் ஓசை தற்போதைய அரசியல். பக்தியோடு பரிணமிக்கின்றது இந்த அரசியல்.

    ‘மணி ஓசை கேட்டவுடன்
    மனமெல்லாம் மகிழ்கின்றது
    துணிவெல்லாம் பிறக்கிறது
    தூயநிலை வருகிறது ’

    தொடர்ந்து இந்தக்கவிதையில்,

    ‘சிவனாரின் கோவில்மணி
    சீர்திருத்த முயல்கிறது
    அவமான செயல் எல்லாம்
    அதுபோக்க முயல்கிறது

    மாதாவின் கோவில்மணி
    மனங்குளிர வைக்கிறது
    ஆதாரம் தான் எனவே
    அது ஒலித்து நிற்கிறது

    விகாரையின் கோவில்மணி
    விண்ணென்று ஒலிக்கிறது
    வீண்வார்த்தை பேசுவதை
    விட்டுவிடு என்கிறது ’

    ஆழ்ந்து நோக்குகையில் இந்த ‘வீண்வார்த்தை பேசுவதை விட்டுவிடு’ எனும் சத்தியவார்த்தைகள் மனதில் படிந்துவிடுகின்றது. மத இன ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதை இதுவெனலாம்.

    இந்த பக்தி என்ற பொருளடக்கத்தில் மொத்தம் பதினொரு கவிதைகள் உள்ளன. இதில் என்னைக் கவர்ந்த அடுத்த கவிதை ‘இரக்கமுடன் அருள் புரிவாய்!’. இந்தக்கவிதை இந்தியாவின் தற்காலத்து கல்விநிலை பற்றிச் சொல்கின்றது. கல்விக்குள் காசை வைத்து கற்பவரை முடக்கின்றாரே, கல்வியைக் காசாக்கி கடைத்தெருவில் விற்கின்றாரே என மனம் புழுங்கி,
    ‘பள்ளித் தலமனைத்தும் கோவில் எனச் சொல்லி
    துள்ளி வரும் தமிழாலே சொன்னானே பாரதியும்
    கிள்ளி எறிந்து நிற்கும் கீழான குணமுடையோர்
    பள்ளிகளை இப்போது பணக்கிடங்காய் மாற்றிவிட்டார்’

    என்று தொடர்ந்து செல்கின்றார் ஜெயராமசர்மா.

    ‘பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்’ என்ற கவிதை எனக்கு நாகூர் E.M. ஹனிபா அவர்கள் பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை நினைவுபடுத்துகின்றது.

    மொழி பற்றி வரும் கவிதைகளில் – ‘வந்து நிற்கும் வினையாகும்!’ – என்ற கவிதையில்

    ‘அருமைமிகு அம்மாவை
    மம்மி என அழைத்து
    பெருமைமிகு அப்பாவை
    டாடி என விளித்து
    கருவினிலே உருவான
    கன்னித்தமிழ் மறந்து
    உருமாறி உரைப்பதிலே
    உயர்வென்ன இருக்கிறது ’

    என்கின்றார் கவிஞர். மொழி பற்றிய பிரச்சினை புலம்பெயர்ந்தநாடுகளில் இன்று பூதாகரமாக உருவெடுத்துள்ளதை இவரது கவிதைகளில் காணலாம்.

    அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ். இந்தக் கவிதை நூலிலும் தாழ் திறந்து கட்டற்றுப் பாய்கின்றது அன்பு. அன்பு என்றவுடன் எம்மனதில் அம்மாவே முன்வந்து நிற்பார். அம்மா பற்றிய கவிதைகள் இதில் ஏராளம். அந்த அன்பு மழையில் நாமும் திளைக்கின்றோம்.

    மழலைச் செல்வம் பற்றி ‘நிம்மதி நெஞ்சில் நிற்கும்’ என்ற கவிதை சொல்கின்றது. இந்தக் கவிதையில் ஒரு பந்தி

    ‘பிரசவத்தில் தாய் அழுவாள்
    பிறந்தவுடன் நீ அழுவாய்
    பெண்ணாகப் பிறந்துவிட்டால்
    பெற்றவரும் அழுதிடுவார்
    அழுதழுது பிள்ளை பெற்று
    ஆருக்கு என்ன பயன்
    அப்படி நினைப்பதனை
    அடியோடு மறவுங்கள்’

    என்கின்றார். இன்னமும் கீழைத்தேய நாடுகள் சிலவற்றில் பெண்குழந்தைகளின் நிலை கேள்விக்குரியதுதான். அதற்குப் பரிகாரமும் சொல்கின்றார்.

    ‘ஆண்பிள்ளை பெண்பிள்ளை
    அத்தனையும் எம்பிள்ளை
    ஆதலால் பிள்ளைதனில்
    அன்னியத்தைக் காட்டாதீர்’

    ‘அரிசியில் நானெழுத
    அதைப்பார்த்து நீரசித்து
    சிரிசிரி எனச்சிரித்து
    சிவப்பாச்சே முகமப்போ’

    என்று அம்மாவைப் போற்றுகின்றார். சிவப்பானது அவர் அம்மா முகம் மாத்திரமல்ல, இவரின் முகமும்தான் என்பதை இவரை நேரில் கண்டவர்கள் அறிவார்கள். ‘சிரித்தன செம்மலர்கள்’ என்பதற்கொப்ப இவர் முகம் இருக்கும்.

    வீர அபிமன்யு என்ற படத்தில் கண்ணதாசனின் ஒரு பாடல் ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்’ என்று ‘தேன்… தேன்…’ என முடிவையும். அதே பாணியில் இங்கும் ஒரு பாடல் வருகின்றது. ‘தயவான நீயே தாய்’ எல்லா வரிகளுமே ‘தாய்… தாய்…’ என்று முடிகின்றது.

    உணர்வுகள் என்றொரு கவிதையும் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றது. ஒரு குடும்பத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, பிள்ளையொன்று சொல்லிச் செல்லும் கவிதை. இதில் ஒரு சிடுமூஞ்சி அப்பா வருகின்றார். ஆள்தான் சிடுமூஞ்சியேதவிர குடும்பத்தை அழகுறக் கட்டிக் காக்கின்றார். மனைவி இறந்தபோது, அன்பிழந்து அவதிப்படும் காட்சியை

    ‘அடக்கியெமை ஆண்ட அப்பா
    அடங்கியே இருந்திட்டார்
    அம்மாவின் அணைப்பிழந்து
    அவரிப்போ அழுகின்றார்

    உணர்வுகள் எப்போதும்
    உள்ளுக்குள் இருப்பதில்லை
    உயிருள்ள மனிதர்க்கு
    உணர்வுகளே உயர்வாகும்’

    என்கின்றார். சிலவேளைகளில் ‘அன்பு’ என்ற தலைப்பின்கீழ் வரும் கவிதைகள் இவரது சுயசரிதையோ என்று சொல்லவும் தோன்றுகின்றது.

    ‘குருவிக்கூடு’ எள்ளல் நடையில் துள்ளி வரும் கவிதை. நல்லதொரு சிந்தனையை விதைத்துச் செல்கின்றது. மரமொன்றில் கூட்டில் வாழும் குருவிக்குஞ்சுகளுக்கு, இந்த வேடிக்கை மனிதர்களைப் பார்த்து, தாயிடத்தில் சில கேள்விகள் கேட்கின்றன. எங்கள் கூட்டையும் மனிதர்கள் உடைத்துவிடுவார்களா என்ற கேள்வி முடிவதற்குள் வினை வருகின்றது. எங்கிருந்தோ வந்த கல் குருவிக்குஞ்சையும் பதம் பார்த்து கூட்டையும் வீழ்த்துகின்றது.

    ‘விலங்கு பறவை யாவுமே
    விலத்தி நின்ற போதிலும்
    நலங்குறைந்த மனத்துடன்
    நாட்டில் மனிதர் வாழ்வதேன்!’

    ‘அன்பு மனத்துடன் வாழ்ந்திடுவோம்’ என்ற கவிதை நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை’ என்ற மெட்டிலும் – ‘மனமெல்லாம் மாற வேண்டும்!’, ‘மனநிலை தெளிய வேண்டும்’ என்ற இரு கவிதைகளும் பாரதியாரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலையும் – ‘அடங்கினால் நன்மை அன்றோ!’ வித்துவான் வேந்தனாரின் ‘காலைத் தூக்கி கண்ணில் வைத்து கட்டிக் கொஞ்சும் அம்மா!’ பாடலையும் – ‘மாமருந்துமானார்!’ அப்பர் பெருமானின் ‘முன்னம் அவருடைய நாமம் கேட்டாள்’ தேவாரத்தையும் நினைவூட்டி போதனைக் கவிதைகளாகின்றன.

    உணர்வுகள்சாதனையாளர்கள் பட்டியலில் – ராமகிருஷ்ணர், அன்னை தெரசா, மு.வ, தேம்பாவணி தந்த வீரமாமுனிவர் (பெஸ்கி பாதிரியார்), கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, காந்திமகான், நேரு, தனிநாயகம் அடிகளார், பாரதியார், கம்பன், உ.வே.சா, நாவலர், பாலுமகேந்திரா, கண்ணதாசன், வைரமுத்து, வாலி, சிவாஜிகணேசன், பி.சிசீலா, பாலமுரளி கிருஷ்ணா, இளையராஜா, நெல்சன்மண்டேலா, டொமினிக் ஜீவா, கிருபானந்தவாரியார் என்பவர்களைப் பற்றி கவிதைமழை பொழிகின்றது இப்புத்தகம்.

    ‘எதிர்த்திடுவோம் கலப்படத்தை’, ‘அடியோடு புகை ஒழிப்போம்’, ‘குடியொழிக்க வாரீர்!’ என்பவை தலைப்பிலேயே பொருளை வைத்து, கலப்படத்தை, புகைத்தலை, குடிபோதையைச் சாடி நிற்கின்றன. கவிதை ஒவ்வொன்றினுள்ளும் ஒரு கதை இழையோடிக் கிடக்கின்றது.

    புத்தகத்தின் அட்டை ‘நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ?’ என்று கண்ணதாசனின் பாணியில் கேள்வி எழுப்புகின்றது. அந்தக் கேள்விக்குள் குடும்பம் ஒன்று பறவையாய் வானில் பறக்கின்றது. ஒவ்வொரு கவிதையின் பின்புறமும் அழகழகான நிழற்படங்கள் வருகின்றன. தேர்வு மிகப்பொருத்தமாக உள்ளது.

    மொத்தத்தில் பண்பாட்டை, கலாச்சாரத்தை, ஒழுக்கத்தை, சமுதாய அக்கறையைப் பேணி நிற்கும் கவிதை உணர்வுகளால் கட்டுண்டு நிற்கின்றேன். புத்தகம் முழுவதுமுள்ள உணர்வுகளைச் சொல்லிவிட எனக்கும் ஆசைதான். உங்கள் சுவைப்புக்காக மிகுதியை விட்டுவைக்கின்றேன்.

    Share
  • ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    “நீங்கள்தான் கட்லட் செய்து வருவதாக எல்லாருக்கும் சொல்லி இருக்கின்றேன். வரும்போது 50 கட்லட்டுகளுடன் வாருங்கள்.”

    பிறந்தநாள் விருந்து தொடங்கியது.

    பிளேற் ஒன்றிற்குள் பலகாரங்களைப் போட்டுக் கொடுத்தார்கள். கட்லட்டைக் கடித்த போது கசந்தது.

    நண்பியைக் கூப்பிட்டேன். நாங்கள் கொண்டு வந்த கட்லட் எங்கே?

    “அது” எங்களுக்கு. நான் வேலை செய்யும் இட்த்திற்கு கொண்டு போகப் போகின்றேன். ‘இது’ நான் செய்தது. உங்களுக்கு!

    வேலை செய்யும் இட்த்தில் அவருக்குப் புகழ். இங்கே எனக்கு?

    Share
  • நிதி சேகரிப்பு

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    சறிற்றிக்காக முப்பது டொலருக்கு சொக்கிளேற்றுகளை விற்க வேண்டும்.

    தாயாருடன் பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான்.

    நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

    மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி நாணயக்குற்றிகளை அவர்களிடம் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

    மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.

    Share
  • பெண்ணியம்!

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    logoகனகமணி ஆசிரியர். பெண்ணிய கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.

    கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக மலையகத்திலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். கனகமணி இல்லாத சமயங்களில் அவர் அவளுடன் சில்மிஷம் புரிந்தார்.

    “அம்மாவிடம் சொல்வேன்” என்பாள். வேலை பறிபோய்விடும் என்பதால் சொல்லுவதில்லை.

    எல்லை மீறியபோது ஒருநாள் போட்டுடைத்தாள்.

    “இஞ்சை வரும் போது என்னிடம் கேட்டுவிட்டா வந்தாய்? நீயும் அவரும் பட்டது பாடு” என்றாள் கனகமணி.

    Share
  • லொட்டோ

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    lotto-logo-ballsஎமது தொழிற்சாலை முகப்பில் ராஜாவின் பிரேதம் சூட்டுக் காயங்களுடன் கிடந்தது.

    ராஜா நன்றாக வேலை செய்வான். வேலை இடத்தில் பல பேரைச் சேர்த்து ‘பவர் போல்’ போடுவான். ஆரம்பத்தில் இலக்கங்களைச் சரி பார்த்த நண்பர்கள், காலப் போக்கில் அவனில் நம்பிக்கை வைத்து அவனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்கள்.

    மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள் வேலை மாறி தொலைதூரம் போனான். அங்கே மாளிகை கட்டினான். இன்று கொலையுண்டு கிடக்கின்றான்.

    Share
  • தந்திரம்

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    அனேகமாக கொட்டாஞ்சேனை பஸ் ஸ்ராண்டில், ஏதாவது நொண்டிச் சாட்டுகள் சொல்லிக் காசு கேட்டபடி நிற்பான் அவன்.

    காசு கிடைத்ததும் குடிப்பதற்காகச் சென்று விடுவான்.

    அன்றும் அப்படித்தான்.

    மருதானைக்குப் போக பஸ்சுக்குக் காசு வேண்டும் என்றான்.

    தரலாம், இதிலே நின்று கொள் என்றேன். என் கைகளைப் பார்த்தபடி நின்றான்.

    மருதானை பஸ் வந்தது. பஸ்சினுள் ஏறிக் கொள், நடத்துனரிடம் காசைக் குடுக்கின்கறேன் என்றேன்.

    மெதுவாக நழுவி விலகினான்.

     

     

    Share
  • அவரைப் போல …

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

     

    பொங்கல் அன்று தவம் கோயிலுக்குப் போனபோது, மனைவியின் கைப்பையை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அது அவரது தோள்ப்பட்டையில் இருந்து ஊஞ்சலாட்டம் ஆடியது.

    அந்தக் காட்சியை பல இளம் பெண்கள் பார்த்து விட்டார்கள்.

    “எங்களுக்கும் அவரைப் போல மாப்பிள்ளை வேணும்” என்று தமது பெற்றோரிடம் அன்புக் கட்டளை இட்டார்கள் அவர்கள்.

     

     

     

     

     

    Share
  • லம்போகினி கார்

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    wptv 3_luxury_cars_hit__tires_stolen_from _carமைத்துனருக்குக் கலியாணம். ரொறன்ரோ விமான நிலையத்திற்கு என்னை அழைக்க வந்திருந்தார். தனது லம்போகினி வாகனத்தைப் புகழ்ந்தபடியே வந்தார். வீட்டை அண்மித்ததும் ஹோட்டலிற்கு முன்னால் காரை நிற்பாட்டினார்.

    உணவை வாங்கி, காரில் ஏறியபோது ஸ்ராட் செய்ய மறுத்தது.

    “லம்போகினியும் பழுதாகுமா?”

    முழுசிப் பார்த்தான்.

    இரவு பதினொன்று. காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உரிமையாளரான மைத்துனரின் நண்பருடன் வீடு வந்தோம்.

    மறுநாள் காரை எடுக்கச் சென்றபோது, நான்குபக்கமும் செங்கல் அடுக்கப்பட்டு ரயர்கள் கழற்றப்பட்டிருந்தன.

     

     

     

    படம் உதவி: http://www.wptv.com/news/region-c-palm-beach-county/palm-beach/thieves-stole-tires-and-a-car-from-palm-beach-driveways

    Share
  • நான் ஓர் அகதி

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    World Refugee Day 2013நான் சமீபத்து அகதி. நண்பன் 16 வருட அதிதி, பொறியியலாளன், (கொழுத்த) மனைவி சீதனம்.

    ஒருநாள் சந்தித்துக் கொண்டோம்.

    வாடகை வீட்டிலா இருக்கிறாய்? காசு தருகின்றேன். வீட்டை வாங்கு. கொஞ்ச வட்டிதான்.

    வீடு வாங்கினேன். காலம் மாறியது. வட்டி ஏறியது. வேலை நின்றது.

    மகனுக்கு வருத்தம், காசைத் தா மனமறியப் பொய் சொன்னான்.

    அற விலைக்கு வீட்டை விற்று தன் பணத்தை எடுத்தான்.

    மீண்டும் வாடகை வீட்டில் நான்.

     

     

     

    படம் உதவி: http://rabble.ca/multimedia/2013/06/world-refugee-day-2013

     

     

     

    Share
  • இவ்வளவுதான் உலகம்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    ரெலிவிஷனின் காலம் முடிந்து, ஐ-பாட் கொம்பியூட்டருடன் நேரம் கரைகின்றது. உள்ளங்கையில் உலகம் தெரிகின்றது.
    கழிவு அகற்றும் கவுன்சில் வாகனம் வருகின்றது. அதை வைப்பதற்கும் எடுப்பதற்கும் மாத்திரம் முன்புறம் போவதுண்டு. எதிர் வீட்டிலிருந்து ஒருவன் புன்னகைக்கின்றான். இதுவரையும் அங்கே ஒரு பெண்ணைத்தான் கண்டிருக்கின்றேன்.
    கடந்த டிசம்பரில் அந்த வீடு விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. இப்போது அடுத்த கிறிஸ்மஸ்.

    அவனே என்னை நோக்கி வருகின்றான்.

    அவன்!

    என்னுடன் வேலை செய்யும் சக நண்பன்.

    Share
  • அகதியும் அதிதியும்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.

    பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.

    வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனுக்கும் சண்டை.

    “நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்? எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.

    Share