Tag: நாங்குநேரி வசஶ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 69

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 69

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

    69. தூது

    குறள் 681:

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

    நேசமான கொணமும், நல்ல குடிப்பொறப்பும், ராசா விரும்புதது கணக்கா நல்ல பழக்கவழக்கமும் இருக்கது தான் தூதருக்கு உண்டான தகுதிங்க. 

    குறள் 682:

    அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
    கின்றி யமையாத மூன்று

    தூது போவுதவுங்களுக்கு தேவப்படுத மூணு முக்கியமான பண்பு  நேசம், புத்திசாலித்தனம், பேச்சுத்தெறமை.

    குறள் 683:

    நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
    வென்றி வினையுரைப்பான் பண்பு

    வேத்து நாட்டுக்குப் போயி தன் நாட்டு ராசா செயிக்கது கணக்கா சேதி சொல்லுதவன் நூல்களப்படிச்சு அறிஞ்ச அறிவாளிய விட தெறமசாலிய இருக்கணும். 

    குறள் 684:

    அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
    செறிவுடையான் செல்க வினைக்கு

    நல்ல புத்தி, பாக்கவங்க விரும்புத தோற்றம், நல்ல படிப்பு இந்த மூணு பொருத்தமும் இருக்கவன் தான் தூது போவணும்.

    குறள் 685:

    தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது

    கோவத்த உண்டாக்காம சந்தோசம் கொடுக்குத மாதிரி இருக்க சேதிகளாப் பாத்து ஒண்ணுபோலத் தொகுத்து வெறுப்பு ஏத்துதத ஒதுக்கிப்போட்டு உபயோகமா சொல்லுததே நல்ல தூதருக்கு அழகு.

    குறள் 686:

    கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
    தக்க தறிவதாந் தூது

    படிச்சவனாவும் எரிச்சுப்போடுதமாரி பாக்க பகையாளிக்கு பயந்துகிடாம, அவன் மனசுல பதியுதமாரி சொல்லவேண்டியதச் சொல்லி தெரிஞ்சுக்கிடவேண்டியத தெரிஞ்சுக்கிட்டு வருதவன் தான் ஒசந்த தூதன். 

    குறள் 687:

    கடனறிந்து காலங் கருதி இடனறிந்
    தெண்ணி உரைப்பான் தலை

    தான் செய்ய வேண்டிய கடம என்னன்னு தெரிஞ்ச பொறவு தகுந்த காலத்தையும் எடத்தையும் பாத்து வச்சி சொல்ல வேண்டியதச் சொல்லுதவன் தான் சிறந்த தூதன். 

    குறள் 688:

    தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு

    துணிச்சல். தொணை, ஒழுக்கம் இந்த மூணும் தூதுவர்க்கு தேவையானவைகள் னு சொல்லுதாங்க. 

    குறள் 689:

    விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
    வாய்சோரா வன்க ணவன்

    ஒரு ராசா சொல்லிவிட்ட சேதிய இன்னொரு ராசா கிட்ட சொல்லுதப்போ தெரியாம கூட தப்பான வார்த்தைகளச் சேத்து சொல்லாம இருக்கவனால தான் தூது போவ ஏலும். 

    குறள் 690:

    இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
    குறுதி பயப்பதாம் தூது

    தூது போன எடத்துல ஏதும் ஆபத்து வந்து தான் செத்தா கூட பரவாயில்ல தன் ராசாக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கவன் தான் தூதன்.

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66

    -நாங்குநேரி வாசஶ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.வினைத் தூய்மை

    குறள் 651:

    துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டாளிங்களால செல்வம் கெடைக்கும். சேந்து செய்யுத நல்ல காரியங்களால எல்லா நன்மையும் கெடைக்கும். 

    குறள் 652:

    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை

    புகழையும், அறத்தையும் தராத கெட்ட செயல்கள எந்த நெலமயிலயும்செய்யாம விட்டுப் போடணும். 

    குறள் 653:

    ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
    ஆஅது மென்னு மவர்

    ஒசத்தியான வாழ்க்க வாழ ஆசப்படுதவங்க தான் செய்யுத காரியத்தால புகழுக்கு பாதகம் வராம பாத்துக்கிடணும்.

    குறள் 654:

    இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்

    தடுமாறுத கொணம் இல்லாதவங்க சங்கடத்துல மாட்டிக்கிட்டாலும் தாழ்த்தியான செயல செய்ய மாட்டாங்க. 

    குறள் 655:

    எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று

    இப்டி செஞ்சுட்டோமேனு நோகுத அளவு செயலச் செய்யக் கூடாது. ஒருக்க செஞ்சிட்டா அத மறுபடி செய்யாம இருக்கது நல்லது. 

    குறள் 656:

    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை

    பெத்த ஆத்தா பசிச்சிருக்கதப் பாத்தாலும் அதுக்காவ பழிபாவத்த செய்யக் கூடாது. 

    குறள் 657:

    பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
    கழிநல் குரவே தலை

    பழி பாவத்தச் செஞ்சு வக்கணைய வாழுததக் காட்டிலும் நல்லதச் செஞ்சிப்போட்டு ஏழையா வாழுதது மேல். 

    குறள் 658:

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்

    ஆவாது னு ஒதுக்கி வச்ச செயல ஒருத்தன் செஞ்சுமுடிச்சாலும் அதால அவனுக்கு சங்கடந்தான் வெளையும்.  

    குறள் 659:

    அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
    பிற்பயக்கும் நற்பா லவை

    மத்தவன அழுவ வச்சி சேத்த சொத்து பூராவும் அழுதுகிட்டே உட்டுப்போயிடும். நல்ல மொறையில சேத்தது கைவிட்டுப் போச்சுதுன்னாலும் திரும்ப வந்து சேந்துக்கிடும்.

    குறள் 660:

    சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
    கலத்துணீர் பெய்திரீஇ யற்று

    தப்பான மொறையில பொருளச் சேத்து காப்பாத்த நெனையுதது பச்ச மண்ணால செஞ்ச பாத்திரத்துல தண்ணி மோந்து வச்சது கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.சொல்வன்மை

    குறள் 641:

    நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத் துள்ளதூஉம் அன்று

    காரியத்த சாதிக்குத மாரி பேசுததும் ஒரு சொத்து தான். அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 642:

    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

    ஒருத்தனுக்கு நல்லதும் கெட்டதும் அவன் பேசுத பேச்சுனால வாரதால சொல்லுத வார்த்தையில கொறையில்லாமப் பாத்துக்கிடணும். 

    குறள் 643:

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    கேக்குதவங்கள வசப்படுத்தி, கேக்காதவங்களும் கேக்கணும்னு விரும்புத அளவுக்கு பேசுததே சொல்வன்மை.  

    குறள் 644:

    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்

    என்ன பேசுதோம்னு உணந்துக்கிட்டு பேசணும். அந்த சொல்வன்மையப் போல அறமும் பொருளும் வேற இல்ல.

    குறள் 645:

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

    தான் சொல்லுதத செயிக்க வேற சொல்லு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு தான் அத சொல்லணும். 

    குறள் 646:

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்

    மத்தவங்களுக்குபிடிச்சா மாரி பேசுததும், அவுக பேசுதப்போ கவனிச்சி புரிஞ்சிக்கிடுததும் தான் அறிவாளிங்களோட செயல். 

    குறள் 647:

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது

    தான் நெனைக்குதத மத்தவங்க ஏத்துக்கிடதாப்போல சொணக்கமில்லாம சொல்லி, துணிச்சக்காரனாவும் இருக்கவன எதித்து யாராலயும் செயிக்க முடியாது.

    குறள் 648:

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்

    வகையா இனிக்கப் பேசுதவர் ஏவுத வேலய ஒலகத்தார் உடனடியா கேட்டு நடப்பாங்க. 

    குறள் 649:

    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்

    தப்பில்லாம கொஞ்சமா பேசி விளங்க வைக்கத்தெரியாதவங்க புரிய வைக்கதுக்காவ நெறையா பேசிக்கிட்டேயிருப்பாக.  

    குறள் 650:

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரிந்துரையா தார்

    தான் படிச்சத மத்தவுக விளங்கிக்கிடுத அளவுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாதவங்க கொத்துக் கொத்தா பூத்திருந்தாலும் வாசனை இல்லாத பூ கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share