வினோதக் கலவை!
பாகம்பிரியாள்
 நீ சொன்ன வேலையெல்லாம் முடித்து,
இடுப்பொடிய, மருதாணிக் கோலத்தை   
உன் கை, கால் விரல்களுக்கு போட்டு நான்
உறங்கப் போகும் போது நடுநிசி!
தூங்கலாமென்றாலோ, நீ பிரள்கையில்,
என் வயிறு, முதுகு, மணிக் கட்டெல்லாம்,
மருதாணியின் ஜில்லிப்பை உணர்ந்து,
மௌனமாய் விழித்துக் கொண்டிருக்கும்.

கண்களில் தங்கியிருக்கும் தூக்கத்தின்
மிச்சத்தை, நீ தந்த தேனீர் விரட்டும்.
மேனியில் மருதாணியின் தீற்றலை
வருடிக் கொண்டே வரும் உன் பார்வையோடு,   
வாளிப்பான  கரங்களும் மாலையாய் மாறிவிடும்.   
சிவந்த கைககளோடு, சிவந்த கன்னமும் போட்டிப்போட,
மீண்டும் ஒரு காதல்  அத்தியாயம் மலரும்.

அவசரமாய் அலுவலகம் செல்கையில்,
இரண்டு வாரம் கழித்து மருதாணி இலை வேண்டும்
என்ற உன் விண்ணப்பம் தோளில் தொற்றிக் கொண்ட
அந்த அழகான கணத்திலிருந்து,
குற்றேவல், இடுப்பு வலி,
குறுகுறுப்பு, ஏக்கம்,
நழுவும் தூக்கம்,
தழுவும்  கைககள்-என்கிற
வினோதக் கலவைக்காய் ,
மனம் இன்றிலிருந்தே காத்திருக்கத் தொடங்கிவிட்டது!

படத்திற்கு நன்றி
http://fashion65.blogspot.in/2011/02/mehndi-in-hands.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வினோதக் கலவை!

  1. பாவையவள் தளிர்க்கரங்களின்
    பவளநிறத்தில் இத்தனை
    மருதாணி மர்மங்களா..
    பலே…!
           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *