மீ.விசுவநாதன்

vallamai111-300x15011111

 

மலையில், இலையில், மணிக்கிளிப் பொந்தில்,
அலைகடல் மீதில், அழகுச் சிலையென
அத்தனை மீதுமே ஆதவன் பட்டாலும்
சுத்தமே என்றும் சுடர். (121) 30.04.2015

குற்றாலம் என்றால் குளிரருவி எண்ணந்தான்
முற்றாக உள்ளிருக்கும் ! மோனத்தில் முற்றாய்க்
கலந்தால் , “கருணையே” கண்ணொளியாய் நன்கு
மலர்ந்து சிரிக்கும் மலர். (122) 01.05.2015

ஒவ்வொரு நாளுமே ஓரோர் அனுபவம்
கவ்விப் பிடித்துக் கலக்குவதில் ஜிவ்வென்றே
உள்ளுள்ள தேன்கூட்டில் ஓர்துளி சிந்துவதால்
அள்ளிக் களிக்கு(ம்) அகம். (123) 02.05.2015

குழந்தையின் கண்களில் கோகுலக் கண்ணன்
கழலினைக் காண்கிறேன் ! காதல் பழகி
பகையை மறக்கிறேன் ! பாப்பா முகத்து
நகையே புதுமை நகை. (124) 03.05.2015

பேச்சில், சிரிப்பில், பிரிய நடிப்பிலே,
கூச்சமே இல்லாக் குலவலில் சீச்சீ
இவர்போல் கபடதாரி எங்கடா சொல்லு ?
எவர்க்குள்ளும் கொஞ்ச(ம்) இவர். (125) 04.05.2015

போதையில் வீழ்ந்து புரண்டு கிடக்கிறான்
பாதையில் ! எப்படியோ பாரிலே “மேதைகளும்,
ஞானியரும், நண்பருடன் நானும்” புகழ்போதை
மானிடத் தோற்றத்து மாசு. (126) 05.05.2015

இருக்கின்ற நாள்வரை எல்லோர்க்கும் நன்மை
பெருக்கிடும் வார்த்தையே பேசி வருவோம் ;
செருக்கின்றி பண்பும் சிறப்புமாய்ச் செல்ல
பெருமாள் கருணை பெரிது (127) 06.05.2015

மலரும் தினத்தில் மனதின் சிறுமை
உலரும் படியாய் ஒளியோன் அருள்க !
பலரும் இணைந்து பலமாய் இருந்தால்
புலரும் உலகே புதுசு. (128) 07.05.2015

தேர்வில் மதிப்பெண் திகட்டிடப் பெற்றாலும்
ஊரிலே கல்லூரி ஒன்றிலும் சேர
முடியாதாம் ! சாதிகள் முட்டி முனகும்
பிடிவாதப் போக்கே பிழைப்பு. (129) 08.05.2015

சிறகை விரித்தேன் சிறுநொடிப் போதில்
திறந்த வெளியில் திரிந்து பறந்தேன் !
அடடா ! அடடா ! அடைமழை , வெய்யில்
இடையிலே தானே இதம். (130) 09.05.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *