நெற்றிக் கண்
கவிநயா
விட்டேனா பார் என்று
எகிறுகிறது மனசு.
பொறு, பொறு,
இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு
என்கிறது அறிவு.
அடக்கி மடக்கி முடக்கி வைத்தவை யெல்லாம்
அடிவயிற்றில் சென்று அமர்ந்து கொண்டு
அனலாக எரித்துத் தகிக்கிறது.
விழிகளினின்றும் வழிகின்ற உவர் புனல்,
வெந்நீர் ஊற்றாய் முகிழ்த்து,
பேரருவியாய்க் கொதித்துப் பெருகுகிறது.
நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து
நெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத் தயாரான வார்த்தைகள்,
நாவின் நுனியில் நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றன.
தெறிக்கும் கனலின் வெம்மை விதையில்
ஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி யிருக்கிறது,
நெற்றிக் கண்ணொன்று.
படத்துக்கு நன்றி: http://theholyarunachala.wordpress.com/category/rajarishi-sathguru-sri-rajalinga-swamigal-merges-with-lord-sri-arunachaleshwara-2/