மாதவன் இளங்கோ

கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு:

ஒவ்வொருநாளும் நம் சக இந்தியச் சகோதரனால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம், நம்முடைய செயல்களால் மற்ற சகோதரர்கள்/ சகோதரிகள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பட்டியலிட எத்தனித்தபோது, அந்தப் பட்டியல் ஒரு கவிதையாக உருவெடுத்தது. இதைக் கவிதை என்றுகூட நான் அழைக்க விரும்பவில்லை. நம் எல்லோருடைய ‘உள்ளக்குமுறல்களின் ஒருங்கிணைந்த பதிவு’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

என் இனிய சக இந்தியனே,

பிறப்பு சான்றிதழுக்குப்

பின்தலை சொறிந்துகொண்டே

கையூட்டு கேட்டாய்

கொடுத்துத் தொலைத்தேன்!

இறப்பு சான்றிதழுக்கு

இரண்டு மடங்கு

அதிகமாய்க் கேட்டாய்

அதையும் அளந்தேன் அழுதுகொண்டே!

உள்ளாட்சித் தேர்தலின்போது

உடையும் பணமும் தந்தாய்

கடமைக்குக் காசெதற்கென்று

திடமாய் நான் மறுத்தேன்!

ஆட்சிக்கு அமர்த்தினோம்

ஆட்டிப் படைத்தாய்;

அடக்குமுறை செய்தாய்

அடங்கி ஒடுங்கியே போனேன்!

பட்டம் பெற்றேன், தகுதித்தேர்வில்

வெற்றியும்  பெற்றேன் – வேறென்ன?

எனக்குப் பாதி, ஆளும் மந்திரிக்கு மீதியென்றாய்

தனியார் பணியில் தஞ்சம் புகுந்தேன்!

இரத்தம் சுண்டி நானீன்ற பணத்தை

இரக்கமின்றி நீ தின்றாய்

இருந்தும் செலுத்தினேன்

முறையாய் வரியை!

ஏழ்மையைக் காட்டியுன்

இனியமகள் கல்விபயில

பள்ளிக்கு வருவதை நிறுத்தினாய்

வருந்தியே கவனித்தேன்!

ஆனாலுன் தலைவனவன் திரைப்படத்தின்

ஆரம்பநாள் அமர்க்களங்களுக்கு

இறைத்தாய் நீ இரண்டு மூன்றாயிரம்

புரியாமல் தவித்தேன்!

நான் செல்லும் பாதையிலே

சிறுநீர் கழித்தாய்; குப்பைகள் போட்டாய்;

சிந்தினாய்; துப்பினாய்

அத்தனையும் சகித்தேன்!

சாலைவிதிகளைக் கடைபிடித்து

சிவப்பிற்கு முன்வரும் மஞ்சளுக்கு நின்றேன்

அநாகரிகமாய்  வசைபாடினாய்

அமைதி காத்தேன்!

நான் கற்ற நன்னெறிகள்

நானூற்றில் நான்கைந்துகூட

பின்பற்ற முடியாமற் செய்தாய்

பொறுமை காத்தேன்!

படித்தவனாய்  இருந்தும்,

பாதகா, கிராதகா, நீ

பெண்சிசுக்கொலை செய்தாய்

பனியாய் உறைந்தேன்!

‘மதம்’ பிடித்துப் போனதால்

உன்னை அவன் அடித்தான்

அவனை நீ கொன்றாய்!

இருவருக்கும் அழுதேன், துடித்தேன்!

பேருந்து ஓட்டுகையில்

கைபேசியில் காதல் பேசி – கவனம்சிதறிப்

பலபல கொலைகள் செய்தாய்

பொறுப்பின்மையைக் கண்டு மனம் கொந்தளித்தேன்!!

பிள்ளைகள் – எம் பிஞ்சுகள் செல்லும்

பள்ளி வாகனங்களையே

எமவாகனங்களாய் மாற்றிக்காட்டினாய்

எதிர்த்துக் குரல் கொடுத்தேன்!

வறுமை வாழ்வில் வளம்சேர்க்க

நகரம் வந்தவென் அன்புத் தங்கையை

வன்புணர்ந்தாய்; சிதைத்தாய்; பின் வீசினாய்

மரித்தே போனாள் மலர் போன்றாள்!

போராட்டம் எனும் பெயரில்

பொதுச் சொத்துக்களைச் சிதைத்தாய்

சிரித்தாய்ப் பின் குதித்தாய்

சிந்தித்தேன் பின் மௌனித்தேன்!

புதைச்சாக்கடை வாயிற்புழைகளுக்கு வழிகாண்போம்

மழலைகள் மரிக்கின்றன என்றேன்

விமானநிலையங்களை சீரமைக்கக் கோடிகளை வீசினாய்

முன்னுரிமைகளைக் கண்டுக் கொதிப்படைந்தேன்!

வீடு வாங்க வந்தேன்,

வெள்ளைப் பாதி, கறுப்புப் பாதி

வேண்டுமென்றாய்; தந்தால்தான் வீடென்றாய்

வேண்டாம் வீடென விட்டொழித்தேன்!

மக்களுக்கு வேலையில்லை, வாழ வழியில்லை,

அடிப்படை வசதிகளில்லை என்றேன்

விரைவிலே வல்லரசாவோமென்று வாயிலே வடைசுட்டாய்

பேசுவதே வீணென்று விட்டுவிட்டேன்!

இதை செய்வோம் அதை செய்வோம்

சாதிப்போம் பின் போதிப்போம் என்றேன்,

மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்

வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

ஐரோப்பியரைப் பாரேன்றேன்!

ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்

ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்

அமைதியாய் குமுறினேன்!

சினிமா பின்னால் ஒருகூட்டம்

கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்

அரசியல் பின்னால் தெருக்கூட்டம்

இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!

இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!

அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என

அனைத்தும் கண்ட அவன் எங்கே?

அன்பு, பண்பு, அறம், மறம் 

இவையெல்லாம்தான் எங்கே?

எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் 

எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும் 

நிலை ஏனோ?

வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,

தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,

“‘நெஞ்சு பொறுக்குதிலையே

இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’

அன்றே பகர்ந்தேன் புரியலையோ?

அறிவில்லையோ?

நெஞ்சில் உரமுமில்லையடா,

நேர்மை சிறிதுமில்லையடா,

வஞ்சனை சொல்வாரடா,

வாய்ச்சொல்லில் வீரரடா!

நீ புறப்படடா!

உலகெலாம் நம் புகழ் பரப்படா!

நிலையாய், நீர்நிலையாய்,

குளமாய் நீ இராதேடா!

துர்நாற்றம் வீசுமடா

ஓடும் ஓடையாய் மாறடா!

ஓடடா! ஓடடா! ஓடடா!!”

வந்தோம் ஓடி வெளிநாடு!

வாவென்றது வளநாடு!

கடுமையாய் உழைத்தோம் திறமோடு!

மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!

நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!

என்று மாறும் எம் திருநாடு?

வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!

எம்மைப்போல் ஏங்குபவர்

எத்தனை பேர்?

எத்தனையோ பேர்!

இருப்பது எங்கோ வென்றாலும்,

இதயத்தால் என்றுமே இந்தியர்கள்!

இதயத்திலும் என்றுமே இந்தியாதான்!

சுழியைக் கண்டோம்!

எண்ணத் தவறினோம்!

மேல்நாட்டவரோ,

சுழியோடு ஒன்றையும் சேர்த்து,

கணிப்பொறியாக்கினர்!

அதையே கற்றறிந்து – அவர்கள்

திருடிச் சென்றதை,

திரும்பப் பெறவே வந்தோம்!

களவாடப்பட்ட நம்

கோஹினூர் வைரங்கள்

அந்நியச் செலாவணி வழியாயும்,

அந்நிய முதலீடுகள் வழியாயும்,

திரும்பப் பெறவே வந்தோம்!

பெறவும் செய்தோம்!

ஆனால்…

நம் சக இந்தியர் 

அடித்துச்சென்ற கொள்ளைப்பணத்தை – 

அந்தக் கறுப்புப்பணத்தை

எப்படிப் பெறுவோம்?

எங்கே செல்வோம்?

மாற்றம் வருமா?

வரும்!

மாறுவோம்.. மாற்றுவோம்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.