மன்னிக்க வேண்டா மனம்
நாகினி
பிஞ்சு மலரைப் பிடுங்கிக் கனிவான
நெஞ்சு கசக்கியே நோவாக்கும்.. வஞ்சத்தை
மன்றாளும் வேந்தர் மறந்து பொறுத்தாலும்
மன்னிக்க வேண்டா மனம்!
***
மனதால் இணைந்த மணத்தை நசுக்கி
இனபேதம் சார்ந்தே இதயம் – தனத்திற்குச்
சன்னலென ஆகிவிட்ட சண்டாள ஈனரை
மன்னிக்க வேண்டா மனம்!
***
இளமை மெதுவாய் இறங்கி கடந்து
வளமை அகற்றும் வரம்தான் – களமென்று
கன்னமிட்டு வாழ்வோர் கயமை முகத்திரையை
மன்னிக்க வேண்டா மனம்!
***
பசியில் வதங்கும் பலரும் வளரும்
வசிப்புப் பெறவே வருந்தி – கசிந்துருகி
மன்றாடும் கோலம் மதிக்கு நகைப்பாதல்
மன்னிக்க வேண்டா மனம்!
***
படிப்பில் கவனமற்றுப் பார்வை சிதறி
தடித்த கயிற்றினால் தன்னை – முடித்தலென
உன்மத்தம் கைக்கொள் உறங்கிடும் மாணவரை
மன்னிக்க வேண்டா மனம்!
.. நாகினி