இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
தமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களின் எழுத்துதான். அதற்காக இந்த நூற்றாண்டில் உள்ள எழுத்தாளர்களை நான் குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எளிமை, இனிமை, புதுமை, நேர்த்தி, அழகான கதை அமைப்பு, சமுதாய சிக்கல்களை யாவரும் அறியும்படி எழுதும் கைவண்ணம் இவை அனைத்தையும் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இங்கே நான் சொல்ல வருவது.
உரைநடையில் கல்கியிலிருந்து ஆரம்பித்து சுஜாதா இன்னும் எத்தனையோ எழுத்தாளர் வரை தமிழை அழகாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவர்கள் கூட (முக்கியமாக அந்தக் கால பெண்மணிகள்) கல்கி, தேவன், எஸ்.வி.எஸ், குமுதினி, லக்ஷ்மியின் கதைகளை விறுவிறுப்பாகப் படித்தார்கள் என்பதை இப்போதுள்ள பெரியவர்களின் வாயிலிருந்தே அறிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நம் தலைமுறையினருக்கு சற்றளவேனும் அந்தக் கால எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நாம் அறிமுகப்படுத்துகிறோமா, அல்லது நமது வாராந்தர மாதாந்தரிகள் இச்சேவையைப் புரிகின்றனவா என்று கேள்வி எழுந்தால் பதில் ஏமாற்றம்தான் தரும்.
இத்தகைய நிலையில் கனடாவில் வாழும் பேராசிரியர், தமிழர் பசுபதி அவர்கள் இந்த அறிமுக வேலையை கண்ணும் கருத்துமாக, மெனக்கெட அந்தப் பழைய பத்திரிக்கைகளிலிருந்து அந்த எழுத்துக்களை அப்படியே படம் பிடித்து நமக்காக தன் வலைப்பகுதியில் தந்து வருகிறார். கல்கியிலிருந்து சின்ன அண்ணாமலை வரை, இந்த எழுத்தாளப் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அப்படியே அவர் எழுத்துக்கள் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்.
இந்த வருடம் நூறாண்டு காணும் எழுத்தாளர் தேவனின் எழுத்துக்களை கடந்த சில ஆண்டுகளாக அப்படியே படம்பிடித்து தம் வலைப்பகுதியில் பதித்து வருகிறார், தேவன் கதைகளில் மல்லாராவ் கதைகள் மிகவும் சுவையானது. இந்த வாரத்தில் மல்லாரிராவ் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை ஒன்றைப் பதிப்பித்திருக்கிறார். இக்கதையை அறிமுகப்படுத்துமுன் தேவன் அவர்களைப் பற்றிய ஒரு அரிய செய்தியும் கூடவே வருகிறது. இதோ அவர் எழுத்து மூலமாக
‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது! அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம்! ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும்! பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள்! ஒரு கதையைத் தான் படியுங்களேன்! ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்!
பேராசிரியர் பசுபதி கேட்டுக்கொண்டபடி நீங்களும் அந்த ராஜகிரி ரஸ்தா’வில் http://s-pasupathy.blogspot.in/2013/08/6.html ஒருமுறை பயணம் செய்து பாருங்களேன். பயணம் மிகச் சுவையாக இருக்கும் என்பதோடு அந்தத் தமிழ் எத்தனை ருசிகரமானது என்பதும் அறிந்துகொள்ளலாம்.
இவைகளைப் படிக்கும்போது நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த எழுத்தாளர்களின் சிந்தனைகள் இப்போதும் சிறந்தவையாக நமக்குப்படுகிறது இப்படி ஒரு பொறுப்பை சுகமான சுமையாக எடுத்துக்கொண்டு. நம்முடைய மூதாதைய எழுத்தாளர்களின் பெருமையை அறிமுகப்படுத்தும் பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.
கடைசிபாரா: வல்லமையில் ‘புதிய சுதந்திரப் பள்ளு’வில் ஒரு பின்னூட்டம்.
பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
மற்றவர் நலனதுக் கெடாது – யாதும்
அற்றவர் நிலை யிலாதுச் செய்
கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!