ஜன்னல் முகங்கள்
-விசாகை மனோகரன்
வீட்டில், தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல்
அதில் ரசித்துப் பார்த்த பல முகங்கள்
ஆண், பெண், கருப்பு, வெளுப்பு,
சிறுவயது, வயதிற்கு வந்தது, வயது போனது
இப்படி எத்தனையோ!!
எத்தனை முகங்கள் எத்தனை பாவங்கள்
அதில் மனதுள் பதிந்தன சிலமுகங்கள்
கற்பனைக்கு மேனி தந்து
மனதின் வேலி உடைத்து
இரவு தூக்கத்தை கெடுத்து
கனவுகளில் வந்தன சில முகங்கள்.
ஜன்னல் வழியே பார்த்து
மனக் கதவை உடைத்து
உள்ளே வந்து குடியேற
அனுமதி கேட்கும் சில முகங்கள்
அனுமதி இல்லாமலே வந்தமர்ந்த சில முகங்கள்.
குழாயடிச்சண்டை,
தெரு நாய்களின் கூட்டம்
நரிக் குறவர்களின் கூச்சல்,
பிச்சைக்காரர்களில் கூவல்
அனைத்துமே அந்த ஜன்னல் வழி பார்த்தவையே
ஆனால் இவை எதுவும் பாதிக்காத என் மனதை
அந்த சில முகங்கள் மட்டும் ஏன் பாதித்தன?
நேரிலே பலமுகங்களைப் பார்த்தாலும்
அந்த ஜன்னல் முகங்கள் மட்டும் ஏன் வேறுபடுகின்றன
அந்தப் பார்வையின் நோக்கில் மட்டும் ஏன் நெருடல்கள்
புரியவில்லை, புரிந்தால் சொல்லுங்களேன் !!