தித்திக்குதே திருக்குறள் – 6
கூறாமல் சந்நியாஸம் கொள்
திவாகர்.
ஒருமுறை இருமுறையல்ல அண்ணே
ஓராயிரம்முறை எடுத்துச்சொல்லியாச்சு
மனையாள் மனதால் இணையவேணுமென
மனசாட்சியாம்நான் மனதார சொல்லியாச்சு
மணநாளன்று மெட்டிக்காகக் குனிந்தவன்
மனையாள் கால்விரலைப்பிடிக்காது அவள்
காலைப்பிடித்தாய் இன்றுவரை நிமிரவில்லை
தலையணை மந்திரமென்று தந்தவளுக்குத்
தலையசைத்து மந்திரத்தில் மயங்கிவிட்டாய்
நாளெல்லாம் அவள்பேச்சு அவள்மூச்சு
அவள்போக்கில் வாழப் பழகினாயே
இருவரும் இணைந்து செல்லும்பாதைக்கு
இறைவன் வாழ்க்கையென பேர்கொடுத்தான்
இணைந்துசெல்ல இருவர் எதற்கென்றே
பிணைக்கைதியாகி அவள்பின் சென்றாய்.
மணப்பொருத்தம் பார்த்தவர்தாம் ஏன்மறந்தார்
மனமொத்த தாம்பத்யத்யமே தகுதியானதென
கணப்பொழுதேனும் உன்மனதைக் காயமாக்காமல்
கணவனெனத்தான் உன்மனைவியவள் மதித்தாளா
மனையாளுக்கு மறுபெயர் மனைச்செல்வமாம்
உனையாளும் மனையாளோ மறந்தாளிதனை
புதுமுகமாய் புக்ககத்தில் அடிவைத்தவள்தான்
புதிதுபுதிதாய் குறைகளைக் கொண்டுவந்தாளே
பழக்கமில்லா உறவுகளை அறவேவெறுக்க
பழையமுகங்கள் ஒவ்வொன்றாய் வெளியேற
ஊருணிநீரை வெறுமனேவீதியில் வீணாய்விட்டு
கார்மேகநீரை காற்றில்பிடிப்பாராம் அதுபோல
உன்வீட்டுச் செல்வங்கள் இவளெடுத்துவீணாக்கி
பொன்வாங்கி மணிவாங்கி அதுவும்பயனற்று
குறைசொல்லி கோள்சொல்லி தூக்கிவீசி
கொடும்வார்த்தை வாய்பேச குணநலனும்
கெட்டுப்போக நாள்போக நாள்போக
ஊரிலே உலகத்திலேஉன்பெயரையும் வீணாக்கி
உறவுகளென்று வந்தவரெல்லாம் வந்தவுடன்
விரைந்துஓடும் வழிபார்க்க வைத்துவிட்டாள்
எத்தனைகாலம்தான் பொறுப்பது என்பதல்லாமல்
இத்தனையும் வேடிக்கையாய்ப் பார்த்தாய்தான்
ஒருவார்த்தைசொன்னால் உன்னுள்ளே அச்சமாம்
மறுவார்த்தை சுடும்வார்த்தையாய் கேட்பாயே
மனையாளின் போக்குக்குத் தலையாட்டினாயே
உன்மனப்பாங்கு அவளறிந்ததால் நிலைமாறினாள்
உனைப்பெற்றவள் இன்றுவரை பொறுமைகாத்தாள்
அன்னையுலகுக்கே அன்புதெய்வம் அவளாம்
தன்மானத்தால் தலைநிமிர்ந்து வாழ்ந்தவளாம்
உன்மனையாள் அவளையும் துரத்திவைக்க
உனைப்பெற்ற பாவத்துக்குப் பலியானாயே
வழக்கம்போல வாய்மூடி பயனற்றதாய்
வாழ்ந்ததுபோதும் இதுவரை அண்ணே
பொறுத்ததுபோதும் பொங்கட்டும்அண்ணே
பேருபோனதெல்லாம் போகட்டும் அண்ணே
உன்மனசாட்சிநான் சொல்வேன் கேள்அண்ணே
உன்போன்றோருக்கென்றே வந்தசொல் அண்ணே
தமிழில் வரமாய் தந்தசொல்அண்ணே
தமிழ்தந்த அவ்வைவாயால் தரணிக்கேஅண்ணே
ஓராயிரம்முறை சொன்னசொல் அண்ணே
கூறாமல் சன்னியாஸம்கொள் இனியே.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (திருக்குறள் -53)
மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.
தொடருவோம்