தெய்வத் திருமகள் – திரை விமர்சனம்

6

ப்ரியாகணேஷ்

தமிழ் சினிமாவில் அபூர்வமாய் மீண்டும் ஒரு முயற்சி. குறிஞ்சி மலர் போல அதிசயமாகப் பூத்தவள் தான் இந்த தெய்வத் திருமகள்.

விக்ரம் ஐந்து வயது சிறுவனின் மன நிலையில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்போடு மட்டும் போனால் அது தவறு. இது மூளை வளர்ச்சி குன்றிய தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையே இருக்கும் பாசப் போராட்டம்.

விக்ரம் இப் படத்தில் கிருஷ்ணாவாகவே வாழ்ந்து இருக்கிறார்.ஆரம்ப காட்சிகளிலேயே தன்னைப் பற்றியும் தன்னுடைய இருப்பிடம் பற்றியும் விவரிக்கும் போதே விக்ரம் மக்கள் மனதை அள்ளி விடுகிறார்.திக்கித் திணறி என் பேரு கிருஷ்ணா .. சாக்லேட் பாக்டரி .. மரம் ..நிலா என அடுக்கும் போது நம்மை அறியாமலேயே கண்கள் குளம் ஆகிறது. சேய் பறவைகளை பூனையிடம் இருந்து காப்பாற்றி கூட்டில் விடும் லாவகம், கட்டை விரலில் மிதப்பது போல நடக்கும் நடை, மழலை மொழி ,கள்ளம் கபடமற்ற குழந்தையின் சிரிப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம் . பானுவின் மரணச் செய்தியை கேட்கும் போது துளியும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு செய்தியாய்
ஏற்றுக் கொள்ளும் அந்த மன நிலை மூளை குன்றிய மனிதர்களின் மிக அற்புதமான பிரதிபலிப்பு. இந்த இடத்தில் நம்மைப் போன்ற சாதாரண-சாமானிய மக்களை பொறாமைப் படச் செய்யும் நடிப்பு. ஒரு மரணத்தை – மூளைக் குறைபாடு இல்லை எனச் சொல்லிக் கொள்ளும் நாம் எப்படி எடுத்துக் கொள்வோம்?

“கிருஷ்ணா குழந்தை அழுவுது என்ன பண்ணறே ?” என பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்கும் போது “என்ன பண்ணனும் ?” என விக்ரம் அப்பாவியாய்க் கேட்பது.. கவிதை!

பொதுவாக மன வளர்ச்சி குன்றியவர்களைப் பற்றிய சினிமா ஏன்றால் அது கத்தி மேல் நடப்பது போன்றது. வியாபார நோக்கோடு படத்தில் எங்காவது பாலியல் சம்பந்தப்பட்ட  காட்சிகளை டைரக்டர் புகுத்துவது  வழக்கம்.  கமலின் சிப்பிக்குள் முத்து, வசந்த்தின் நீ பாதி நான் பாதி போன்ற படங்கள் நல்ல எடுத்துக்காட்டுகள். ஆனால், இப் படத்தின் டைரக்டர் விஜய் வியாபார யுக்திக்காக எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஜீவன் எந்த இடத்திலும் கெடக் கூடாது என கவனமாக காட்சிக்கு காட்சி கவனம் எடுத்துள்ளது பாராட்டுதலுக்குரியது. படத்தில் மன நோயாளிகளை கிண்டல் செய்ய பல இடங்களில் வாய்ப்பு இருந்தும்  மிக கவனமாக தவிர்த்துள்ளதும் வரவேற்கத் தகுந்ததாகும்.

படத்தில் பானுவின் புகைப் படத்தைக் கூடக் காட்டாமல் தவிர்த்தது  டைரக்டரின் சாமர்த்தியம். டைரக்டர் கே.பாலச்சந்தரை  நினைவு கூறச் செய்கிறார் விஜய். அதே போல் குழந்தைக்கு நிலா என  பெயர் சூட்டும் இடமும் ,குழந்தை முதன் முறையாக அப்பா என அழைக்கும் காட்சியும் மிக அற்புதம்

படத்தின் மையக் கருவே வித்தியாசமானது. அநேகமாய் இது இந்திய சினிமாவிற்கே புதிது.   தாய் இல்லாமல்  பெண் குழந்தையை வளர்க்க ஏற்படும் சிரமத்தில், அந்தக் குழந்தையைத் தன் மாமனாரிடம்  பறி கொடுத்து விட்டு அக் குழந்தையை மீட்கத் துடிக்கும்  மன வளர்ச்சி குன்றிய தந்தையின் கதாபாத்திரம் நமக்கு மிகவும் புதியது.

படத்தில் விக்ரமிற்கு அடுத்தபடியாக அனுஷ்காவை குறிப்பிடலாம்.  அனேகமாக இந்தப் படத்தில் தான் அனுஷ்காவிற்கு நடிக்கவே வாய்ப்புக் கிடைத்துள்ளது எனலாம். கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்திக் கொண்டார்.  வக்கீல் வேடத்தை கச்சிதமாகச் செய்துள்ளார். அடுத்து நாசர். கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு விருப்பமில்லா விட்டாலும்  தன் கட்சிக்காரருக்காக முகம் இறுகி பேச முடியாமல் தவிப்பைக் காட்டும் இடத்தில தான் ஒரு தேர்ந்த நடிகன் என மீண்டும் நிரூபித்துள்ளார்.

சந்தானம் இப் படத்தில் மிகவும் மெச்சூர்ட்டாக நடித்துள்ளார். ஆரம்பக் காட்சிகளில் புரோக்கர் வக்கீல் போல கேசை இப்படி தூக்கி இப்படி எடுப்பார்’ என ஆரம்பித்து ரவுடி தன்னை துரத்தும் போது ‘டி காபி’ ,  ‘கொல்லுங்க சார் அவனை’ என ஆவேசம் காட்டும் போது அசத்தி விட்டார்.

படம் முழுதும் சக மனிதர்களின் மனித நேயத்தை மிக அழகாக டைரக்டர் படம் பிடித்துள்ளார். இது மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளையோ பெரியவர்களையோ பராமரிக்கும் பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகப் பெரிய டானிக். இது போல குழந்தையைப் பெற்ற தாயோ அல்லது தந்தையோ வீட்டை விட்டு ஓடும் அவலம் இப்போது பல இடங்களில் நடக்கிறது. இது போன்ற படங்கள் கண்டிப்பாக இவர்களைத் திருத்தும். விக்ரம் 15  வருடம்  மன நோயாளிகள் பள்ளியில் படித்து ஓரளவுக்கு அடிப்படை அறிவை வளர்த்து வாழ்கையை தைரியமாய் எதிர் கொள்ளும் அழகு – அற்புதம்! விக்ரமை சாதாரண மன நோயாளி என ஒதுக்காமல் அவருடன் அன்புடனும்
அக்கரையுடனும் நடந்து கொள்ளும் சக மனிதர்கள் – வாழும் தெய்வங்கள்.

படத்தின் ஜீவன் கெடாமல் பார்த்துக் கொண்டது G V  பிரகாஷின் இசை. மனதை வருடும் மயில் இறகாய் மெல்லிய இசை படம் முழுவதும். ஆரிரோ, விழிகளில் ஒரு வானவில் மற்றும் வெண்ணிலவே – திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் பாடல்கள்.

படத்தில் குறைகள் என்று பார்த்தால் அந்த நான்கு மன நலம் குன்றிய கதாபத்திரங்கள். விக்ரமின் நண்பர்களாய் வலம் வரும் இந்த கதாபத்திரங்கள் சற்று செயற்கையாய் இருக்கிறது .

டைரக்டர் இவர்களுக்காக சற்று மெனக்கெட்டிருக்கலாம்.விக்ரம் தன் குழந்தையை  மாமனாரிடம் ஒப்படைக்கும் காட்சி தான் – மனதை நெகிழச் செய்த அற்புதமான காட்சி. படம் முழுக்க குழந்தையைப் பராமரிக்க விக்ரமால் முடியும் என நிரூபித்து அவருக்காக பல நல்ல உள்ளங்கள் போராடி குழந்தையை மீட்பது போல் காண்பித்து விட்டு கடைசியில் விக்ரமே தன்னால் குழந்தையை வளர்க்க முடியாது  என பின் வாங்கும் காட்சி நிச்சயமாக எதிர் மறை எண்ணங்களை மக்களின் மனதில் விதைக்கும். சும்மா படத்தின் ட்விஸ்ட்காக இந்த காட்சி என்றால் – சாரி விஜய் இந்த படத்தின் முழு நோக்கமும் இந்த காட்சியால் சிதைந்து விடுகிறது . குறைந்த பட்சம் அனுஷ்காவை விக்ரம் திருமணம் செய்து கொள்வதாக காட்டி இருக்கலாம் . இச் சிறு குறைகளை மறந்தால் இது அற்புதமான படம் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.